பள்ளியின் நூலகத்தில் மாணவர்களோடு சேர்ந்து நானும் தூசு படிந்த புத்தகங்களை துடைத்து வரிசையாக அடுக்கியபடி இருந்தோம். எனக்கு மாணவர்களை இப்படி நூலகத்தோடு சேர்த்து பார்ப்பதே ஆனந்தமாக இருக்கும்.அவர்கள் அடுக்கியபடியே புத்தகங்கள் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் பேசுவதைக் கேட்பது புல்லரிப்பாக இருக்கும். இதற்காகவே நானும் அவர்களோடு சேர்ந்து புத்தகங்களை வரிசையாக அடுக்குவேன்.
இடையிடையே என்னிடத்தில் ஏராளமான கேள்விகளைக் கேட்பார்கள். என்னால் முடிந்தவரை பதில் சொல்வேன்.அவர்களின் அறிவுத்தேடலை நினைத்து ஆனந்தம் கொள்வேன். ஒரு ஆசிரியருக்கு இதைவிட வேறு என்ன ஆனந்தம் இருக்க முடியும்?
நூலகத்தை இப்படி சுத்தப்படுத்தும் போதெல்லாம் சிலந்தி பூச்சிகளைப் பற்றி பேச்சு வரும்.“சார்! இந்த சிலந்தி பூச்சிக்கு எங்கயிருந்துதான் இந்த நூலெல்லாம் கிடைக்கும்” என்றெல்லாம் கேட்பார்கள்.
பூச்சிகளை வலையில் சிக்க வைக்கும் இந்த பூச்சிகளால் என்ன பயன் சார்!என்றான் ஒருவன்.
“வயல்களில் சிலந்தி வலைகட்டுனா அதனால் உழவர்களுக்கு நன்னையுண்டு. பயிர்களை அழிக்கக் கூடிய பூச்சிகள் எல்லாம் இந்த சிலந்தி வலையில் சிக்கினா வெளியே போகமுடியாது. இந்த சிலந்தி அந்த பூச்சிகளை
பிடித்து சாப்பிட்டுவிடும். இதனால் உழவனுக்கு நண்பனாக இந்த சிலந்தி பூச்சி விளங்குது.” என்றான் இன்னொரு மாணவன்.
சார்! வலையை எப்படி சார் அது கட்ட ஆரம்பிக்குது?
“அதன் உமிழ்நீரில் உள்ள பசைத்தன்னையால் சுவற்றில் ஒட்டவைத்து வலை பின்னும்” என்று சொன்னேன்.
“ அப்படியின்னா இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு எப்படி சார் போகும். அது இப்படி அப்படி அந்தரத்துல தாவும் போது விழுந்துவிடாதா? சரியான கேள்வியைக் கேட்டுவிட்டனர் மாணவர்கள். எனக்குதான் பதில் சொல்ல தெரியவில்லை.
“சரி இதற்கு பதிலை நீங்களே தேடுங்கள். இங்கு ‘ஈயும் சிலந்தியும்’ என்ற புத்தகம் இருக்குது தேடி படியுங்கள்” என்று சொல்லிவிட்டு நான் கிளம்மி அடுத்த வகுப்பிற்கு சென்றுவிட்டேன். சிறிது நேரம் கழித்து “ சார் எங்களால கண்டுபிடிக்க முடியல சார், ஆனால் நூலகத்தைச் சுத்தப்படுத்தி விட்டோம் சார்” என்று சாவியை என்னிடம் கொடுத்துவிட்டு மாணவர்கள் சென்று விட்டனர்.
வீட்டுக்கு வந்து ஓய்வெடுத்த பிறகு எனது நூலகத்தை திறந்து பார்த்தேன். “ஈயும் சிலந்தியும்” என்ற புத்தகத்தைத் தேடினேன். ஆனால் அது கிடைக்கவில்லை. அது போன்ற ஒரு சிறிய புத்தகம் ஒன்று தட்டுப்பட்டது. அதை எடுத்து மேலோட்டமாக புரட்டத் தொடங்கினேன். ஒரு பக்கத்தில் சிலந்தி என்ற வார்த்தை கண்ணில்பட்டது. உடனே அந்த பக்கத்தை கூர்ந்து பார்த்தேன். அதில் “ சிலந்தி பூச்சி முதலிலே நூல் செய்து, அதை காற்றிலே விட்டுவிடும். அந்த நூல் காற்றின் செய்கையால் எதிர் புறத்திலே போய் ஒட்டிக்கொள்ளும். பூச்சி அதை அசைத்துப் பார்த்து பற்றியிருப்பது தெரிந்து கொண்டு அதன் பிறகுதான் நூல் மீது நடந்து செல்லும். அப்பால் வலை பின்னத் தொடங்கிவிடும்” என்று தெளிவாக போட்டிருந்தது. இந்த புத்தகம் அறிவியல் புத்தகமா என திருப்பிப்பார்த்தேன். மேலும் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது அறிவியல் புத்தகம் அல்ல.“தராசு” என்ற புத்தகம் பாரதியாரால் எழுதப்பட்டது என தெரிந்துகொண்டேன். பாரதியார் “தராசு” என்ற தலைப்பில் பல விடயங்களை நிறுத்துப்பார்த்து எதுசரி? எது தவறு? என சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறார். அதில் நிறுத்துப்பார்த்த ஒரு கதைதான், இந்த சிலந்தி பற்றியது.
ஒரு சிறிய விடயத்தையும் விட்டுவிடாமல் அவர் சிந்தனையில் பட்டதை எழுதி வைத்துள்ளது எவ்வளவு சிறப்பு என நினைத்துக்கொண்டேன். பாரதியை எண்ணி பெருமையாக இருந்தது. கூடவே நல்ல கேள்விகளை எழுப்பிய மாணவர்களை எண்ணியும் பெருமையாக இருந்தது. அறிவுத்தேடல் இனிக்கும்தானே! நாளை மாணவர்களுக்கு இதை அழகாக எடுத்துச் சொல்வேன் என்று நினைக்கும் போதே மனசெங்கும் பரவசம் தொற்றிக்கொண்டது.
நல்லதொரு தகவல் ..நன்றி
ReplyDelete