Skip to main content

விட்டு விடுதலையாகி...

 

                           

  விட்டு விடுதலையாகி...

          தருண் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். பள்ளி விட்டு வந்தவுடன் சுறுசுறுப்பாகி விடுவான். அவனால் விளையாடாமல் இருக்க முடியாது

இன்று ஒரு பட்டம் வாங்கித் தரச்சொல்லி அம்மாவிடம் நச்சரித்தான்.  இரு குருவிகள் இணைந்து பறக்கிற படம் போட்ட ஒரு பட்டம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையே வாங்கிக்கொண்டான். அந்த பட்டத்தோடு மொட்டை மாடிக்கு ஒடினான்.

பட்டத்தின் நூலைப் பிடித்துக்கொன்டு காற்றில் வீசினான். பட்டம் காற்றின் மேல் தவழ முயன்றது. காற்றின் வேகத்தில் மேலே எழுவதும் பின்னர் கீழே சாய்வதுமாக இருந்தது.

 தருண் லாவகமாக நூலை விட்டு விட்டு இழுத்தபடியே இருந்தான். தற்போது காற்று மெதுவாக வீசியது. பட்டம் மெல்ல காற்றில் தவழ ஆரம்பித்தது விட்டது. மெதுவாக காற்றின் வேகம் அதிகரித்தது. பட்டம் காற்றில் தத்தி தத்தி நீந்தி பறக்க ஆரம்பித்தது. தருண் இப்பொழுதுதான் குதித்துக் கொண்டே பற்கள் தெரிய சிரித்தான். பட்டம் மெதுவாக பறந்து கொண்டே இருந்தது.

 

          அப்பொழுதுதான் எதிர் வீட்டு புவிக்கா வெளியே வந்தாள். புவிக்காவும் மூன்றாம் வகுப்புதான் படிகிறாள். எதிர் எதிர் வீடு என்பதால் இருவரும் சேர்ந்தே விளையாடுவார்கள் தருண் பட்டம் விடுவதை அப்பொழுதுதான் பார்த்தாள். தானும் பட்டம் விடவேண்டுமென ஆவல் கொண்டாள். அவனோடு போய் சேர்ந்து நின்று கொண்டாள். கொஞ்ச நேரம் எனக்கு பட்டம் கொடு!” என்றாள். அவன் பட்டம் விடுவதிலே குறியாக இருந்தான். அவன் தோள் மீது கைபோட்டு, "எனக்கு கொஞ்சம்  நேரம் பட்டம் குடு தருண்". என உரிமையோடு மீண்டும் கேட்டாள் புவிக்கா. அவன் ஒன்றும் சொல்லாமல் படத்தைக்கொடுத்தான்.

          பட்டத்தின் நூலை இவள் பிடித்து இழுத்து இழுத்து விட்டாள்.பட்டம் காற்றில் எக்கி எக்கி நீந்தியது. இப்பொழுது இருவரும் மகிழ்ந்தனர். சற்று நேரத்தில் இருவரும் மாறி மாறி பட்டம் விட்டுக்கொண்டார்கள். இருவரும் வலது கையால் பட்டத்தை விட்டுக்கொண்டே தனது இடது கைகளை ஒன்றாக இணைத்து பட்டத்திற்கு டாடா காண்பித்தார்கள்.

          அப்பொழுது இரண்டு பறவைகள் ஜோடியாக அந்த பட்டத்தின் அருகே பறந்து சென்றன. இந்த ஜோடி பறவைகளைப் பார்த்த  புவிக்காவிற்கு  தங்களது பட்டம் தனியாக பறப்பது பிடிக்கவில்லை. இந்த பட்டமும் அந்த பறவைகள் போல ஜோடியாக பறந்தால்  அழகாக இருக்கும் என்று நினைத்தாள். உடனே தருணிடம் பட்டத்தைக் கொடுத்துவிட்டு தனது அப்பாவை நோக்கி ஒடினாள் .

          அப்பா! அப்பா! எனக்கு ஒரு பட்டம் வேணும்ப்பா. அதுவும் தருண்  பட்டம் போலவே வேணும்பா! என்று அடம்பிடித்தாள். அடம் பிடித்தால் விட மாட்டாள் என்பது அவளது அப்பாவிற்கு நன்றாக தெரியும்.

