Skip to main content

தத்துவம் என்பது......?

 

 தத்துவம் என்பது......     நகைச்சுவை துணுக்கா..  வாழ்வின் தெறிப்பா... எது தத்துவம்?

 

                                          ன்று  வீட்டுப்பாட நோட்டுகளை ஆசிரியர் திருத்திக்கொண்டிருந்தார். எல்லோரும் ஒரே பதிலை எழுதி இருந்தாலும் கையெழுத்துகளின் அசைவுகளில் அவர் மனம் சென்றது. சில மாணவ மாணவியர்களின் கையெழுத்தைப் பார்க்கும் போது  மிகவும்  விரும்பி ரசித்தார். அச்சு பிரதிகளைப் பார்க்கும் போது அவருக்கு  தோன்றுவதில்லை.


அந்த நினைப்பில் அழ்ந்தபடியே அடுத்த நோட்டை எடுத்தார் ஆசிரியர். அது நமது பள்ளிக்கூட நோட்டுப்போல இல்லை. எந்த மாணவனோ இந்த நோட்டை  அவசரத்தில் மாற்றி வைத்திருக்க வேண்டும். சரி இந்த மாணவனின் கையெழுத்து எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்று நோட்டை திருப்பினார். கையெழுத்து அவரை ஈர்க்கவில்லை. ஆனால் ஜே .கே தத்துவங்கள் என்று ஒரு பக்கத்தில் எழுதி இருந்தது. அவருக்கு   இது ஆச்சரியமாக இருந்தது. அதுவும் தத்துவமா! என்று ஆவலோடு படிக்க ஆரம்பித்தார் ஆசிரியர்.

அதில் ஜே .கே என்ற ஆசிரியர் பாடம் நடத்தும் போது திரும்ப திரும்ப சொல்லும்  அறிவுரைகளை எழுதி அதற்கு கீழே அந்த அறிவுரைகளை கிண்டல் செய்து எழுதி இருந்தது. படிக்க படிக்க சுவராசிகமாக  இருந்தது. மாணவர்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் என்று நினைத்தபடியே அடுத்த பக்கத்தைத் திருப்பினார் . அதில கதாநாயகர்கள் சொல்லும் சில பஞ்ச் டயலாக்கொல்லாம் எழுதி இருந்தார்கள்.அடுத்த பக்கத்தில் கடி ஜோக்குகளை தத்துவம் போல எழுதி இருந்தது. அடுத்த அடுத்த பக்கங்களில் சினிமா வசனங்கள்  துணுக்குகள் பாடல்கள் என்று போய்க்கொண்டிருந்தது .

நோட்டை மூடிவைத்துவிட்டு அடுத்த நோட்டை எடுத்தாலும் தத்துவம் குறித்த பார்வை மாணவர்கள் மத்தியில் என்னவாக  இருக்கிறது என்ற சிந்தனையே ஆசிரியர் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இந்த நினைப்போடு நோட்டுகளைத் திருத்தி விட்டு அடுத்த வகுப்பிற்கு சென்றார் ஆசிரியர்.

அன்று ஆசிரியர் வீடு வந்து சேர்ந்தாலும் தத்துவம் குறித்த மாணவர்களின் பார்வை பற்றிய சிந்தனையே அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போனது.

பள்ளிக்கூட பாடத்தில் தத்துவம் என்ற வார்த்தை மருந்துக்கூட பார்வையில் படுவதில்லை. மொழி, அறிவியல், சமூக அறிவியல் என்று பாடங்கள் படித்தாலும் , பொதுவான ஒரு அறிவியல் பார்வையாவது நம் மாணவர்களுக்கு நாம் முன்வைத்ததில்லை. மிகக்கடினமான கணக்குகள் வேதியியல் மற்றும் இயற்பியல் பாடமெல்லாம் நம்மால் நடத்த முடியும்போது சமூகம் குறித்த ஒரு அறிவியல் பார்வையை நம்மால் எளிதாக முன்வைக்கமுடியுமே என்ற சிந்தனை வந்து போனது.

