தமிழாசிரியர் சொன்னது மாதிரி ஆளூக்கொரு பூச்செடியை வளர்க்க முடிவு செய்து விட்டார்கள்
மாணவ மாணவியர்கள். இதற்காக ஆளுக்கொரு மண் பூந்தொட்டியை வாங்கி விட்டார்கள். அதிகபடியான
நீர் கசிந்து ஒடுவதற்கு பூந்தொட்டியின் அடியில் சிறு துவாரம் இருக்கிறதா என்று பார்த்து
வாங்கினார்கள். கொஞ்சம் மண்புழு உரமும் மக்கிய தேங்காய்நாரும் சேர்த்து ஒன்றன் மேல்
ஒன்றாக பூந்தொட்டியில் வைத்து அடைத்தார்கள். அவர்கள்
அப்பகுதில் கிடைத்த மண்ணையும் தொட்டியில்
கலந்து வைத்தார்கள். தேவையான அளவிற்கு நீர் ஊற்றி பதப்படுதினார்கள். வகுப்பிற்கு
வெளியே மைதானத்தைச் சுற்றிலும் தொட்டிச் செடிகளை தகுந்த இடைவெளி விட்டு வைத்தார்கள்.
மாணவ மாணவியர்கள் சூரிய ஒளி நன்றாக படும்படி தங்கள் தொட்டியைச் சற்றே இடம் மாற்றி வைத்தார்கள்.
மாணவ
மாணவியர்கள் தாங்கள் விரும்பிய செடிகளில் நாற்றை நட்டு வைத்தார்கள். காலையும் மாலையும் தவறாது செடிகளுக்கு தேவையான அளவு
தண்ணீர் ஊற்றி கவனமாக பார்த்துக் கொண்டார்கள். ஒவ்வொரு நாளும் மாணவ மாணவியர்கள் ஒய்வு
கிடைக்கும் போதெல்லாம் வந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள். எப்போது அவரவர் செடிகள்
துளிர் விட்டு வளர்ந்து பூ கொடுக்கும் என்று ஆவலோடு இருந்தார்கள். தமிழாசிரியரும் அவ்வப்போது
வந்து பார்த்து மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்தினார். என் செடிதான் முதல்ல வளர்ந்து
பூ பூக்கும் என மாணவ மாணவியர்களுக்குள் போட்டி இப்பொழுதே ஆரம்பித்து விட்டது. கொஞ்ச
நாட்களில் செடிகள் துளிர் விட்டு வளர ஆரம்பித்து விட்டது. மாணவ மாணவியர்களூக்கு ஒரே
சந்தோஷம். சின்னத் துளிர்கள் எவ்வாறு பெரிய இலையாக விரிகிறது என கவனமாக பார்த்து பார்த்து மகிழ்ந்தார்கள்.
மென்மையான துளிர்கள் மெல்ல வளர்ந்து விரிந்து தடித்த இலைகளாக மாறுவதைக் கண்டு வியந்தார்கள். அடுத்தது எப்போது பூ விடும் என ஆவலோடு தினம் தினம்
பார்த்து ஏங்கினார்கள்.
ஆனால் இந்த மகிழ்ச்சி ஒரு சில மாணவ மாணவியர்களுக்கு கிடைக்கவில்லை. ஏனெனில்
அவர்கள் தொட்டியில் வளர்ந்த செடிகளின் இலைகளில் நடுவில் சற்றே வெளிர் மஞ்சள் நிறம் தோன்ற ஆரம்பித்து விட்டது.
என்ன செய்வது என்று புரியவில்லை. நமது செடிகளில் பூ வருமா?வராதா? என கேள்விகளை அவர்களுக்குள்
கேட்க அரம்பித்து விட்டனர்.
