Skip to main content

எது பெரிய எண்?

எது பெரிய எண்?

மூன்றாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் இரண்டு மாணவர்கள் ஒருவருக்கொருவர் தலையில் குட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். நான் சற்றே கூர்ந்து கவனித்தேன். அவர்களில் ஒரு மாணவன், "நான் இந்த காலாண்டுத் தேர்வுக்கு இருபது கேள்விக்கு பதில் படித்து வைத்துள்ளேன். இந்த இருபது கேள்வியும் கண்டிப்பாக வரும்" என்று சொல்ல , சகமாணவியோ, "அதெப்படி சரியா சொல்ற? அப்படியெல்லாம் வராது" என்று எதிர்வாதம் செய்தாள். உடனே "அப்படி வந்தால் உனக்கு நூறு குட்டு" என்றான் அந்த மாணவன். அவளோ " கண்டிப்பாக வராது" எனக்கூறி `உனக்கு ஆயிரம் கொட்டு` என்றாள். இப்படி இவர்கள் மாறி மாறி கூறிக் கொண்டே வந்தனர். இறுதியில் " இந்த உலகத்திலேயே எது பெரிய எண்ணோ அவ்வளவு குட்டு" என்றான். அவளோ, ஆப்படி என்றால் அது போல் பத்து மடங்கு உனக்கு குட்டு என்றாள். இப்படியாக போய்க் கொண்டே இருந்தது.
சரி! சரி! `நமது ஆட்டத்தை நிறுத்துவோம்` என்று சொல்லி " உண்மையிலேயே உலகில் பெரிய எண் எது? என்று அவர்களுக்குள் கேட்டுக் கொண்டனர். பிறகு இருவரும் யோசித்தவாறே " நமது ஆசிரியரை கேட்போம்" என்று முடிவுக்கு வந்த போது விளையாட்டு நேரம் முடிந்து வகுப்பிற்கு திரும்பினர்.
வகுப்பு முடிந்தவுடன் என்னிடம் வந்தனர், சார்! சார்! எங்களுக்கு ஒரு சந்தேகம். நீங்க தான் பதில் சொல்லனும்" என்றனர். சரி சொல்லுங்கள் " என்றேன். உலகிலேயே பெரிய எண் எது? என்று கேட்டனர். எனக்கு உடனே பதில் சொல்ல தெரியவில்லை. ஆனாலும் `அந்த எண்ணிற்கு முடிவே இல்லை போய்க்கொண்டே இருக்கும்` என்று சொன்னேன். சரி சார்! வருகிறோம்! என்று சொன்னாலும், அவர்கள் முகத்தில் திருப்தி ஏற்படவில்லை என்பதை கவனித்தேன்.

நான் வீட்டுக்கு புறப்பட்டாலும் மாணவர்களின் கேள்விக்கு சரியான பதிலை சிந்தித்து கொண்டேயிருந்தேன். மாணவர்கள் சுதந்திரமாக விளையாடும் போது கணிதத்தின் உச்சத்திற்கே சென்று சிந்தித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த சிந்தனையோடு ஒரு புத்தகக்கடைக்கு சென்றேன். அங்கு ஒரு கணித புத்தகத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று படித்தேன். என்ன ஆச்சரியம்! உலகின் மிகப் பெரிய எண் "கூகோல்" என்றிருந்தது. அதாவது ஒன்றுக்கு பக்கத்தில் நூறு சைபர்கள் போட வேண்டும். இந்த எண்ணை படிக்க முடியாது. ஆனால் பத்தின் அடுக்கு நூறு என்று படிக்கலாம். இதைவிட பெரிய எண் கூகுலோ பிளக்ஸ் என அழைக்கிறார்கள். அதாவது ஒன்றுக்கு பக்கத்தில் நூறு கூகோல் சைபர் போட வேண்டும். என்ன தலை சுற்றுகிறதா? பரவாயில்லை கற்பனை செய்து பாருங்கள்.
நிற்க! எண்ணற்ற இணைய தளங்களை நாம் கணினியில் தேட வேண்டுமென்றால் அதற்கு `கூகுல் சர்ச்` உதவுகிறது அல்லவா? இப்போது புரிகிறதா? இணைய தளங்களை தேடுவதற்கு `கூகுல்` என்று பெயர் வைத்தது ஏனென்று.
என்ன! எங்கோ ஆரம்பித்து கணினியில் முடிந்து விட்டதா? உலகின் மிகப் பெரிய எண் இப்படியாக பல பெயர்களை நாளை பெற்றுக்கொண்டே செல்லலாம். ஆனால் அந்த எண்ணிற்கான மதிப்பை அளவிட முடியுமா?
மறுநாள் அந்த மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம் ஒருவாறு மேற்கண்ட பதிலை கூறினேன். அவர்கள் மிகவும் மகிழ்ந்த படியே வியப்போடு பேசிக்கொண்டு சென்றனர்.
வகுப்பறையில் நாம் கற்றுக் கொடுப்பதற்கும் மாணவர்கள் மிக சுதந்திரமாக விளையாடிக்கொண்டே கற்பதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு தானே!

Comments

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ்

  இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ் ---- புதுச்சேரி அன்பழகன்.          " டாக்டர் யெல்லபிரகட சுப்பாராவ்   என்ற இந்திய விஞ்ஞானி வாழ்ந்ததால் இன்று உலக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அவரைப்பற்றி நன்கு அறிந்த அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். மருத்துவ உலகிற்கு பல கண்டுபிடிப்புகளையும் பல முன்னெடுப்புகளையும் வழங்கிய அதிசய மனிதர் என்றும் அவர் போற்றப்படுகிறார்.. ஆனாலும் அவரைப்பற்றி   அதிகமாக நாம் கேள்விப்பட்டிருக்க   வாய்ப்பில்லை.         ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரம் என்ற ஊரில் ஒரு ஏழை தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் 1895-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள்   யெல்லபிரகட சுப்பாராவ்   பிறந்தார். தற்போதைய கோவிட்-19 தொற்று போல அன்றைக்கு பிளேக் என்ற தொற்று நோய் பரவியதால் இவரின் தந்தை காலமானார். தன் தந்தையின் இழப்பை சுப்பாராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார்.     தந்தையின் வருமானம் இல்லாமல் குடும்பம் தவித்...

உலகத்தைப் படைத்தது யாரு?

நா ளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள். அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள். “சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! அழகாக படைத்தது யாரு! அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடிகிட்டு அழகாக படைத்தது ...