முன்னுரை
த.வி.வெங்கடேஸ்வரன்
அறிவுத் தேடல் பயண நூல்
"உலகிலேயே பெரிய எண் எது?” நமக்கு சளி இரும்மல் போன்ற தொற்றுநோய்
ஏற்படுவது போல "உலோகங்களுக்கு தோற்றுநோய்
பிடிக்குமா?” என நாம் யோசிக்காத கோணங்களில்
மாணவ மாணவியர் கேள்விகளை கேட்டுவிட "சும்மா
இரு நீ என்ன ஐன்ஸ்டீன் என்ற நினைப்பா" என்று
அவர்கள் வாயை மூடாமல்,
அந்த சமயதில்
தனக்கு இந்த கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்றாலும் தேடி கண்டுபிடிக்கும் தனது
அறிவு தேடலை தான் இந்த நூலில் பதிந்துள்ளார் ஆசிரியர் ச.அன்பழகன். வெளிநாடுகளுக்கும்
சுற்றுலா தளங்களுக்கும் சென்று பயண நூல் எழுதுவார்கள். இந்த நூல்
அறிவுத் தேடல் பயண நூல்.
தனக்கு
விடைதெரியாத கேள்வியை ஒரு வகுப்பில் மாணவி ஒருவர் கேட்டுவிட "யோசித்தால் ஒரு எளிமையான விடை
கண்டிப்பாக கிடைக்கும் .
மாணவர்களே
நீங்களும் சிந்தித்து வாருங்கள்,
நானும் நல்லதொரு
விடையோடு வருகிறேன்,
என்றபடி அன்றைய
வகுப்பை முடித்து வெளியே வந்தேன்” என்கிறார். இதுதானே அறிவியல் ஆசிரியர்கள் கை க்கொள்ளவேண்டிய
போக்கு. இறுதியில்
மாணவ மாணவியரும் விடை தேடி வர, அந்த விடையை மேலும் மெருகூட்டி அவர்களின் சந்தேகம்
போக்கும் படி செழுமையூட்டி
செய்து காண்பிக்கும் ச. அன்பழகன், நமக்கெல்லாம் முன்மாதிரி. இந்த நூலை படிக்கும்போது நாமும்
அவருடன் அறிவுத்தேடல் உலா சென்று வருகிற உணர்வு ஏற்படுகிறது.
“பதிமூன்று" என்ற எண்ணை துரதிர்ஷ்ட எண்ணாக
நம்மில் பலரும் கருதுகின்றார்.
"எண்கள்
என்பதே ஒரு தொடர் வரிசை தானே !
எந்த ஒரு
எண்ணையும் விலக்கி வைத்துவிட்டு நாம் கணக்கு போட முடியாது .அந்த வகையில் அணைத்து எண்களுமே மிக
முக்கியம் .இதில் உயர்வு தாழ்வு கிடையாது" எனக்கூறும் அன்பழகனின்
வார்த்தைகள் நமக்கு அறிவியல் பார்வையை தெளிவாக புகட்டுகிறது.
"குழல்விளக்கு குமரேசன்", அதாவது 'டியூப்லைட்' குமரேசன்
கதை அற்புதம் என்று தான் கூறவேண்டும். பொதுவே ஒரு
விஷயத்தை புரிந்து கொள்ள கூடுதல் நேரம் எடுக்கும் மாணவ மாணவியரை 'டியூப்லைட்' என கேலி
செய்வது வழக்கம் தான். ஆனால் அவர்களில் பலர் , மனப்பாடம் செய்வதைவிட ஒரு செய்தியை
ஆழமாக புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்
என்பதை இந்த கதை தெளிவாக தெரிவிக்கிறது. மேலும் நமது கல்வி
என்பது பள்ளி அறைகளில் மட்டுமல்ல "குழல்விளக்கு சரிசெய்யும் கடையில்
பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞரும்" கல்வி போதிக்க
முடியும் என்பதை அற்புதமாக விளக்குகிறது இந்த கட்டுரை. பெடலை
முன்னே சுற்றினால் முன்னே முந்தும் சைக்கில் பெடலை பின்னே சுற்றினால் ஏன் பின்புறம்
செல்வதில்லை? ரொட்டி எப்படி பேக்கரியில் புஸ் என பெருத்து விரிகிறது? அதன் உயிரியல் விளக்கம் என்ன? இப்படி
சைக்கில் ரிப்பர் கடை, பேக்கரி போன்ற உள்ளூர் கடைகளில் நாம் கற்க வேண்டிய அறிவியல்
தொழில்நுட்ப செய்திகள் ஏராளம்.
