Skip to main content

கணக்கும் கனவும்

கணக்கும்  கனவும்


          

கணக்கும் கனவும்

          சுற்றுலா என்றதும் ஒரு புதிய உற்சாகம் வந்து விடுகிறது. நந்தினியும் உற்சாகமாகி விட்டாள். அப்பொழுதான் அவளுக்கு வீட்டுப்பாடம் ஞாபகத்திற்கு வந்தது. அனைத்து வீட்டுப்பாடத்தையும் வேகமாக முடித்துக்கொண்டே வந்தாள். கணக்கு பாடத்தில் ஒரு கணக்கை மட்டும் அவளால் போடமுடியவில்லை.

     ஆனால் கணக்கில் அவளுக்கு ஆர்வம் அதிகம். சரியான விடை வந்துவிட்டால் சந்தோழத்தில் துள்ளிக் குதிப்பாள். ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் இடையில் எந்த வீதி செயல்படுகிறது என்பதில் ஆர்வமாக இருப்பாள். சில நேரங்களில் கற்பனையில் மூழ்கிவிடுவாள். கணக்கின் படிகளில் ஏறி விடையைத் தொடுகிற மாயத்தை எண்ணி எண்ணி வியப்பாள். இதனால் அவளை பள்ளியில் கணக்குப்புலிஎன்று அழைப்பார்கள். யாருக்கும் தெரியாமல் ஆசிரியரைப்போல கரும்பலகையில்  கணக்கைப் போட்டு மகிழ்வது அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த ஒரு கணக்கை அவளால் போட முடியவில்லை.

     அப்பொழுதுதான் அவளின் அம்மா வந்து அவளின் தலையைத் தடவி கொடுத்தாள். என்னம்மா கணக்கு வரலையா! என்று அன்போடு கேட்டாள்.

     நாளைக்கு டூர் போற இல்ல , இப்ப போய் கணக்கு பாடம் எழுத வேண்டாம், அத டூர் போய் வந்து பாத்துக்களாம். இப்ப டூருக்கு வேண்டியதெல்லாம் எடுத்து வை!  என்றாள்.

     சரிம்மா! என்று அரைமனதோடு  கணக்குப் பாடத்தை எடுத்து வைத்துவிட்டு சுற்றுலா செல்ல தயாரானாள்.

     மறுநாள் சுற்றுலா முடித்து வீட்டிற்கு வந்தாள். குளித்து முடித்து சுத்தமாகி புதிய உடையை அணிந்து கொண்டாள். உடனே பாதியில விட்ட கணக்கு ஞாபகத்திற்கு வந்தது.. போட முடியாத அந்த கணக்கை எடுத்து வைத்துக்கொண்டு யோசனையில் ஆழ்ந்தாள். சுற்றுலா போய் வந்த அசதியும் இந்த கணக்கு சிந்தனையும் சேர்ந்துகொள்ள, உடனே அசந்து தூங்கிவிட்டாள்.               

     ஒரு பெரிய காட்டில் இவள் ஓடிக்கொண்டிருக்கிறாள். மரங்கள் காற்றில் ஆடும் ஓசை காதில் கேட்கிறது. ஒரு குரங்கு இவளை துரத்துவதுபோல வந்துகொண்டிருந்தது. இவள் சற்றே ஓதுங்க ஆரம்பித்தாள். பெரிய பெரிய வாழைமரங்களைப்  பார்த்து வியந்தாள்.. அந்த குரங்கு வாழைப்பழத்தை பறித்து சாப்பிட நேரம் பார்த்துக்கொண்டிருந்தது.இவள் மீண்டும் ஒதுங்க ஆரம்பித்தாள்.அந்த குரங்கின் எதிரே ஒரு சிங்கத்தை பார்த்து பயந்துவிட்டாள். ஆனால் சிங்கம் பசியோடு குரங்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. குரங்கு வாழைப்பழம் சாப்பிட நினைத்தால் சிங்கத்திடம் மாட்டிக்கொள்ளும். குரங்கு இப்படியும் அப்படியுமாக யோசனையில் இருந்தது.  குரங்கு எங்கோ போவதுபோல பின்வாங்கியது.  திடீரென சிங்கத்தின் பின்பக்கமாக ஓடியது. என்ன நினைத்ததோ தெரியவில்லை, சட்டென திரும்பி வாழைப்பழத்தை நோக்கி தாவியது. பட்டென பழத்தைப் பறித்துக்கொண்டு சிங்கத்திடம் பிடிபடாமல் ஓடிவிட்டது. சிங்கம் குரங்கைத் துரத்த ஆரம்பித்தது. இவளுக்கு உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்துவிட்டது. திடீரென சிங்கம் கர்சிக்கும் சப்தம் அதிகமாகவே திடுக்கிட்டு எழுந்தாள் நந்தினி.

     சுற்றும் முற்றும் பார்த்தாள்!.சிங்கம் எதையும் காணவில்லை. ச்சே! கனவா இது! என்றபடியே நிதானத்திற்கு வந்தாள் நந்தினி.