கல்லூரி சென்று தத்துவப்பிரிவை எடுக்கும் மாணவர்கள் மட்டுமே தத்துவம் படிப்பார்கள் என்றால் மற்ற மாணவ மாணவியர்களின் அறிவியல் பார்வை என்னவாக இருக்கும்? ஏதோ சமூகம் போகிற போக்கில் வாழ்க்கை நகர்கிறதா என்ற கேள்வி ஆசிரியருக்கு எழுந்தது.

ஏங்க டீ வைச்சிருக்கேன்! சூடா இருக்கும்போதே சாப்பிடுங்க என்று மனைவி வந்து சொன்னபோதுதான் நிதானத்திற்கு வந்தார் ஆசிரியர்..

சூடாக டீயை சுவைத்தபோது இதமாக இருந்தது. மூச்சு சுகமாக ஏறி இறங்கியது. சரி தத்துவம் குறித்து மாணவ மாணவியரிடம் நேரம் கிடைக்கும்போது பேசி பார்க்கலாம் என்ற யோசனை வந்து போனது. தெளிவிற்கு வந்தவனாய் அடுத்த வேலையைப் பார்க்க போனார்.

ஒருநாள் மாணவ மாணவியரிடம் தத்துவம் குறித்து உரையாட நேரம் கிடைத்தது. தத்துவம் என்றால் என்ன? என்று உரையாடலை ஆரம்பித்து வைத்தார் ஆசிரியர்.

தத்துவமா! அப்படி ஒரு பாடமே இல்லையே சார்! என்று உடனே பதில் வந்தது.

“உங்களுக்கு புரிந்ததை தெரிந்ததை சொன்னா போதும் !” சரியான புரிதலை நோக்கி  நாம் இணைந்தே பயணிப்போம்!என்றார் ஆசிரியர்.

சற்று நேரம் மாணவ மாணவியர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

என்ன பேசுவது என்று கையாலே சைகை செய்துகொண்டனர்.

“எல்லாம் நம்ம தலைவிதிபடிதான் நடக்கும்! என்று எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க சார் ! “என்றான் ஒரு மாணவன்.

எல்லாம் தலைவிதிபடிதான் நடக்குமுன்னா,  உங்க அம்மா ஏண்டா உன்ன படிக்க பள்ளிக்கூடம் அனுப்புனாங்க!  என்று எதிர் கேட்டாள் ஒரு மாணவி.

சபாஷ்! இதைத்தான்  எதிர்பார்த்தேன்! விருப்பு வெறுப்பு இல்லாமல் தொடர்ந்து பேசுங்கள் ! என்று  மாணவர்களை உற்சாகப்படுத்தினார் ஆசிரியர்.

எங்க தாத்தாவிற்கு சந்தோழம் வந்துவிட்டால் காதல் பாட்டெல்லாம் பாடுவார் சார்! அதுபோல சோகம் வந்துவிட்டால் ,”போனால் போகட்டும் போடா!” என்று தத்துவபாட்டெல்லாம் பாட அரம்பிச்சிடுவார் சார்! என்றான் இன்னொரு மாணவன்.

நமது வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும் போது ,சே! என்ன வாழ்க்கை இது ! என்று  நாம் சோர்ந்து போவதுண்டு! அப்ப மனசு லேசா வலிக்க ஆரம்பிக்கும். அந்த வலிக்கு இதமா பதமா ஒத்தடம் கொடுக்கிற மாதிரி நல்ல இசையோடு பாடல்கள் நம் காதுகளில் விழும்போது பெரிய ஆறுதலாக இருக்கும். இதெல்லாம் அந்த நேரத்திற்கு மட்டுமே ஆறுதலைத் தரும். அதில தவறு இல்லை. சில பேருக்கு அது மிகப்பெரிய ஆறுதலாகக்கூட அமைந்துவிடும்.

ஆனால் நான் சொல்ல வருவது என்ன வென்றால் இதுவெல்லாம் தத்துவமாகிவிடாது என்றார் ஆசிரியர்.

