Skip to main content

மருத்துவர்களின் எண்-99

எனது நண்பர் குழந்தைகளுக்கான குறுந்தகடு ஒன்றை அன்பளிப்பாக கொடுத்திருந்தார்.அதை மறக்காமல் பள்ளிக்கூடத்திற்கு இன்று எடுத்து வந்தேன். நான் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆசிரியர். புதிய விடயங்களை தயங்காமல் எடுத்துச்சொல்வதில் விருப்பமுள்ளவன். ஆதலால் இன்று பாடங்கள் நடத்திய பிறகு, இந்த குறுந்தகட்டை மாணவர்களிடம் கொடுத்து கணினியில் போட்டு பார்க்குமாறு கூறினேன். அவர்களும் மகிழ்ச்சியாக கணினியின் முன் அமர்ந்தார்கள்.அவர்களில் ஒருத்தி கணினியை உயிர்பித்து குறுந்தகட்டை இயக்கினாள். அது எண்களை எளிய முறையில் சொல்லித்தரும் குறுந்தகடு. சற்று நேரத்தில் கணினியின் திரையில் ஒரு அழகிய குளம் காட்சியாக விரிந்தது. அதில் நிறைய தாமரை பூக்கள் பூக்காமல் மூடியிருந்தன. குளத்தைச்சுற்றி பாதுகாப்பாக மரங்கள் வளர்ந்திருந்தன. புல்தரைப் பளிச்சென்று சுத்தமாக இருந்தது. இந்த அழகிய குளக்கரையைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது.இந்த அழகிய காட்சியைத் தாண்டி படம் நகரவேயில்லை. பல முறை ‘மவுசால்’ கிளிக் செய்தும் பயனில்லை. மாணவர்கள் அனைவரும் என்னை நோக்கியே பார்த்தனர்.நான் சற்றே சிந்தித்தபடியே பூக்காமல் இருந்த தாமரை மொட்டுக்கள் மீது கவனம் செலுத்தி அதை ‘கிளிக்’ செய்தேன்.என்ன ஆச்சரியம், அந்த தாமரை மொட்டு அழகாய் மலர்ந்தது. அது மலரும்போதே அந்த பூவில் எண்கள் தோன்றின. எண்கள் தோன்றும் போதே அந்த எண்களின் சரியான உச்சரிப்பும் உடனே வந்தது.


தாமரை மொட்டுக்களை ‘கிளிக்’ செய்து அந்த பூவுக்குறிய எண்ணின் ஓசையைக் கேட்டவுடன் மாணவ மாணவிகள் பரவசமடைந்து துள்ளிக் குதித்தனர்.எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உடனே ஒவ்வொரு மாணவரையும் அழைத்து மொட்டுக்களைப் பூக்க வைத்தேன். எண்களின் ஓசை இன்பமாய் கேட்டுக்கொண்டே இருந்தது. அப்போது ஒரு மாணவர் ஒரு மொட்டைக் கிளிக் செய்த போது ‘நயன்டி நயன்’ என்ற உச்சரிப்பு சரியாக ஒலித்தது.ஆனால் அடுத்த மாணவர் வந்து முயற்சித்தபோது ‘நயன்டி நயன்’ என்ற உச்சரிப்பு மட்டுமே திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது. அடுத்த மொட்டுக்களை திறக்க முடியாமல் மாணவர்கள் தவித்தனர். நானும் முயற்சி செய்தும் திறக்காததால், திரும்ப திரும்ப கூறும் கணினியை நினைத்து மாணவர்கள் சிரித்தனர். கணினி கிளிப்பிள்ளையாகி விட்டது.மற்ற ஆசிரியர்களை துணைக்கழைத்தும் பயனில்லை.