     எதிரே! அப்பா காலையிலேயே குளித்து முடித்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தாதார். அம்மா சமையலுக்கு காய்கறி நருக்கிக் கொண்டிருந்தாள். நந்தினி அவள் அப்பாவை நோக்கி ஓடினாள். அப்பா!அப்பா! ஒரு பயங்கர கனவுப்பா!.

     என்ன கனவா! பயந்துட்டியா! பயப்படாமல் சொல்லு! என்றார் அதற்குள் அவளின் அம்மாவும் சேர்ந்துகொண்டார்.

     அவள் கண்ட கனவை ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்! அதெல்லாம் நல்ல கனவுதான். அதுசரி நேற்று உனக்கு என்னாச்சு! அத முதலில் சொல்லு என்றார்.

     ஓ அதுவா! நேற்று வீட்டுப்பாடத்தில் ஒரு கணக்கை என்னால் போடமுடியலப்பா! என்றாள் நந்தினி

     சரி! சரி! இதுக்கெல்லாம் பயப்படக்கூடாது. அதான் நான் வந்துட்டேன் இல்ல! நேற்று நீ  சுற்றுலாவிற்கு போன இல்ல! அதுவும் மிருகக்காட்சி சாலைக்கெல்லாம் போயிருக்க ! அதுதான் கனவா வந்திருக்கும். சரியா! கனவையெல்லாம் மறந்திடு! இப்ப போய் கணக்கப் போடு விடை சரியா வரும் என்றார் அவளின் தந்தை.

     சரிப்பா! என்றபடி மீண்டும் கணக்கைப் போட ஓடினாள்! 

     புள்ள பயந்திட்டாங்கிரிங்க! இப்ப என்ன செய்யறதுங்க! “!

     அப்பொழுதுதான் அழைப்புமணியின் ஓசை கேட்டது. “யாருன்னு போய் பாருங்க” என்றாள் அவளின் அம்மா.

     வாங்க! வாங்க! நீங்க என் பிள்ளை படிக்கிற பள்ளியில கணக்கு ஆசிரியர் அல்லவா!?. சரியான நேரத்திற்குதான் வந்திருக்கிங்க உள்ளே வாங்க என அன்போடு அழைத்தார் அவளின் அப்பா!

     ஆசிரியர் மெல்ல மகிழ்ந்தபடியே உள்ளே வந்தார்.

     உங்க பொண்ணு நேற்று சுற்றுலாவிற்கு வந்தா இல்லையா! அவ தன்னோட மணிபர்சை பஸ்சிலேயே விட்டுட்டா. ஓட்டுனர் எடுத்து என்கிட்ட கொடுத்தார். அதுல உங்களோட முகவரியைப் பார்த்தேன். நானும் இந்த நகர்லதான் குடியிருக்கேன். அதான் நடந்தே வந்துட்டேன் என்றார் ஆசிரியர்.

     உங்களுக்கு மிக்க நன்றி! என்றார் அவளின் தந்தை. ஆசிரியருக்கு வணக்கம் சொன்னபடியே அவர் அருகில் வந்து நின்றாள் நந்தினி.

     “சரியான நேரத்திற்குத்தான் வந்திருக்கேன்” என்று சொன்னீங்களே! என்று ஆசிரியர் ஆரம்பித்தார்.

     நந்தினி சுற்றுலா செல்லும் அவசரத்தில் அவளால் சில கணக்குகளைப் போட முடியவில்லை! அவளுக்கு கணக்கில் ஆர்வம் அதிகம் என்று உங்களுக்குத் தெரியும். அந்த நினைவோட அவள் இருந்ததால் அது ஒரு கனவாக அவளுக்கு வெளிப்பட்டுவிட்டது.

சின்ன புள்ள இல்லையா! பயந்திட்டா .இது சம்பந்தமாகத்தான் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம் என்றார் அவளின் தந்தை.

     என்ன கனவு என்றார் ஆசிரியர் ஆவலோடு

     அப்படியே அந்த கனவைப்பற்றி விரிவாக ஆசிரியருக்கு எடுத்துச் சொன்னார் அவளின் அப்பா..

     இதுல பயப்பட என்ன இருக்கிறது என்றபடியே ஆசிரியர் நந்தினி பக்கம் திரும்பினார். நந்தினி இப்ப நீ கணக்கை போட்டுவிட்டாயா? என்றார் ஆசிரியர். இப்பதான் விடை சரியாக வந்தது சார்!. உடனே நீங்களும் வந்துட்டீங்க சார்! என்றாள் நந்தினி.

      வெரிகுட்! நீதான் கணக்கு புலியாச்சே! உன்னால முடியும்! எதற்கும் பயப்படக்கூடாது! நேற்று முடியலைன்னா, நாளைக்கு முடியும்! உடனே நாம நம்பிக்கை இழந்துவிடக் கூடாது! சரியா! என்றார் ஆசிரியர்

 சரி சார்! என்றபடியே அமைதியாக நின்றாள் நந்தினி.