அப்பிடின்னா வேற எது தத்துவமாம்?! என்று கிண்டலாக ஒரு மாணவன் வேகமாக கேட்டான்.

உடனே ஆசிரியரும்   எழுந்து கொண்டார்! அவசரப்பட வேண்டாம்! அமருங்கள். இன்னும் நாம தத்துவப்  பாடத்தை ஆரம்பிக்கவே இல்லை! சரி உங்களுக்கு ஒரு வரி தருகிறேன் அதிலிருந்து தொடங்குங்கள்! என்று கரும்பலகையில் ஒரு வரியை எழுதினார் ஆசிரியர்.

தத்துவம் என்றால் உண்மை! அதாவது உண்மையை அறிவதே தத்துவம்!

இப்ப இந்த வழியில் உங்கள் சிந்தனையை தொடருங்கள் என்றார் ஆசிரியர்.

எந்த உண்மையை அறிவது சார்? ஒண்ணுமே புரியலை ! என்றாள் ஒரு மாணவி

இந்த இயற்கையின் இந்த பிரபஞ்சத்தின் உண்மை விதிகளை அறிய முற்படுவது என்று வைத்துக்கொள் ! என்றார் ஆசிரியர்.

அதுதான் நாம இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று படிக்கிறோமே சார்! என்றான் ஒரு மாணவன்.

வெரிகுட் ! உங்கள் சிந்தனை  சரியான வழியில்தான் செல்கிறது! தொடருங்கள் என்றார் ஆசிரியர்.

ஒரு மாணவி சற்று தயக்த்துடன் எழுந்தாள். சார்! நான் ஒரு படம் வரைந்திருக்கிறேன் அது சரியா என்று பாருங்கள் என்றாள்.

ஆசிரியர் அந்த வரைபடத்தை ஆவலாய் பார்த்தார். வியந்து போனார். மாணவர்கள் சரியாகவே சிந்திகிறார்கள் என்று கூறியபடியே அந்த வரைபடத்தை அனைவருக்கும் காட்டினார். மாணவ மாணவியர் ஆவலோடு பார்த்தனர்.

அந்த வரைபடத்தில் ஒரு முக்கோணம் வரையப்படிருந்தது. அந்த முக்கோணத்தின் மூன்று முனைகளிலும் இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று எழுதியிருந்தது. அந்த முக்கோணத்தின் நடுவில் அறிவியல் என்று எழுதியிருந்தது. அதுமட்டுமல்ல அந்த முக்கோணதின் அடிப்பகுதியின் கீழே அறிவியல் = தத்துவமா? என்று ஒரு கேள்வியோடு அந்த வரைபடம்  அழகாக வரையப்பட்டிருந்தது.

இந்த வரைபடத்தில் அப்படி என்ன இருக்கிறது? ஏதோ புரிந்த மாதிரி இருக்கிறது ஆனால் சற்று புரியாத மாதிரியும் இருக்கிறது என்று மாணவர்கள் தமக்குள் பார்த்துக்கொண்டனர்.

ஆசிரியர் மாணவர்களின் அருகில் வந்து ஆசையாய் ஆவலாய் பேச ஆரம்பித்தார்.

உண்மையில் தத்துவம் என்பது அறிவியல் விதிகளை உள்ளடக்கியதுதான்! இதைத்தான் நான் சொல்ல வந்தேன். இதை மிக அருமையாக  இந்த மாணவி வரைந்து காட்டிவிட்டாள்.எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று ஆசிரியர் நெகிழ்ந்துபோனார்.

தத்துவம் என்றால் மனித வாழ்க்கைக்கான வெறும் அறிவுரை என்றும், சோகத்தில் இருக்கும் போது ஆறுதலாக வருவது என்றும்  நினைத்துக்கொண்டுள்ளனர். அப்படியல்ல . உண்மையில் தத்துவம் என்பது அறிவியல் விதிகளை உள்ளடக்கியதுதான்.

