தண்ணீரைத் தேடி….
பள்ளியின் நூலகத்தில் தண்ணீர் சம்மந்தமான நூல்களைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் அந்த மாணவன் வணக்கம் சொல்லியபடியே , புத்தகம் ஏதாவது கிடைத்ததா சார்! என் ஆவலோடுக் கேட்டான். வா சேர்ந்து தேடுவோம் நிச்சயம் கிடைக்கும் என்றேன். உலக தண்ணீர் தினத்திற்கான கட்டுரைப் போட்டியில் நிச்சயம் நான் வெற்றி பெறனும் சார்! என்றான். நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்! என வாழ்த்தினேன். ஆனால் இதற்காக நாம் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்.! என்ற படியே புத்தகங்களைத் தேடினேன்.
தேடித்தேடி நாங்கள் களைத்துப் போனோம். தண்ணீர் சம்மந்தமான அறிவியல் விளக்கங்கள் உள்ள புத்தகங்களே அதிகம் இருந்தன. இன்றைக்கு இதைவிடவும் வேறு சிந்தனை தேவை இருப்பதாக எனக்கு பட்டது. இதற்கான விடை நூலகத்தில் மட்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல குறையத்தொடங்கியது. இதுவரை தேடிய நூல்களே போதும், “வா! சற்றே வெளியே சென்று வருவோம்” என அந்த மாணவனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன்.
“சுத்தமான தண்ணீர் அருந்த வேண்டுமென விரும்புகிற நாம், தண்ணீரை மதித்து போற்றி பாதுகாக்க துணிந்திருக்கிறோமா? என்பது கேள்விக்குறிதான் சார்!” என அந்த மாணவன் ஓர் அற்புதமான கேள்வியை என் முன் வைத்தான். எனக்கு ஏதோ பொறி தட்டியது போல் இருந்தது. உடனே எனக்கு ஒரு யோசனை தோன்றியது. இனி நாம் செய்ய வேண்டியதெல்லம் ஒன்றே ஒன்றுதான், நாம் அருகில் உள்ள கிராமத்திற்கு செல்வோம். அங்குள்ள நீர் நிலைகளைப் பற்றி தகவல்களைச் சேகரிக்கலாம் என்றேன். அவனும் சரி என்று தலையை ஆட்டினான்.
மறுநாள் நானும் அந்த மாணவனும் உற்சாகத்தோடு ஒரு கிராமத்திற்கு சென்றோம். குளங்களைத் தேடி நடந்தோம். சிறிதளவே தண்ணீர் இருந்த ஒரு குளம் எங்கள் கண்ணில் பட்டது. ஒரு பெரியவர் மீன் பிடிப்பதற்காக தூண்டிலைப் போட்டு காத்திருந்தார். அவரிடம் மெல்ல பேச்சு கொடுத்தோம். ஊரில் உள்ள குளங்களைப் பற்றி கேட்டோம். அவர் எங்களை கூர்ந்து கவனித்த படியே இருந்தார். சற்றே யோசித்துவிட்டு, நம்பிக்கை வந்தவராய் குளத்தைப் பற்றி கதை ஒன்றை சொல்லத் தொடங்கினார்.
நான் இப்பொழுது மீன் பிடிக்கிற இந்த குளம் முன்பெல்லாம் எப்பொழுதும் நிரம்பியே இருக்கும். இது வற்றிப் போனதாய் வரலாறே கிடையாது. இந்த குளத்திற்கு ஒரு கதை இருக்கிறது. இந்த குளக்கரையின் கிழக்கு பகுதியில் ஒரு சிலை இருப்பது தெரிகிறதா? என்றார். நாங்கள் ‘ஆம்‘ என்ற படியே கதையைக் கேட்க தயாரானோம். அந்த சிலை ஒரு பெண் தெய்வம். அந்த பெண் தெய்வத்தின் கணவன், இந்த குளத்தில் குதித்து பாதாளம் சென்றுள்ளான். அங்கே உள்ள பெரிய கடவுளான சிவனை சந்தித்து வரம் வாங்கி வர சென்றுள்ளான். கதைப்படி இன்றுவரை அவன் திரும்பவில்லை. ஆனால் பாதாளம் சென்ற கணவன் திரும்ப வருவான் என்ற நம்பிக்கையோடு, இந்த பெண் தெய்வம் குளக்கரையில் காத்திருக்கிறாள்! என்றார்.
இப்படி ஒரு கதையை சொன்னதும் எங்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அது மட்டுமல்ல பாதாளம் சென்றுள்ளவன் பிராமண வகுப்பை சார்ந்தவனாம். கிராம மக்களின் நம்பிக்கைப் படி பிராமணர்களைத்தொட்டால் தீட்டு எனும் போது, ஒரு பிராமணர் குளத்தின் உள்ளே இருக்கிறார் என்றால், அந்த குளத்தை அசுத்தப்படுத்த மனம் வருமா? அல்லது அந்த குளத்தை அசுத்தபடுத்தினால் கடுமையான தண்டனைக் கிடைக்கலாம். இந்த கதை முந்தைய இன்றைய காலகட்டத்தை பிரதிபலித்தாலும் நீர்நிலைகளைப் பாதுகாப்பது மிக முக்கியமானதொரு கடமையாக இருந்துள்ளதை நாம் அறியமுடிகிறது.
