எனது ஊர் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தேன். என்ன காரணமென்று தெரியவில்லை, பேருந்துவர அதிக நேரமாகுமென்று சக பயணிகள் பேசிக்கொண்டார்கள். அதுவரையில் என்ன செய்வது என்று யோசிக்கையில், யாரோ ஒருவர் பேசிக்கொண்டிருப்பது ஓலிப்பெருக்கியின் வழியாக என் காதுகளுக்கு எட்டியது. நான் கூர்ந்து அவர் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தேன்.
நல்ல தெளிவான குரல். வார்த்தைகள் தன்னம்பிக்கையோடு தைரியமாக வந்து விழுந்து கொண்டிருந்தன . அந்த இனிமையான குரலை கேட்டுகொண்டேயிருக்க வேண்டுமென ஆவல் பிறந்தது. அப்போதுதான் தெரிந்தது அது ஒரு அரசியல் கட்சியின் கூட்டமென்று. அவர் சொன்ன செய்தி எனக்கு வியப்பாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. எங்கள் பகுதியில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தால், இலவசமாக வேட்டி, சேலை, சர்க்கரை, குடை, நோட்டுபுத்தகம், ஊன்முற்றோர்க்கான மிதிவண்டி, வீட்டு உபயோகப்பொருட்கள் போன்றவைகளை கட்சியின் தலைவர்கள் தன்சொந்த செலவில் கட்சியின் அடிமட்ட ஊழியர்களுக்கும் , அவர்கள் சார்ந்த ஆதரவாளர்களுக்கும் வாரி வழங்குவார்கள். இங்கு என்காதில் விழும் செய்தி என்ன வென்றால், கட்சியின் அடிமட்ட ஊழியர் ஒருவர் தனது குடும்பத்தின் மூலம் வந்த சொத்தின் ஒருபகுதியை , அதாவது ஒரு வீட்டு மனையை கட்சிக்காக வழங்கியதை அந்த கட்சியின் தலைவர் பாராட்டி பேசிக்கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல இது போன்று முன்பு கட்சியின் வளர்சிக்காக நிதி வழங்கிய சாதாரண ஊழியர்களையும், தலைவர்களையும் சுட்டிகாட்டி பேசிக்கொண்டிருந்தார். எனக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை, மெல்ல பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றுவிட்டேன். அது ஒரு பொதுவுடைமை கட்சியின் கூட்டமென்று தெரிந்துகொண்டேன். பக்கத்திலிருந்த தோழர் ஒருவருடன் மெல்ல பேச்சு கொடுத்தேன். மற்ற கட்சியில் உள்ள தலைவர்கள் தொண்டர்களுக்கு பணம் வழங்குவார்கள், இங்கு தொண்டராக இருக்கும் நீங்கள் கட்சிக்கு பணம் தருகிறீர்களே! என்று கேட்டேன். எங்கள் கட்சியின் தலைவர்கள் பணம் கொடுப்பதில்லை அதற்கு மாறாக போராட கற்று தருகிறார்கள். அதற்கான அறிவையும் சரியான வழியையும் போதிக்கிறார்கள். அது மட்டுமே தொழிலார்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டுவரும் என்பதை அனுபவத்தின் அடிப்படையில் புரிந்து செயல் செயல்படுகிறோம். சுருக்கமாக சொல்வதென்றால், அவர்கள் மீனைத்தருகிறார்கள்! நாங்களோ தூண்டிலைத் தருகிறோம் !என்று அந்த தோழர் விளக்கினார்.
Comments
Post a Comment