ஆனால் இந்த அறிவியல் விதிகளையெல்லாம்  நாம் தனித்தனியாக படிக்கிறோம். அதுமட்டுமல்ல பல பிரிவுகள் அறிவியல் வளர்ச்சியால் உருவாகிக்கொண்டே  இருக்கின்றன. அவை இன்னும் இன்னும் விரிவடைந்துகொண்டே செல்கின்றன. இவற்றையெல்லாம் ஒன்றிணைக்கிற ஒரு அறிவியல் பார்வை அவசியம் தேவை இல்லையா!

இந்த அறிவியல் விதிகளில் உள்ள பொதுப்பார்வை என்னவாக இருக்கும் என்று நமது முன்னோர்கள் ஆராய்ந்தார்கள். இது இன்று நேற்றல்ல இந்த பிரபஞ்சத்தை மனிதன் அறிந்தகொள்ள முயன்ற ஆரம்ப நாட்களில் இருந்தே இந்த ஆய்வு தொடங்கி விட்டது. அந்த ஆய்வின் தொடர்ச்சிதான் உலகப்பார்வையாக தத்துவமாக வளர்ந்து வந்துதுள்ளது. இதை நாம் சரியாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரிவாக எடுத்து சொல்லிவிட்டு ,சற்று நேரம் அமைதி காத்தார்  ஆசிரியர்.

தத்துவமுன்னா இவ்வளவு அறிவியல் இருக்கிறதா சார்! தத்துவம் என்றால் ஏதோ புரியாத புதிர் என்று இத்தனை நாள் நினைத்திருந்தேன். இப்பதான் கொஞ்சம் புரிய ஆரம்பிக்குது சார்! இன்னும் இதை எளிமையாக சொல்ல முடியுமா சார்! என்றார் ஒரு மாணவன்

சரி சொல்கிறேன்! இப்ப அந்த மாணவி ஒரு முக்கோணம் வரைந்தாள் இல்லையா! இப்ப நானும் ஒரு முக்கோணம் வரைகிறேன் பாருங்கள்! என்று ஆசிரியர் ஒரு முக்கோணம் வரைய ஆரம்பித்தார்.

அந்த முக்கோணத்தின் ஒரு முனையில் இயற்கை என்று எழுதி இருந்தது. இன்னொரு முனையில்   சிந்தனை என்று எழுதி இருந்தது.அடுத்த முனையில் சமுதாயம் என்று எழுதியிருந்தது. ஒன்றையொன்றை தொடர்ந்து இயங்குவது போல அம்புக்குறியை அந்த முக்கோணத்தைச் சுற்றி வரைந்திருந்தார் ஆசிரியர்.

இந்த முக்கோணம் என்ன சொல்கிறது ? என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்.

இயற்கை, சிந்தனை, சமுதாயம் என்ற இந்த மூன்றிற்கும் ஒரு தொடர்பு இருப்பது போல தோன்றுகிறது சார் என்றனர் மாணவர்கள்.

சரியாக சொன்னீர்கள்! என்று ஆசிரியர் மேலும் பேச ஆரம்பித்தார்.

அதாவது மனிதன் இயற்கையைப்பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். இல்லையென்றால் புயல், வெள்ளம், மழை, பனி, பூகம்பம்  மற்றும் பருவகாலங்கள் போன்ற வற்றால் மனிதன் வாழ்வதே சவாலாகிவிடும். அதுமட்டுமல்ல நுண்ணுயிரிகளான  பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகலால் மனிதன் நோய்வாய்பட்கிறான். எனவே இயற்கையை சிந்திக்க ஆரம்பித்து அதன் விதிகளை தெரிந்துகொள்வதால் மனித சமுதாயம் வளர்ச்சி அடைகிறது. மீண்டும் வளர்ச்சி தடைபடும்போது மீண்டும் இயற்கை விதிகளை கண்டுபிடிக்க வேண்டிய தேவை எழுகிறது. இதனால் சமுதாயம் மேலும் வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. இப்படி இந்த முக்கோணம் சமுதாய வளர்ச்சியின் சுழற்சியை சுட்டிக் காண்பிக்கிறது.