          சரி!சரி! நானும் இப்ப கடப்பக்கம்தான் போகிறேன்; கண்டிப்பாக வாங்கி வருகிறேன் என்றார்.

          சற்று நேரத்தில் ஒரு புதிய பட்டத்தோடு வந்தார் புவிக்கா அப்பா. அதில் கயிற்றை கட்டி புவிக்காவிடம் கொடுத்தார். அந்த பட்டத்தை எடுத்துக் கொண்டு தருணிடம் ஓடினாள். அவனிடம் பட்டத்தைக் காட்டி மகிழ்ந்தாள். இந்த புதிய பட்டத்தையும்  காற்றில் பறக்க விட்டாள் . பட்டம் காற்றில் தாவி தாவி ஏறியது. தருனும் பட்டத்தின் நூலைப்பிடித்து உதவி செய்தான்.

          புவிக்காவின் பட்டம் தருணின் பட்டத்தை நெருங்கி விட்டது இப்பொழுது இரண்டு பட்டமும் இணையாக காற்றில் நீந்தி நீந்தி பறந்தன. புவிக்காவிற்கு இப்பொழுதுதான் மனசிற்கு நிம்மதியாக இருந்தது. இருவரும் மகிழ்ந்து பட்டத்தை இணையாக பறக்க விட்டுக்கொண்டே இருந்தனர்.

சற்று நேரத்தில் பட்டங்களுக்குச் சிறகு முளைத்தன . இரண்டு பறவைகளாக மாறி காற்றில் இணையாக  பறந்தன. இரண்டும் அவ்வப்பொழுது முட்டி மோதின, பின்னர் விலகின. இந்த விளையாடுத் தொடர்ந்தது.

          திடீரென இருவரும் பட்டத்தின் நூலை விட்டு விட்டார்கள். கைதட்டி மகிழ்ந்தார்கள்.

          அப்பொழுதுதான் புவிக்காவின் அப்பா மேலே வந்தார். பட்டம் எங்கே! என்று வேகமாக கேட்டார்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.உடனே புவிக்கா முந்திக்கொண்டு பதில் சொன்னாள்.

          அதுவா பறக்க ஆரம்பித்து விட்டது! அதாம் விட்டுட்டோம்! என்றபடி இருவரும் கீழே இறங்கி ஓடினார்கள்.

          புவிக்காவின் அப்பா ஒருகணம் திகைத்தார்.      

இந்த பசங்களை புரிஞ்சிக்கவே முடியலையே! என்றபடி

 மொட்டை மாடியிலிருந்து கிழே இறங்கினார்.


Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது....

மாணவர்கள் கொண்டாடிய சுதந்திர தினவிழா

சு தந்திரதின விழாவில் கொடியேற்றி துவக்கி வைப்பதற்காக, மாணவர் நல சங்கம் சார்பில் என்னை அழைத்திருந்தார்கள். முப்பதாண்டுகாலமாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவன் என்ற தகுதி ஒரு காரணமாக இருக்கலாம். மிக முக்கியமான இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக என்னை தயார் செய்துகொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்படும் ஓசைகேட்டு திறந்தேன். கையில் தேசியக்கொடியோடு மாணவர்கள் சீருடையில் வந்திருந்தனர். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. வாங்க! வாங்க! என்று பரவசத்தோடு உள்ளே அழைத்தேன். அனைவரும் ஒரே குரலில் “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! கொண்டாடுவோம்! என்றபடியே ஒரு வண்ண காகிதத்தை கையில் கொடுத்துவிட்டு அடுத்த வீட்டிற்கு சென்றுவிட்டனர். சுதந்திரமே மாணவர் உருவில் வீட்டு வந்தது போல இருந்தது. அவர்கள் கொடுத்துச்சென்ற காகிதத்தின் இரு பக்கத்திலும் பதினைந்து என்று எண்ணால் எழுதப்பட்டிருந்தது. மெல்ல பிரித்து பார்க்க அது எட்டாக மடிக்கப்பட்டிருந்தது. இது சுதந்திரதினத்தை குறிக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. காகிதத்தின் உள்ளே “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! வறுமையற்ற வளமான ஓர் இந்தியாவை உருவாக்குவோம்! ” எ...