     என்ன சார்! கொஞ்சம் புரியும் படியாக சொல்லுங்க!என்றாள் அவளின் அம்மா.   

     ஒவ்வொரு நாளும் நமக்கு ஏதாவது ஒரு பிரச்சனை கண்டிப்பாக வரும். அதை எதிர்கொள்ள நமது மனம் தயாராக வேண்டும். நமது மனதை சமநிலைக்கு கொண்டுவரவே கனவுகள் வருகின்றன. அதோடு கனவுகள் நமக்கு நம்பிக்கை அளிக்கின்றன என்று மனோ தத்துவ அறிஞர்கள் சொல்வதை நான் படித்திருக்கிறேன் என்றார் ஆசிரியர்.

     இதை கேட்ட பிறகுதான் அவள் அம்மாவின் முகத்தில் லேசாக புன்னகை பூத்தது.

     ஆசிரியருக்கு சற்றே நம்பிக்கை வர  மேலும் பேசலானார்.

     அப்படித்தான் உங்கள் மகளின் கனவிலும் ஒரு குரங்கு சிங்கத்தையே ஏமாற்றி பழம் சாப்பிட்ட மாதிரி கனவு வந்திருக்கு. அந்த கனவுதான் அவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கும். நாம தூங்கிவிட்டாலும் நம்ம மனதோட ஒரு பகுதி தூங்காம இருக்கும். அதுதான் கனவாக வரும்.  அவ  சந்தோழமாக சுற்றுலா போகவேண்டும் என்று அவள் மனம் விரும்பிருக்கு. அதுக்குள்ள வீட்டுப்பாடத்தை முடிக்கவேண்டும். இதனால் அவ மனம் சோர்ந்து போய்விட்டது. அதை சரி செய்யத்தான் அவளுக்கு கனவு வந்திருக்கு. இதெல்லாம் நம்ம  ஆழ்மனதோட செயல்பாடு என்பார்கள் என்றார் ஆசிரியர்..

     “அட நம்ம மனதைப்பற்றி இவ்வளவு அறிவியல் புரிதல் இருக்கிறதா! ரொம்ப ஆச்சரியமா இருக்கு! என்றார் அவளின் அப்பா!

     இன்னும் மனித மனம் பற்றி நாம் பேசிக்கொண்டே போகலாம். அதற்கு இப்பொழுது நேரமில்லை என்றபடி ஆசிரியர் மெல்ல எழுந்தார்.

     எந்த கணக்காக இருந்தாலும் உடனே போட வேண்டுமென ஆவல் வந்துவிடுகிறது சார் என்றாள் நந்தினி

     இந்த ஆர்வம்தான் மகத்தானது. அது ஒரு சிறு நெருப்பு! அதை அணையவிடாமல் நாம் பாதுகாக்க வேண்டும்.முக்கியமா பெற்றோர்கள் இந்த ஆர்வத்தை போற்றி வளர்க்கவேண்டும்.அதேநேரத்தில் எந்த தடை வந்தாலும் உன் கணித முயற்சியை விட்டுவிடாதே! அமைதியாக நிதானமாக யோசிக்க வேண்டும். உடனே விடை வரவில்லையென்றால் சற்று நேரம் அமைதியாக இருந்து மீண்டும் உன் முயற்சியை தொடங்கு! நீ கணிதத்தில் நிறைய சாதிக்க வாய்ப்பு இருக்கு! சரி கவனமாக படி! என்றபடி ஆசிரியர் விடைபெற்றுச் சென்றார்.

     பெற்றோர்கள் இருவரும் மகிழ்ந்தபடியே ஆசிரியரை வழி அனுப்பி வைத்தனர்.

 

    

    

 

Comments

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ்

  இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ் ---- புதுச்சேரி அன்பழகன்.          " டாக்டர் யெல்லபிரகட சுப்பாராவ்   என்ற இந்திய விஞ்ஞானி வாழ்ந்ததால் இன்று உலக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அவரைப்பற்றி நன்கு அறிந்த அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். மருத்துவ உலகிற்கு பல கண்டுபிடிப்புகளையும் பல முன்னெடுப்புகளையும் வழங்கிய அதிசய மனிதர் என்றும் அவர் போற்றப்படுகிறார்.. ஆனாலும் அவரைப்பற்றி   அதிகமாக நாம் கேள்விப்பட்டிருக்க   வாய்ப்பில்லை.         ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரம் என்ற ஊரில் ஒரு ஏழை தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் 1895-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள்   யெல்லபிரகட சுப்பாராவ்   பிறந்தார். தற்போதைய கோவிட்-19 தொற்று போல அன்றைக்கு பிளேக் என்ற தொற்று நோய் பரவியதால் இவரின் தந்தை காலமானார். தன் தந்தையின் இழப்பை சுப்பாராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார்.     தந்தையின் வருமானம் இல்லாமல் குடும்பம் தவித்...

உலகத்தைப் படைத்தது யாரு?

நா ளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள். அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள். “சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! அழகாக படைத்தது யாரு! அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடிகிட்டு அழகாக படைத்தது ...