நீயோ வாழ்வை
ஆய்ந்தாய்ந்து
கவிச்சுவைபட
முடிவுரை எழுதிவிட்டாய்!
நாங்களோ!
விளக்கவுரை எழுதிக்கொண்டே இருக்கிறோம்
இன்னும் முடியவே இல்லை!
உன் குறள் சுளையைச்
சுவைக்கச் சுவைக்க
சுவைகூடும் அற்புதம்!
இது இருவரி கவிதையென
சொல்லமுடியவில்லை!
உலகின் இருகரை
இணைத்தக் கவிதை!
இது உன் தத்துவரயில் பாய்ந்தோட
நீ போட்ட இருப்புப்பாதை!
உன் கவிஎஞ்சினை
பிடிக்க யாருமில்லை!
உன்னைப்போல் ஓடிப்பார்க்கிறோம்!
இல்லையில்லை,
உன் பின்னால்
ஓடிக்கொண்டிருக்கிறோம்!
உலகக்கவியே!
உழவன்தான் உலகத்தின்
அச்சாணி என்றாய்!
இன்றோ,
அவனை அலட்சியப்படுத்தியே
ஆட்சி நடக்கிறது!
பயிரிட்ட நிலத்திற்கு
தன் உயிரிட்டு சாகிறான்
தினம்! தினம்!
எரு இன்றி
பயிர்செய்ய வழி சொன்னாய்!
கடனின்றி பயிர் செய்ய
வழி சொன்னாயா?
சோம்பி இருப்பவரை
நில மங்கை நகுவாள் என்றாய்!
இன்றும் நகுகிறாள்,
ஒதுங்கி இருக்கும் அரசைக் கண்டு!
வறுமைக்கு வறுமையே
கேடு என்றாய்!
இன்றோ!
வறுமையை வளர்க்கும் வறுமையே
வளர்ச்சி என்கிறார்கள்!
மனம் வருந்தித் தேடாமல்
வளம் தருவதே
சிறந்த நாடு என்றாய்!
இன்றோ,
வருந்தித் தேடுவதே
வாழ்க்கையாகிவிட்டது!
இது நம்நாடுதான்!
சிறந்த நாடாக வேண்டாமா?
அடிமை நாடாக மாற்றாமல்
அய்யன் வள்ளுவன்
நாடாக மாற்றுங்கள்!
Comments
Post a Comment