‘மாடு வளர்ப்பது’ என்றால் என்னவென்று யாராவது சொல்லுங்கள்
என்றார். மாட்டுக்கு தவுடு, புண்ணாக்கு போட்டா
தானா வளர்ந்திடும் சார்! என்று எளிமையாக கருதுவதை விமர்சனம் செய்து மாடு வளர்பதிலும்
இருக்கும் அறிவியல் தொழில்நுட்பத்தை பேசும் அன்பழகன் போன்ற பலர் இன்று தேவை. தனது
பள்ளி நாட்களில் வாய்த்த கோவிந்தன் ஆசிரியர் போலவே இவரும் மாணவ மாணவியர்களுக்கு
உத்வேகம் தருவபவராக இருப்பார் என்பதில் ஐயமில்லை.
பூச்சியம் குறித்த கட்டுரையில் மாணவ மாணவியர்கள் கணித
வரலாற்று பயணத்தில் சென்று பூச்சியம் குறித்து பலவேறு வியப்பான தகவல்களை தேடிக்
கொண்டு வருகிறார்கள். இந்த அனுபவத்தை குறித்து “அறிவுத்தேடல் தொடங்கிவிட்டால்
விடுபட்ட நமது கணிதப் பாரம்பரியத்தின் சங்கிலி இணைக்கப்பட்டு புதிய பாரம்பரியம்
புதிய வேகத்தோடு தொடங்கி சாதனை படைக்கும் என்பதில் ஐயமில்லை"
என்று கூறும் அன்பழகன் பாரம்பரியம் என்பது போற்றி புகழ்ந்து பழங்கதைகள் பேசிக்
கொண்டிராமல் அறிவை பெருக்கி முன்னே செல்வது என்கிறார்.
"நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்!” என்று கதறியழுத நிலவழகன் தெரியுமா? அவன்
மட்டுமா பள்ளிகூடத்தை தொலைத்துவிட்டான்? நீங்களும் நானும்
கூடத்தான். தனது பள்ளி அனுபவங்களை அடிப்படையாக வைத்து மிக சிறந்த முறையில் இந்த நூலை எழுதியுள்ளார் ச. அன்பழகன். வாசிக்க
துவங்கினால் முடியும்வரை வாசிக்காமல் வைக்க முடியாது. ஈர்ர்க்கும்
நடை.
நடை மட்டும் இந்த நூலின் பலம் அல்ல. இதில்
உள்ள கருத்துக்களும் ஆழமானவை. அறிவூட்டுபவை. அணைத்து
ஆசிரியர்களும் மாணவ இயக்கங்களில் பணிபுரிபவர்களும் பெற்றோர்களும் சமூக மாற்றம் விழைவோரும் கட்டாயம் படிக்க வேண்டிய
புத்தகம். இந்த நூலுக்கு அணிந்துரை தர எனக்கு வாய்ப்பு தந்தது எனக்கு
பெருமை என்று தான் நான் கூறுவேன். ச. அன்பழகன் அவர்களுக்கு என் வணக்கங்களும் நன்றிகளும்.
அன்புடன்
த வி வெங்கடேஸ்வரன்
முதன்மை அறிவியலாளர்
விக்யான் பிரச்சார்
அறிவியல் தொழில்நுட்ப துறை
புது டெல்லி
Comments
Post a Comment