இச்செய்தி தமிழாசிரியர் காதுகளுக்கு மெல்ல எட்டியது. விளையாட்டு
மணி அடித்தவுடன் வகுப்பறையை விட்டு வெளியே வந்து ஒவ்வொரு செடியாக பார்வையிட்டார். மாணவ
மாணவியர்கள் அவர்களின் தொட்டிச் செடிகளுக்கு அருகில் வந்து நின்று கொண்டார்கள். சில தொட்டிச் செடிகளுக்குக்
கீழே அவரை, மொச்சை விதைகள் முளைத்து வருவதைப் பார்தார். ஒரு தொட்டியில் மாஞ்செடி
வளர்ந்திருந்தது. சில தொட்டிகளில் நெல்லும் கேழ்வரகும் முளைவிட்டிருந்தன. தமிழாசிரியருக்கு
ஆச்சரியம் தாங்கவில்லை. மாணவர்களது இயல்பான படைப்பாற்றலைக் கண்டு வியந்து போனார்.
அப்பொழுதுதான் கவனித்தார், சில தொட்டிச் செடிகளின் இலையில்
வெளிர் மஞ்சள் நிறம் பரவி இருந்தது. ஆசிரியரை மாணவ மாணவியர் சூழ்ந்து கொண்டனர். ஏன்
சார் எங்க செடியில மட்டும் மஞ்சள் நிறத்துல இலை வந்தது? என கேட்க அரம்பித்துவிட்டனர்.
இது சத்து குறைவால் வருகிறது. மாட்டுச்சாணம்
கலந்த நல்ல எருவாக போட்டா எல்லாம் சரியாகி விடும். அல்லது வீடுகளில் உண்டாகும் காய்கறி
உள்ளிட்ட கழிவுகளை மக்க வைத்து கம்போஸ்ட் உரம்
தயாரித்து போட்டாலும்கூட இது சரியாகிவிடும்.
கவலைப்படாதிங்க என்று மாணவ மாணவியர்களுக்கு ஆலோசனை வழங்கிவிட்டு வந்துவிட்டார்.
“இது சரியான பதிலாக இருந்தாலும், அறிவியல் பூர்வமாக அல்லவா
இதை விளக்க வேண்டும்”, என் தமிழாசிரியர் தனக்குள் கேட்டுக் கொண்டார். அந்த சிந்தனையே
மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
தாவரங்கள் பற்றித் தேடித் தேடி படிக்க ஆரம்பித்து விட்டார்.
குறிப்பாக இந்த வெளிர் மஞ்சள் ஏன் என தேடிக்கொண்டே இருந்தார். அதற்குச் சரியான பதிலையும்
கண்டு பிடித்துவிட்டார். ஆனால் அவர் மனது நிலை கொள்ளவில்லை. இந்த தாவரங்கள் எவ்வளவு
முக்கியம்! அடடா இவ்வளவு நாள் வெறுமனவே
பார்த்துவிட்டோமே! இப்படி உணர்ந்து
பார்க்கவில்லை என மனம் அடித்துக் கொண்டது. என்றாலும், மாணவர்கள் தனக்கு இப்படி ஒரு
வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததற்காக மிகவும் மகிழ்ந்து போனார். மாணவர்களை நினைக்க நினைக்க
பெறுமையாக இருந்தது.
இந்த மனநிலையோடு மாணவர்களுடன் கல்ந்துறையாடினால் எப்படி
இருக்கும்! என்று கற்பனைச் செய்யத் தொடங்கி விட்டார்.
மறுநாள் வகுப்பறைக்கு ஆவலோடு சென்றார். மாணவ மாணவியரிடம் இலைகளில் ஏன் வெளிர் மஞ்சள் நிறமென கண்டுபிடித்து விட்டீர்களா?
என கேட்டார். யாரிடமும் பதில் இல்லை. ஒரு மாணவி
மட்டும் ஒரு வரைபடத்தை எடுத்து வந்து என்னிடத்தில் கொடுத்தாள். அதில் அதற்கான பதில்
இருந்தது. ஆனால் அந்த மாணவியால் அதை விளக்க முடியவில்லை. அந்த வரைபடத்தை வகுப்பு முழுவதும்
காட்டச் சொன்னேன். எல்லா மாணவ மாணவியர்களும் பார்த்தனர்.
அந்த வரைபடத்தைப் பார்த்த
ஒரு மாணவனுக்கு வியப்பு தாங்கவில்லை. சார்! என சொல்லியபடியே எழுந்து தன் சந்தேகத்தைக்
கேட்டான். “பொதுவாக செல்களில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் காணப்படும், இது என்ன சார் புதுசா மெக்னீசியம் என்ற உலோகம் இருக்கிறது?”
