Skip to main content

மருத்துவர்களின் எண்-99

எனது நண்பர் குழந்தைகளுக்கான குறுந்தகடு ஒன்றை அன்பளிப்பாக கொடுத்திருந்தார்.அதை மறக்காமல் பள்ளிக்கூடத்திற்கு இன்று எடுத்து வந்தேன். நான் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆசிரியர். புதிய விடயங்களை தயங்காமல் எடுத்துச்சொல்வதில் விருப்பமுள்ளவன். ஆதலால் இன்று பாடங்கள் நடத்திய பிறகு, இந்த குறுந்தகட்டை மாணவர்களிடம் கொடுத்து கணினியில் போட்டு பார்க்குமாறு கூறினேன். அவர்களும் மகிழ்ச்சியாக கணினியின் முன் அமர்ந்தார்கள்.அவர்களில் ஒருத்தி கணினியை உயிர்பித்து குறுந்தகட்டை இயக்கினாள். அது எண்களை எளிய முறையில் சொல்லித்தரும் குறுந்தகடு. சற்று நேரத்தில் கணினியின் திரையில் ஒரு அழகிய குளம் காட்சியாக விரிந்தது. அதில் நிறைய தாமரை பூக்கள் பூக்காமல் மூடியிருந்தன. குளத்தைச்சுற்றி பாதுகாப்பாக மரங்கள் வளர்ந்திருந்தன. புல்தரைப் பளிச்சென்று சுத்தமாக இருந்தது. இந்த அழகிய குளக்கரையைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது.இந்த அழகிய காட்சியைத் தாண்டி படம் நகரவேயில்லை. பல முறை ‘மவுசால்’ கிளிக் செய்தும் பயனில்லை. மாணவர்கள் அனைவரும் என்னை நோக்கியே பார்த்தனர்.நான் சற்றே சிந்தித்தபடியே பூக்காமல் இருந்த தாமரை மொட்டுக்கள் மீது கவனம் செலுத்தி அதை ‘கிளிக்’ செய்தேன்.என்ன ஆச்சரியம், அந்த தாமரை மொட்டு அழகாய் மலர்ந்தது. அது மலரும்போதே அந்த பூவில் எண்கள் தோன்றின. எண்கள் தோன்றும் போதே அந்த எண்களின் சரியான உச்சரிப்பும் உடனே வந்தது.


தாமரை மொட்டுக்களை ‘கிளிக்’ செய்து அந்த பூவுக்குறிய எண்ணின் ஓசையைக் கேட்டவுடன் மாணவ மாணவிகள் பரவசமடைந்து துள்ளிக் குதித்தனர்.எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உடனே ஒவ்வொரு மாணவரையும் அழைத்து மொட்டுக்களைப் பூக்க வைத்தேன். எண்களின் ஓசை இன்பமாய் கேட்டுக்கொண்டே இருந்தது. அப்போது ஒரு மாணவர் ஒரு மொட்டைக் கிளிக் செய்த போது ‘நயன்டி நயன்’ என்ற உச்சரிப்பு சரியாக ஒலித்தது.ஆனால் அடுத்த மாணவர் வந்து முயற்சித்தபோது ‘நயன்டி நயன்’ என்ற உச்சரிப்பு மட்டுமே திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது. அடுத்த மொட்டுக்களை திறக்க முடியாமல் மாணவர்கள் தவித்தனர். நானும் முயற்சி செய்தும் திறக்காததால், திரும்ப திரும்ப கூறும் கணினியை நினைத்து மாணவர்கள் சிரித்தனர். கணினி கிளிப்பிள்ளையாகி விட்டது.மற்ற ஆசிரியர்களை துணைக்கழைத்தும் பயனில்லை.