 என்ன மாணவர்களே! இப்ப இந்த முக்கோணம் எதைக் காட்டுகிறது என்று தெளிவாக  தெரிகிறது அல்லவா! என்றார் ஆசிரியர்.

அப்ப இந்த முக்கோணம்தான் தத்துவமா சார்? என்றாள் ஒரு மாணவி.

ஒருவகையில் இந்த முக்கோணம்தான் தத்துவம் என்று சொல்லலாம். ஆனால்  முழுமையாக தெரிந்துகொள்ள இன்னும் அதிக தூரம் சென்றாக வேண்டும் என்றார் ஆசிரியர்.

அப்ப இயற்கையை  அறிய முற்பட்டதுதான் தத்துவமா சார் ! ஒரு மாணவன் எழுந்து கேட்டான்.

சரியாய் சொன்னாய்! இயற்கையை அறிய முற்பட்டதிலிருந்தே  தத்துவம் தொடங்கியது என்பது சரிதான். ஆனால் பின்னால் இயற்கையை புரிந்துகொள்ள மனிதனின் முயற்சி தொடர தொடர ஒவ்வொன்றைப்பற்றியும் தனித்தனியாக ஆராய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் பல அறிவியல் துறைகள் உருவாக வேண்டியது அவசியமாகிவிட்டது. இதையே நாம் தற்போது அறிவியல் என்று அழைக்கிறோம். இப்பொழுது தத்துவம் தனியாகவும் அறிவியல்  இன்னும் பல பிரிவுகளாகவும் வளர்ந்து வளர்கிறது என்றார் ஆசிரியர்.

தத்துவமும் அறிவியலும் தனித்தனியாக பிரிந்துபோய்விட்டது .அப்ப தத்துவம் மட்டும் வளரவே இல்லையா சார் என்றாள் ஒரு மாணவி!.

அப்படி இல்லை! அறிவியல் வளர வளர தத்துவமும் சேர்ந்தே வளர்ந்து வந்துள்ளது. உண்மையில் அறிவியல் வளர்ச்சியே தத்துவம் வளர உதவியுள்ளது எனலாம். அதாவது தத்துவத்தையும் அறிவியலையும் ஒன்றை ஒன்றை பிரிக்க முடியாது என்பதுதான் உண்மையாகும்.

எங்களுக்கு இப்பதான் கொஞ்சம் புரிய ஆரம்பிகிறது சார்! இன்னும் நாங்கள் புரிந்துகொள்ள  நாம் வாழும் நடைமுறையை வைத்து சொன்னால் இன்னும் நல்லா புரியும்போல தெரிகிறது சார் என்றான் ஒரு மாணவன்.

இந்த மனித வாழ்வானது தொடர்ந்து இயங்க வேண்டும் என்று பார்த்தோமல்லவா! ஆனால் ஒரே வாழ்வைத்தான் அனைவரும் திரும்ப திரும்ப வாழ்வது போன்ற தோற்றம் எல்லா எளிய மனிதர்களூக்கும் தோன்றுமல்லவா! ஆதே நேரத்தில் மனித வாழ்வானது அனைவருக்கும் ஏன் சமமானதாக இருக்கவில்லை. இந்த ஏழ்மை ஏன் இன்னும் தொடர்கிறது என்ற பல கேள்விகள் நம் முன்னே தடையாக நிற்கிறது அல்லவா! இதெல்லாம் ஏன்! இந்த நிலமை  எப்ப மாறும் ! என்று அடுக்கடுக்கான கேள்விகள் நம்மில் பலருக்கும் தோன்றுகிறது அல்லவா! இதை சரி செய்ய ஒரு அறிவியல் பார்வை அதுவும் ஒரு உலகப்பார்வையாக நமக்கு தேவைபடுகிறது அல்லவா! இந்த உயர்ந்த பார்வை தருவதுதான் தத்துவம் என்று சொல்கிறார்கள் என்று விரிவாக எடுத்துச் சொன்னார் ஆசிரியர்.

ஒரு அட்டையை காண்பித்தபடியே ஒரு மாணவன் எழுந்தான். அதில் ஜீரோ மார்க் போடப்படிருந்தது.