உடனே எனக்கொரு யோசனைத் தோன்றியது. நமது பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள வீடுகளில் கணினி படித்த மாணவர்கள் நிச்சயம் இருப்பார்கள். அவர்களை சென்று அழைத்து வரச்சொன்னேன். சற்று நேரத்தில் மருத்துவம் பயிலும் ஒரு மாணவரை அழைத்து வந்தனர். அவர் உள்ளே வந்து கணினியைப் பார்த்ததும் நிலமையை புரிந்து கொண்டு உடனே சரி செய்தார். இருந்தாலும் இந்த கணினியை நினைத்து மகிழ்ந்தார். மருத்துவத்தில் இந்த ‘நயன்டி நயன்’ என்ற எண்ணும் உதவுகிறது என்பது தெறியுமா?என்றார். உடனே மாணவர்களையும் ஆசிரியர்களையும் அந்த மருத்துவ மாணவர் அழைத்து பேசலானார். “இந்த எண்ணை ‘டாக்டர் எண்’ என்றே அழைக்கிறோம்.வைரஸ் கிருமிகள் நுரையீரலைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துவதால் நிமோனியா போன்ற நோய்கள் ஏற்படும். இந்த நோய் வந்திருக்கிறதா என்பதை அறிவதற்கு ‘நயன்டி நயன்’(99) என்ற எண்ணின் உச்சரிப்பும் தேவைப்படுகிறது. இந்த எண்ணின் உச்சரிப்பை அதிகப்படுத்தினால் நுரையீரல் பகுதி கடினமானதாக மாறுகிறது. அப்போது ஏற்படும் அதிர்வை“ ஸ்டெதாஸ் கோப்” மூலம் தெளிவாக அறிந்து நோயின் பாதிப்பை கண்டுபிடித்து விடலாம். மிக முக்கியமான இந்த எளிய சோதனைக்கு இந்த எண் உதவுவதை அறிந்து நாம் மகிழ்ச்சியடையலாம்”என்று தனது பேச்சை முடித்தார்.


எண்களைப் பற்றி உச்சரிக்க மட்டும் தெரிந்த மாணவர்கள், இப்படி ஒரு உண்மையை தெரிந்து கொண்டது மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! என்று அந்த மருத்துவ மாணவரை நானும் மாணவர்களும் அனுப்பி வைத்தோம்.


மாணவ மாணவிகளே! எண்களில் ஆரம்பித்து மருத்துவத்தில் முடிந்துவிட்டதா? ‘தொடர்பில்லாதது எதுவுமே இல்லை’ என்று உங்களுக்கு தெரியும்தானே! இது தற்செயலாக நடந்தாலும் அவசியமானதாக மாறிவிட்டதல்லவா? மாணவர்களும் ஆமோதித்து மகிழ்ந்தனர். நானும் மாணவர்களிடமிருந்து விடை பெற்று அடுத்த வகுப்பிற்கு சென்றேன்.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது....

மாணவர்கள் கொண்டாடிய சுதந்திர தினவிழா

சு தந்திரதின விழாவில் கொடியேற்றி துவக்கி வைப்பதற்காக, மாணவர் நல சங்கம் சார்பில் என்னை அழைத்திருந்தார்கள். முப்பதாண்டுகாலமாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவன் என்ற தகுதி ஒரு காரணமாக இருக்கலாம். மிக முக்கியமான இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக என்னை தயார் செய்துகொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்படும் ஓசைகேட்டு திறந்தேன். கையில் தேசியக்கொடியோடு மாணவர்கள் சீருடையில் வந்திருந்தனர். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. வாங்க! வாங்க! என்று பரவசத்தோடு உள்ளே அழைத்தேன். அனைவரும் ஒரே குரலில் “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! கொண்டாடுவோம்! என்றபடியே ஒரு வண்ண காகிதத்தை கையில் கொடுத்துவிட்டு அடுத்த வீட்டிற்கு சென்றுவிட்டனர். சுதந்திரமே மாணவர் உருவில் வீட்டு வந்தது போல இருந்தது. அவர்கள் கொடுத்துச்சென்ற காகிதத்தின் இரு பக்கத்திலும் பதினைந்து என்று எண்ணால் எழுதப்பட்டிருந்தது. மெல்ல பிரித்து பார்க்க அது எட்டாக மடிக்கப்பட்டிருந்தது. இது சுதந்திரதினத்தை குறிக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. காகிதத்தின் உள்ளே “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! வறுமையற்ற வளமான ஓர் இந்தியாவை உருவாக்குவோம்! ” எ...