உடனே எனக்கொரு யோசனைத் தோன்றியது. நமது பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள வீடுகளில் கணினி படித்த மாணவர்கள் நிச்சயம் இருப்பார்கள். அவர்களை சென்று அழைத்து வரச்சொன்னேன். சற்று நேரத்தில் மருத்துவம் பயிலும் ஒரு மாணவரை அழைத்து வந்தனர். அவர் உள்ளே வந்து கணினியைப் பார்த்ததும் நிலமையை புரிந்து கொண்டு உடனே சரி செய்தார். இருந்தாலும் இந்த கணினியை நினைத்து மகிழ்ந்தார். மருத்துவத்தில் இந்த ‘நயன்டி நயன்’ என்ற எண்ணும் உதவுகிறது என்பது தெறியுமா?என்றார். உடனே மாணவர்களையும் ஆசிரியர்களையும் அந்த மருத்துவ மாணவர் அழைத்து பேசலானார். “இந்த எண்ணை ‘டாக்டர் எண்’ என்றே அழைக்கிறோம்.வைரஸ் கிருமிகள் நுரையீரலைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துவதால் நிமோனியா போன்ற நோய்கள் ஏற்படும். இந்த நோய் வந்திருக்கிறதா என்பதை அறிவதற்கு ‘நயன்டி நயன்’(99) என்ற எண்ணின் உச்சரிப்பும் தேவைப்படுகிறது. இந்த எண்ணின் உச்சரிப்பை அதிகப்படுத்தினால் நுரையீரல் பகுதி கடினமானதாக மாறுகிறது. அப்போது ஏற்படும் அதிர்வை“ ஸ்டெதாஸ் கோப்” மூலம் தெளிவாக அறிந்து நோயின் பாதிப்பை கண்டுபிடித்து விடலாம். மிக முக்கியமான இந்த எளிய சோதனைக்கு இந்த எண் உதவுவதை அறிந்து நாம் மகிழ்ச்சியடையலாம்”என்று தனது பேச்சை முடித்தார்.


எண்களைப் பற்றி உச்சரிக்க மட்டும் தெரிந்த மாணவர்கள், இப்படி ஒரு உண்மையை தெரிந்து கொண்டது மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! என்று அந்த மருத்துவ மாணவரை நானும் மாணவர்களும் அனுப்பி வைத்தோம்.


மாணவ மாணவிகளே! எண்களில் ஆரம்பித்து மருத்துவத்தில் முடிந்துவிட்டதா? ‘தொடர்பில்லாதது எதுவுமே இல்லை’ என்று உங்களுக்கு தெரியும்தானே! இது தற்செயலாக நடந்தாலும் அவசியமானதாக மாறிவிட்டதல்லவா? மாணவர்களும் ஆமோதித்து மகிழ்ந்தனர். நானும் மாணவர்களிடமிருந்து விடை பெற்று அடுத்த வகுப்பிற்கு சென்றேன்.

Comments

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ்

  இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ் ---- புதுச்சேரி அன்பழகன்.          " டாக்டர் யெல்லபிரகட சுப்பாராவ்   என்ற இந்திய விஞ்ஞானி வாழ்ந்ததால் இன்று உலக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அவரைப்பற்றி நன்கு அறிந்த அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். மருத்துவ உலகிற்கு பல கண்டுபிடிப்புகளையும் பல முன்னெடுப்புகளையும் வழங்கிய அதிசய மனிதர் என்றும் அவர் போற்றப்படுகிறார்.. ஆனாலும் அவரைப்பற்றி   அதிகமாக நாம் கேள்விப்பட்டிருக்க   வாய்ப்பில்லை.         ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரம் என்ற ஊரில் ஒரு ஏழை தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் 1895-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள்   யெல்லபிரகட சுப்பாராவ்   பிறந்தார். தற்போதைய கோவிட்-19 தொற்று போல அன்றைக்கு பிளேக் என்ற தொற்று நோய் பரவியதால் இவரின் தந்தை காலமானார். தன் தந்தையின் இழப்பை சுப்பாராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார்.     தந்தையின் வருமானம் இல்லாமல் குடும்பம் தவித்...

உலகத்தைப் படைத்தது யாரு?

நா ளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள். அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள். “சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! அழகாக படைத்தது யாரு! அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடிகிட்டு அழகாக படைத்தது ...