என்ன! நான் நடத்துவது உனக்கு புரியவில்லையா! எனக்குத்தானே ஜீரோ மார்க் போட்டிருக்க! என்றார் ஆசிரியர் அமைதியாக

இல்லை சார் அது நீங்க பாடத்த நடத்த ஆரம்பிக்கும்போது நான் போட்ட மார்க் சார்!

இப்ப நான் போடுற மார்க் என்ன தெரியுமா சார்! நூறுமார்க்  சார்!என்று வேறு ஒரு அட்டையை எடுத்துக் காட்டினான் .

சரி! சரி! கிண்டலடித்தது போதும் பாடம் புரிகிறதா இல்லையா அத முதல்ல சொல்லு என்றார் ஆசிரியர்.

அப்படின்னா உலகே மாயம்! வாழ்வே மாயம்! என்று ஏன் சார் சொன்னாங்க? என்றான் அந்த மாணவன்.

சரியான கேள்வியை நீ கேட்டுவிட்டாய்! உண்மையில் உங்களுக்கு தத்துவ்ப் பாடம் புரிய ஆரம்பித்துவிட்டது. சரி நான் பதிலுக்கு வருகிறேன் என்று ஆசிரியர் மேலும் பேச ஆரம்பித்தார்.

அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு கிடைத்த ஞானத்தை வைத்து இப்படியெல்லாம் சிந்தித்தார்கள். அதாவது வாழ்வே மாயம்! உலகே மாயம்! என்பதில் ஒரு சமூகப்பார்வை இருக்கிறது . வாழ்வை வெறுத்து ஒதுக்கச் சொல்வதுதான் அந்த சமூகப்பார்வை. இந்த சிந்தனை அந்த காலகட்ட சமுகத்தை முன்னேற்ற உதவியதா! என்பதுதான் முக்கியம் . அதுமட்டுமல்ல இந்த சமுகம் ஏற்றத் தாழ்வோடுதான் வளர்ந்து வந்திருக்கிறது.ஆகவே ஏழை எளிய மக்களை கைவிடாத தத்துவம் எது என்பதும் மிக முக்கியம். நமக்கு அறியியல் வழியிலான தத்துவப்பார்வை இல்லையென்றால் , யார் எதை முன்வைத்தாலும் எல்லாம் சரிதான் போல எண்ணத்தோன்றும்.இது நம் முன்னேற்றத்திற்கு உதவுமா? என்று சொல்லியடியே மாணவர்களை பார்த்தார்.

நீங்க சொல்வது புரிகிறது சார்! ஆனால் இதை சரி என்று சொல்பவர்களும் இருப்பார்கள்! தவறு என்று சொல்பவர்களூம் இருப்பார்கள் அல்லவா! அப்ப சண்டைதானே வரும். என்றான் ஒரு மாணவன்.

இப்படி குழப்பம் ஏற்படும்போது எது சரி! எது தவறு! என்று மனம் குழம்பும். இதற்குதான் யார் எதை சொன்னாலும் அதற்கு அறிவியல் அடிப்படை இருக்கிறதா என்று ஆராய வேண்டும்.அப்படி இல்லையென்றால் அந்த தத்துவதில் எதோ குறை இருக்கிறது என்று அர்த்தம். அதை ஆராய்ந்து  உங்கள் பார்வை தவறு என்று சுட்டிக்காட்டவும் தயங்கக்கூடாது.

 

ஆப்புறம் சண்டை என்பதை நான் கருத்து மோதல் என்று எடுத்துக்கொள்கிறேன். இந்த கருத்து மோதல்கள் முதலில் சிந்தனை உருவான காலகட்டத்திலேயே உருவாகி இருக்கும் அல்லவா! இதை கண்டு நாம் பயப்படக்கூடாது. அப்படி பயந்தால் நல்ல சிந்தனை வளர்ந்தே இருக்காது அல்லவா! .இன்றைய சமுகமும் வளர்சியடைந்து இருக்காது அல்லவா! “திமிங்கலம் இல்லாத கடலில் பயணம் செய்யாதே”! என்று ஒரு அறிஞர் சொல்வதை உங்களுக்கு பதிலாக நான் முன் வைக்கிறேன் என்றார் ஆசிரியர்.