மேலும் அந்த பெரியவர் குளங்களைப் பற்றிக் கூறத்தொடங்கினார். இந்த கிராமத்தில் உள்ள பத்து குளங்களின் ஓரத்திலும் ஏதாவது ஒரு பெண் தெய்வம் பாதுகாப்பாக இருக்கும். அதோடு மட்டுமல்ல ,ஊர் திருவிழாவின் போது இந்த தெய்வங்களுக்கு பூஜை செய்யப்பட்டு மரியாதை செய்யப்படும். ஆனால் இன்றைக்கு இந்த வழக்கம் தொடர்ந்தாலும் குளங்களில் நீர் வற்றுவதை தடுக்க முடியவில்லை. இந்த பத்து குளங்களில் இன்று ஒன்றில் மட்டுமே சிறிதளவு நீர் இருக்கிறது. மற்ற குளங்களெல்லாம் வீட்டுமனைகளாக விளைநிலங்களாக மாற்றப்பட்டு விட்டது. இதைப்போல ஓர் அற்புதமான செங்கழுநீர் ஓடை தற்போது பாதையாக மாற்றப்பட்டுவிட்டது. இது ஒருகாலத்தில் ஏரி நீர் வெளியேறும் வாய்க்காலாக இருந்துள்ளது. இன்றைக்கு இந்த பெரிய ஏரியின் உட்பகுதி விளை நிலங்களாக மாற்றப்பட்டு விட்டது. காலமாற்றத்தில் தற்போது இந்த ஏரி மீன் பிடிக்கும் சின்ன குட்டையாக காட்சி அளிக்கிறது” என கண்கலங்க சொன்னார்.
நாங்களும் மனக்கலக்கத்தோடு கேட்டுக்கொண்டிருந்தோம். “ ஆழ்குழாய் கிணறு மூலம் நீரை உறிஞ்சி எடுத்ததன் மூலம் ஏரியின் முக்கியத்துவம் குறைந்து போனது.ஆனால் கொடுமை என்னவென்றால் ஆழ்குழாய் கிணறுகளூம் வற்றிப்போய்விட்டது மட்டுமல்ல உப்பு நீராகவும் மாறிவிட்டது. இன்றைக்கு குடிநீருக்கும் தட்டுபாடுவந்து மக்கள் குடங்களோடு அலைவதை பார்க்க முடிகிறது.” என எனது மாணவர் எடுத்துச் சொல்ல , அந்த பெரியவர் “உண்மைதாம்பா” என தலையசைத்தார்.
“மன்னர் காலத்திலிருந்து ஏரி பாசனம் மூலம் விவசாயம் செய்த மக்கள் தற்போது ஏரிகளையும் குளங்களையும் தொலைத்து விட்டு அனாதைகளாய் கிராமத்தை விட்டு வெளியேறி நகரங்களில் சுற்றித் திரிகிறார்கள்.” என் அந்த பெரியவர் மேலும் சொன்னது எங்களை கலங்க வைத்துவிட்டது.
எத்தனை பெரிய சோகம் நம்கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது புரியாமல் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது என்னுள் முள்ளாய் தைத்தது.
அந்த பெரியவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு திரும்பும் வழியில் ஒரு பெரிய ஏரி வறண்டு போய் கிடப்பதை பார்க்க நேர்ந்தது. மனசு தாங்காமல் மெல்ல அந்த ஏரியில் இறங்கினோம். ஏரி முழுவதும் பாளம் பாளமாய் வெடித்து கிடந்தது. நாம் கால் வைத்து நடக்க முடியாதபடி காய்ந்து வெடித்த மண் முள்ளாய் குத்தியது. ஆனாலும் அந்த வெடிப்பின் வழியே ஒரு புல்செடி தன் பசுமையை வெளிப்படுத்தியபடி அழகாய் துளிர் விட்டிருந்தது. இந்த வறண்ட ஏரியில் இந்த ‘புல்லின் இதழ்‘ எங்களுக்கு பெரும் அமைதியையும் ஆறுதலையும் தந்தது. அந்த ஏரிக்கு இன்னும் உயிர் இருப்பதாக எனக்கு பட்டது. மீண்டும் பறவைகள் சப்தத்தோடு தண்ணீர் நிரம்மி மதகு வழியே வழிந்தோடி வயலுக்கு பாயும் அந்த கற்பனை எங்கள் மனதில் எட்டிப்பார்த்தது.
என்ன சார்! மீண்டும் இப்படி நடக்குமென நினைக்கிறீர்களா? என்றான். நம்பிக்கை கொள்! வறண்ட ஏரியில் ஒரு சிறு புல்லால் பசுமையை தரமுடியுமென்றால் நம்மால் முடியாதா? என நான் எடுத்துச் சொன்னதும், நிச்சயம் முடியும் சார்! என நம்ப்க்கையோடு என் முன்னே நடந்தான்.
நாம் பார்த்த இந்த ஒரு கிராமத்தின் ஏரி, குளம், கிணறுகளெல்லாம் வற்றிப் போய் கிடக்கிறது என்றால், இந்தியா முழுவதும் இந்த நிலைதானே! என எண்ணும் போது நெஞ்சமெல்லம் பதறுகிறது. “நீர் ஆதாரம் உயிர் ஆதாரம்” என்ற எண்ணம் அனைவருக்கும் வரவும் மாற்று திட்டங்களை துணிந்து செய்யவும் நாம் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும், என்ற எண்ணம் என் மனதில் தோன்றி நிலைப்பெற்றது.
இந்த அடிப்படையை முன்வைத்து கட்டுரையை எழுதுமாறு அந்த மாணவனிடம் சொன்னேன். அவனும் ஒரு நல்ல மாற்றம் வர வேண்டுமென ஆவேசத்தோடு எழுதிமுடித்து என்னிடத்தில் காட்டினான். உனது கட்டுரை மட்டுமல்ல இந்த கட்டுரையின் சிந்தனையும் நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையோடு, உலக தண்ணீர் தினத்திற்கான கட்டுரைப் போட்டிக்கு அனுப்பி வைத்தோம்.
Comments
Post a Comment