வாழ்வின் தெறிப்பு
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்சியை ஒருநாள் பார்க்க நேர்ந்தது. அதில் பூவையார் என்ற சிறுவன் மிகச் சிறப்பாக பாடினான். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதில் பூவையார்
பற்றிய ஒரு குறும்படம் ஒளிபரப்பானது. அதில்
அவனின் தாய் கண்ணீரோடு அவன் அருகில் இருந்தாள். பூவையார் சிறுவனாக
இருக்கும் போதே அவனின் தந்தையார் இறந்து விட்டார். அந்த குடிசை வீட்டில் தன் தாயின்
சொற்ப வருமானத்தில் அவன் வாழ்க்கை நகர்கிறது. கானா பாட்டு பாடுபவர்களோடு ஆர்வம்
ஏற்பட்டு அந்த குழுவில் சேர்ந்து பாட கற்றுக்கொள்கிறான். அவனது குரலில் ஒரு
புதுமையும் ஈர்ப்பும் மிளிர்கிறது. இதனால் அவனும் பல கச்சேரிகளில் பாடி புகழ்
பெறுகிறான். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்சியிலும் பங்கேற்று அனைவரது மனதையும்
கவர்ந்து விட்டான். இப்படியாக அந்த குறும்படம் அவனின் எளிய வாழ்வை எடுத்துக்
காட்டியது.
அப்போது அவனின் தாயிடம் ஒரு கேள்வி கேட்கிறார்கள். இந்த சின்ன வயதில் அவன் பாடி பணம் கொண்டு வருவது உங்களுக்கு எப்படி இருக்கிறது!? “அவனது தந்தை இல்லாத இடத்தை அவன் நிரப்புவதாக நான் நினைக்க வில்லை. எனது கஷ்டத்தில் அவனும் பங்கு பெறுகிறான் என்பதே எனக்கு ஆறுதலாக உள்ளது”. என்று அந்த ஏழை தாய் சொன்னபோது அனைவரும் அப்படியே அசந்து போனார்கள். எப்படி அவர்கள் வாழ்க்கையை அழகாகவும் சரியாகவும் பார்க்கிறார்கள் என்று நானும் அசந்துபோனேன். உடனே இதை குறித்து வைக்க வேண்டுமென பதிந்து விட்டேன். நாளை பூவையார் ஒரு நல்ல பாடகராக வருவதற்கு நல்ல இதயங்கள் வாய்ப்பு வழங்கட்டும்.
Comments
Post a Comment