இந்த தத்துவமெல்லாம் கேட்க நல்லாயிருக்கும் ஆனால் இதெல்லாம் நமக்கு ஒத்து வராது சார்! என்றான் ஒரு மாணவன்.

இப்படி மனசுல பட்டதை சொன்னதற்கு நன்றி!

“மரம் சும்மா இருந்தாலும் காற்று ஆதை சும்மா விடுவதில்லை” என்று ஒரு வாசகம் உண்டு. இதன் கருத்து என்ன? நீங்கள் எந்த தத்துவத்தையும் சாராமல் இருந்தாலும் நீங்களும் வாழ்ந்தாக வேண்டுமல்லவா! சமுகத்தில் நடக்கும் எல்லாமும் உங்களையும் பாதிக்கவே செய்யும். இதிலிருந்து நாம் தப்பிக்க முடியாது என்றார் ஆசிரியர்.

அப்ப இந்த உலகத்தை இந்த சமுகத்தை புரியாமல் நாம் வாழ முடியாது என்பது புரிகிறது சார். இதை நாங்க மற்றவர்களுக்கு எப்படி சார் எடுத்து சொல்வது? என்றாள் ஒரு மாணவி

உணர்வு என்பது யாது? அது உடல் நலம் சார்ந்தது அல்லவா! அப்ப நாம உயிர்வாழ வேண்டுமென்றால் நமக்கு உணவு வேண்டுமல்லவா! உணவு வேண்டுமென்றால் நிலமும் நீரும் வேண்டுமல்லவா! அப்ப நிலமும் நீரும் இயற்கை அல்லவா! இயற்கையின் விதிகளை அறியாமல் நாம் வாழ முடியுமா! இயற்கையை அறிவதே தத்துவத்தின் முதல் படி என்று நான் ஆரம்பத்தில் சொன்னது ஞாபகம் வருகிறதா? என்றார் ஆசிரியர்.

அப்ப நம்ம வாழ்வையும் தத்துவத்தையும் பிரிக்கமுடியாது என்பது தெளிவாக தெரிகிறது சார்.! எனக்கு இன்னும் ஒரு  சந்தேகம் சார்! விஞ்ஞானிகளுக்கு இந்த தத்துவமெல்லாம்  தெரியுமா சார்! என்றாள் ஒரு மாணவி

வேதியியலை ஆய்வு செய்பவர் வேதியியல் விஞ்ஞானி, உயிரியலை ஆய்வு செய்பவர் உயிரியல் விஞ்ஞானி இப்படி போய்க்கிட்டே இருக்கும். அவரவர் துறைசார்ந்து ஞானத்தோடு இருப்பார்கள். ஆனால் தத்துவம் படித்திருப்பார்கள் என்பது நிச்சயம் கிடையாது. ஆனால் சமுக அக்கரை உள்ள விஞ்ஞானிகளும் இருக்கிறார்கள்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டினை உங்களூக்குத் தெரியும்தானே! அவர் சொன்னதை உங்களுக்கு அவசியம் தெரியவேண்டும். 

“எனது அக  வாழ்க்கையும் புற வாழ்க்கையும் தற்போது கண்ணெதிரே வாழ்ந்து கொண்டிருக்கிற  மற்றும் வாழ்ந்து மறைந்துவிட்ட எண்ணற்ற மனிதர்களின் உழைப்பையே சார்ந்துள்ளது. இதனை ஒவ்வொரு நாளும் தினமும் நான் எனக்கு நினைவு படித்திக்கொள்கிறேன். அவ்வாறு நான் பெற்றுள்ள தொடர்ந்து பெற்றுக்கொண்டிருக்கிற அனைத்தையும் மனதிற்கொண்டு அதே அளவில் நானும் மானுடத்திற்கு அளிக்க வேண்டும் அல்லவா! அதற்காக உழைக்க வேண்டும் அல்லவா!  இப்படி ஒவ்வொரு நாளும் எனக்கு நானே நினைவுபடுத்தி கேட்டுக்கொண்டே இருகிறேன்”.

