Skip to main content

விட்டு விடுதலையாகி...

 

                           

  விட்டு விடுதலையாகி...

          தருண் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். பள்ளி விட்டு வந்தவுடன் சுறுசுறுப்பாகி விடுவான். அவனால் விளையாடாமல் இருக்க முடியாது

இன்று ஒரு பட்டம் வாங்கித் தரச்சொல்லி அம்மாவிடம் நச்சரித்தான்.  இரு குருவிகள் இணைந்து பறக்கிற படம் போட்ட ஒரு பட்டம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையே வாங்கிக்கொண்டான். அந்த பட்டத்தோடு மொட்டை மாடிக்கு ஒடினான்.

பட்டத்தின் நூலைப் பிடித்துக்கொன்டு காற்றில் வீசினான். பட்டம் காற்றின் மேல் தவழ முயன்றது. காற்றின் வேகத்தில் மேலே எழுவதும் பின்னர் கீழே சாய்வதுமாக இருந்தது.

 தருண் லாவகமாக நூலை விட்டு விட்டு இழுத்தபடியே இருந்தான். தற்போது காற்று மெதுவாக வீசியது. பட்டம் மெல்ல காற்றில் தவழ ஆரம்பித்தது விட்டது. மெதுவாக காற்றின் வேகம் அதிகரித்தது. பட்டம் காற்றில் தத்தி தத்தி நீந்தி பறக்க ஆரம்பித்தது. தருண் இப்பொழுதுதான் குதித்துக் கொண்டே பற்கள் தெரிய சிரித்தான். பட்டம் மெதுவாக பறந்து கொண்டே இருந்தது.

 

          அப்பொழுதுதான் எதிர் வீட்டு புவிக்கா வெளியே வந்தாள். புவிக்காவும் மூன்றாம் வகுப்புதான் படிகிறாள். எதிர் எதிர் வீடு என்பதால் இருவரும் சேர்ந்தே விளையாடுவார்கள் தருண் பட்டம் விடுவதை அப்பொழுதுதான் பார்த்தாள். தானும் பட்டம் விடவேண்டுமென ஆவல் கொண்டாள். அவனோடு போய் சேர்ந்து நின்று கொண்டாள். கொஞ்ச நேரம் எனக்கு பட்டம் கொடு!” என்றாள். அவன் பட்டம் விடுவதிலே குறியாக இருந்தான். அவன் தோள் மீது கைபோட்டு, "எனக்கு கொஞ்சம்  நேரம் பட்டம் குடு தருண்". என உரிமையோடு மீண்டும் கேட்டாள் புவிக்கா. அவன் ஒன்றும் சொல்லாமல் படத்தைக்கொடுத்தான்.

          பட்டத்தின் நூலை இவள் பிடித்து இழுத்து இழுத்து விட்டாள்.பட்டம் காற்றில் எக்கி எக்கி நீந்தியது. இப்பொழுது இருவரும் மகிழ்ந்தனர். சற்று நேரத்தில் இருவரும் மாறி மாறி பட்டம் விட்டுக்கொண்டார்கள். இருவரும் வலது கையால் பட்டத்தை விட்டுக்கொண்டே தனது இடது கைகளை ஒன்றாக இணைத்து பட்டத்திற்கு டாடா காண்பித்தார்கள்.

          அப்பொழுது இரண்டு பறவைகள் ஜோடியாக அந்த பட்டத்தின் அருகே பறந்து சென்றன. இந்த ஜோடி பறவைகளைப் பார்த்த  புவிக்காவிற்கு  தங்களது பட்டம் தனியாக பறப்பது பிடிக்கவில்லை. இந்த பட்டமும் அந்த பறவைகள் போல ஜோடியாக பறந்தால்  அழகாக இருக்கும் என்று நினைத்தாள். உடனே தருணிடம் பட்டத்தைக் கொடுத்துவிட்டு தனது அப்பாவை நோக்கி ஒடினாள் .

          அப்பா! அப்பா! எனக்கு ஒரு பட்டம் வேணும்ப்பா. அதுவும் தருண்  பட்டம் போலவே வேணும்பா! என்று அடம்பிடித்தாள். அடம் பிடித்தால் விட மாட்டாள் என்பது அவளது அப்பாவிற்கு நன்றாக தெரியும்.

          சரி!சரி! நானும் இப்ப கடப்பக்கம்தான் போகிறேன்; கண்டிப்பாக வாங்கி வருகிறேன் என்றார்.

          சற்று நேரத்தில் ஒரு புதிய பட்டத்தோடு வந்தார் புவிக்கா அப்பா. அதில் கயிற்றை கட்டி புவிக்காவிடம் கொடுத்தார். அந்த பட்டத்தை எடுத்துக் கொண்டு தருணிடம் ஓடினாள். அவனிடம் பட்டத்தைக் காட்டி மகிழ்ந்தாள். இந்த புதிய பட்டத்தையும்  காற்றில் பறக்க விட்டாள் . பட்டம் காற்றில் தாவி தாவி ஏறியது. தருனும் பட்டத்தின் நூலைப்பிடித்து உதவி செய்தான்.

          புவிக்காவின் பட்டம் தருணின் பட்டத்தை நெருங்கி விட்டது இப்பொழுது இரண்டு பட்டமும் இணையாக காற்றில் நீந்தி நீந்தி பறந்தன. புவிக்காவிற்கு இப்பொழுதுதான் மனசிற்கு நிம்மதியாக இருந்தது. இருவரும் மகிழ்ந்து பட்டத்தை இணையாக பறக்க விட்டுக்கொண்டே இருந்தனர்.

சற்று நேரத்தில் பட்டங்களுக்குச் சிறகு முளைத்தன . இரண்டு பறவைகளாக மாறி காற்றில் இணையாக  பறந்தன. இரண்டும் அவ்வப்பொழுது முட்டி மோதின, பின்னர் விலகின. இந்த விளையாடுத் தொடர்ந்தது.

          திடீரென இருவரும் பட்டத்தின் நூலை விட்டு விட்டார்கள். கைதட்டி மகிழ்ந்தார்கள்.

          அப்பொழுதுதான் புவிக்காவின் அப்பா மேலே வந்தார். பட்டம் எங்கே! என்று வேகமாக கேட்டார்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.உடனே புவிக்கா முந்திக்கொண்டு பதில் சொன்னாள்.

          அதுவா பறக்க ஆரம்பித்து விட்டது! அதாம் விட்டுட்டோம்! என்றபடி இருவரும் கீழே இறங்கி ஓடினார்கள்.

          புவிக்காவின் அப்பா ஒருகணம் திகைத்தார்.      

இந்த பசங்களை புரிஞ்சிக்கவே முடியலையே! என்றபடி

 மொட்டை மாடியிலிருந்து கிழே இறங்கினார்.


Comments

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அந்த நேரம் பார்த்து தலைமை ஆசிரியர் அவரை அழைப்பதாகச் சொல்ல, மாணவ மாணவியரிடம் ஆளுக்கு

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை

வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு

  வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு இ ராபர்ட்   ஐந்தாம் வகுப்பில் புதியதாக வந்து சேர்ந்திருந்தான் . பார்ப்பதற்கு வெள்ளைக்காரரைப் போல சிவப்பாக இருந்தான் . யார் வகுப்பிற்கு வந்தாலும் அவனையே விசாரித்தார்கள் . வகுப்பறையைத் தாண்டி பள்ளி முழுவதுமே அவனையே   வியப்பாக   பார்த்தார்கள் .   இ ராபர்ட் வந்ததிலிருந்து இ ராமு தன் நிறத்தையே அடிக்கடிப் பார்த்துக்கொண்டான் . கருப்பாகவும் இல்லை . வெள்ளையாகவும் இல்லை . இரண்டு நிறமும் கலந்த மாதிரி இருந்தது . நாம் ஏன் சிகப்பாக பிறக்க வில்லை என்று தனக்குள் கேட்டுக்கொண்டான் . சிவப்பாக இருந்தால் ஏன் இப்படி மதிப்பாக பார்க்கிறார்கள்   என்பதை   ராமுவால் புரிந்துகொள்ள   முடியவில்லை . இ ராமு தன் நண்பர்களிடம் அடிக்கடி இது பற்றி கேட்டான் . அதெல்லாம் ஒன்னுமில்லடா , நம்ம கண்ணுக்குத் தான் அப்படி அழகா தெரியுது ! நீ நல்லா படித்து முதல் ரேங்க் எடுத்தா அப்புறம் உன்னைப்பற்றியே எல்லோரும் பேசுவார்கள் . ராமுவுக்கு இது சரி என்று பட்டாலும் . மனம் மட்டும் கேட்பதாக இல்லை . என்ன செய்வதென்று யோசிக்கத்தொ