“உனக்கு மட்டுமல்ல அன்றைக்கு இதனைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கும் இது ஆச்சரியமாகதான் இருந்தது” என்று சொன்னபடியே மெக்னீசியத்தின் கதையைச் சொல்ல
ஆரம்பித்துவிட்டார்.
முதலில் தாவரங்களில் பச்சையாக உள்ள இடங்களில்
மட்டுமே ஒளிச்சேர்க்கை நடைபெறும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அதாவது வேர்களோ, பட்டைகளோ, கிளைகளோ, மற்றும் குச்சிகளோ ஒளிச்சேர்க்கை செய்ய முடியாது.
இந்த முடிவிற்கு விஞ்ஞானிகள் வந்த பிறகுதான் தாவரங்கள் பச்சையாக இருப்பதற்கு என்ன காரணமென ஆய்வை
மேற்கொண்டார்கள். இறுதியில், அதாவது 1817-ல் இரு பிரெஞ்சு விஞ்ஞானிகள்
பெல்ட்யாய் மற்றும் கவான்டு இந்த பச்சைப் பொருளை தாவரத்திடமிருந்து பிரித்தெடுத்தனர். இதற்கு பச்சையம்
எனப் பெயரிட்டனர். இந்த பச்சையம் ஒரு சிக்கலான மூலக்கூறுகளாக இருந்ததால் இதைப் பற்றி
முழுமையாக அறிந்துகொள்ள ஒரு நூற்றாண்டு காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று.
இறுதியாக 1906-ல் ஜெர்மன் விஞ்ஞானி வில்ஸ்டேட்டர் பச்சையத்தைப் பிரித்து விரிவாக
ஆராய்ந்தார். அதில் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
அதாவது எந்த ஒரு உயிரினத்தின் மூலக்கூறுகளிலும் கார்பன், ஹைட்ரஜன்,
ஆக்சிஜன், நைட்ரஜன் ஆகிய அணுக்களே இருக்கும். இந்த பச்சையத்திலும் இதுவே காணப்பட்டாலும்
கூடுதலாக மக்னீசியம் இருப்பது தெரியவந்தது. இந்த மெக்னீசியமே ஒளிச்சேர்க்கை முழுமை அடைய உதவுகிறது.
இந்த மெக்னீசியப் பற்றாக்குறை ஏற்பட்டால் தாவரங்களின் இலைகளில் வெளிர் மஞ்சள் தோன்ற
ஆரம்பித்து விடுகிறது. இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு தாவரங்கள் நன்றாக வளர்ந்து தேவையான
மகசூலை வாரி வழங்க முடியாமல் போகும்.
என்ன மாணவர்களே! வெளிர்
மஞ்சளுக்கு காரணமான இந்த மெக்னீசியத்தின் நீண்ட கதையைப் புரிந்துகொண்டீர்களா? என ஆசிரியர்
கேட்டார்.
மிக விரிவாக எடுத்துக் கூறி தெளிவு படுத்தியற்கு
நன்றி ஐயா! என ஒரு சேர மாணவ மாணவியர்கள் ஏழுந்து
நின்று பாராட்டினார்கள்.
மாணவ மாணவியர்களின் பாராட்டுக்கு பதிலாக
ஒரு புன்னகையை மட்டும் வழங்கி விட்டு அடுத்த வகுப்பிற்கு சென்று விட்டார்.
ஆனால் இப்பொழுது மாணவர்களுக்கு குழப்பம் வந்து விட்டது.
இவர் தமிழாசிரியரா? அல்லது அறிவியல் ஆசிரியரா என்று.!
அடுத்த நாள் தமிழாசிரியர் பள்ளிக்குச் சென்றபோது,
தமிழாசிரியர் அறிவியல் ஆசிரியராக மாறிய கதை பள்ளி முழுவதும் வைரலானது தெரிந்து சற்றே
வெட்கப்பட்டார்.
Comments
Post a Comment