இது இந்த  அணு விஞ்ஞானியின் சமுக அக்கரை மட்டுமல்ல , இதில் எனக்கு பிடித்தது இநத சமுகப்பார்வைதான்! இந்த சமுகப்பார்வைதான் நமக்கு வேண்டும். இதைத்தான் நமது தத்துவ ஞானிகளும் அறிவியல் ரீதியாக நிருபித்துள்ளார்கள். இந்த சமுகப்பார்வை நமக்கு வேண்டாமா! என்றார் ஆசிரியர்.

தத்துவமெல்லாம் புரியாது என்று நினைத்திருந்தேன் சார்!. அது புரியும் என்பது மட்டுமல்ல , அது பலிக்கும் கண்டிப்பாக நிறைவேறும் என்றும் நான் தெரிந்துகொண்டேன் சார் என்றாள் ஒரு மாணவி.

அப்ப தத்துவம் என்பது என்னவென்று அனைவரும் சேர்ந்து சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார் ஆசிரியர்

அன்றாட  சமுக வாழ்வின் நடைமுறையில்  ஏற்பட்ட அனுபவமே புதிய ஞானத்தை தருகிறது. இந்த புதிய ஞானம் இன்னும் புதிய நடைமுறைய ஏற்படுத்துகிறது. இப்படி மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

அப்ப இதிலிருந்து என்ன தெரிகிறது . “எதை நடைமுறைப்படுத்த முடியுமோ, அது மட்டுமே தத்துவமாக இருக்கமுடியும் சார்” என்று அனைத்து மாணவர்களூம் ஒரே குரலில் கத்தினார்கள்.

சபாஷ் ! தத்துவமே நடைமுறையாகிறது என்றுதான் நான் புரிந்துவைத்திருந்தேன். ஆனால் நீங்கள் ஒரு படி மேலே சென்று “எதை நடைமுறைப்படுத்த முடியுமோ, அது மட்டுமே தத்துவமாக இருக்கமுடியும்” என்று எனக்கே பாடம் நடதிவிட்டீர்கள் உங்களுக்கு வாழ்த்துகள் என்று ஆசிரியர் விடை பெற்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை

மாணவர்கள் கொண்டாடிய அறிவியல் விழா!

             காலை இறைவணக்கத்தை முறைப்படி செலுத்துவதற்காக மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் வரிசையாக நிற்கத் தொடங்கினார்கள். ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களை ஒழுங்கு படித்தியபடியே மேடைக்கு வந்தார்கள். சற்று நேரத்தில் பள்ளியின் முதல்வரும் மேடைக்கு அருகில் வரவும்,, மாணவர்களிடையே சப்தம் படிப்படியாக குறைந்து அமைதி நிலவியது. மாணவத் தலைவர் இறைவணக்கத்தை ஆரம்பித்து வைக்க, மாணவர்கள் ஒரே குரலில் பாடி முடித்தார்கள். சில முக்கியச் செய்திகள் மற்றும் அறிவிப்புகளோடு அன்றைய இறைவணக்க நிகழ்வு முடிவுக்கு வந்தது. மாணவர்கள் தத்தம் வகுப்பிற்குச் செல்லத் தொடங்கினார்கள். மைதானம் வெற்றிடமாக மாறியது. சிறிது நேரத்தில் மீண்டும் சில மாணவர்கள் மைதானத்தை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக ஓடினார்கள். பள்ளி முதல்வர் தொடங்கி ஆசிரியர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏன் சில மாணவர்கள் மட்டும் மீண்டும் ஏதோ அணிவகுப்பு நடத்த முயற்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை!. மீண்டும் மைதானத்தில் ஓடிய மாணவர்கள் ஏதோ ஒரு ஒழுங்கிற்கு வந்தது போல தெரிந்தது. குறுக்கும் நெடுக்குமாக ஒரு அட்

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது.