அன்று சற்றுத் தாமதமாக வகுப்பிற்குச் செல்ல ஆயத்தமானர் ஆசிரியர்.
அதற்குள் மாணவ மாணவியர்கள் சுதந்திரமாக சப்தமிட்டு மகிழ்வார்கள். இதுவும் ஒருவகையில்
நல்லதுதான். அவர்களின் மனம் சற்றே லேசாகி அமைதி அடையும். ஆசிரியர் மிக மெதுவாக வகுப்பறையை
நெருங்கிவிட்டார்.
மாணவ மாணவியர்கள் ஒரு பாட்டை பாடிக்கொண்டிருந்தார்கள்.ஆசிரியர்
சற்றே நின்று காது கொடுத்துக் கேட்டார்.
One O Alphabet , Two O Oxygen, Three O Ozone, Come on!
come on! Susan!
ஒரு ஓன்னா அல்பபெட், இரண்டு ஓன்னா ஆக்சிசன். மூனு ஓன்னா ஒசோன், ஓடிவாடா
சூசன்!
மாணவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பாடிக்கொண்டே சூசனை மையத்திற்கு
இழுத்தார்கள். அதற்குள் பாட்டைக் கேட்டபடியே உள்ளே நுழைந்தார் ஆசிரியர்.
மாணவ மாணவியர்கள்
ஓடிச்சென்று அவரவர் இடத்தில் அமர்ந்தார்கள். மெல்ல மெல்ல சப்தம் குறைந்து போனது. ஆசிரியர்
சற்றே திரும்பி கரும்பலகையைப் பார்த்தார். அதில் ஒரு செடியை வரைந்திருந்தார்கள். அதிலிருந்து
ஓசோன் வாயு வெளிவருவது போல O3 என செடியைச் சுற்றி எழுதியிருந்தார்கள். ஆசிரியருக்கு
எதுவும் புரியவில்லை. இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், என்ன இதெல்லாம் என்று மாணவர்களைப்
பார்த்துக் கேட்டார். ஒரே அமைதி. சூசன் நீ எழுந்து வெளியே வா! என்ன நடந்தது என அன்பாகக்
கேட்டார்.
சூசன் சற்றே யோசித்தபடியே பேசலானான்.
இன்றைக்கு சுசிலா ஆசிரியை ஒரு செய்தி சொன்னாங்க சார். ஓசோன்
அடுக்கு எப்படி நம்மை பாதுகாக்கிறது என விரிவாக சொன்னாங்க சார். கூடவே அதுல ஓட்டை விழுந்துவிட்டதால்,
சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் நேரடியாக உயிர்களையும் மனிதர்களையும் பாதிக்கிறது.
எனவே இதை பாதுகாப்பதற்கான புதிய சிந்தனைகளை நாம் உருவாக்க வேண்டும் என ஆசிரியை கேட்டுக்கொண்டாங்க
சார்!. அதனால் நம்ம பிரதிபாதான் சார் இப்படி யோசனை செய்து பாட்டா பாடிக்கிட்டு இருந்தாங்க
சார். என்றான் சூசன்.
அப்ப சில தாவரங்கள் ஆக்சிசனுக்குப் பதிலாக ஓசோன் வாயுவை வெளியிட்டா
அது மேலே போயி ஓசோன் அடுக்கை அடைத்துவிடும் என
பிரதிபா நினைக்கிறாங்க இல்லையா! ஆமாம் சார்! என்றனர் மாணவர்கள். உங்கள் சிந்தனை
குழந்தைத் தனமாக இருந்தாலும் ஓசோன் அடுக்கில் விழுந்த ஓட்டையை உடனே அடைத்து விட வேண்டும்.
என்ற உங்கள் ஆர்வத்தை பாராட்டலாம். ஆனால் இது சாத்தியமா? என்ற கேள்வியே நம்முன் நிற்கிறது.
அது சரி இது சாத்தியமா அல்லது சாத்தியமில்லையா என்பதில் நாம் தெளிவு பெற்றாக வேண்டும்.
சார்! துளசி செடி ஒரு நாளில் இருபது மணிநேரம் ஆக்சிஜனை வெளியிடுமாம் சார்! மீதமுள்ள
நான்கு மணி நேரத்தில் ஓசோனை வெளியிடுவதாக வாட்சப்பில் ஒரு செய்தி வந்ததுசார்! இது உண்மையா
சார்! என்றாள் சுவேதா.
சார் என்று எழுந்தான் சங்கரன், என்ன நீ ஒரு புதிய யோசனையைச்
சொல்லப்போகிறாயா? சரி ஆரம்பி என்றார் ஆசிரியர்.
சார் ஆக்சிஜன் என்பது
02 ஆனால் ஓசோன் என்பது 03 அப்படி இருக்கும்போது ஆக்ஜிஜனை விட எடை அதிகமுள்ள ஓசோன் எப்படிசார் மேலே போனது? என்றான் ஆச்சரியமாக.
மாணவர்கள் மிக முக்கியமான கேள்விகளைக் கேட்டுவிட்டார்கள்.
. துளசி மட்டுமல்ல எந்த
தாவரமாக இருந்தாலும் சூரியஒளி இல்லாமல் எப்படி இரவில் ஒளிச்சேர்க்கை செய்ய முடியும் என்பதை நாம் சிந்தித்துப்பார்ரக்க வேண்டும்.
என்ன சுவேதா சரியா!
ஓசோன் வாய்வு தான்
கீழே இருக்க வேண்டும் என்கிறான் சங்கரன். ஆனால் அப்படி இருந்தால் நாமெல்லாம் உயிரோடு
இருக்க முடியுமா? ஆனால் இயற்கை ஏதோ நம் மீது பாசம்கொண்டு நமக்கு சாதகமாக மாற்றி அமைத்திருக்கிறதோ
என்று யோசிக்க வைத்து விட்டாய். உன் சிந்தனைக்கு வாழ்த்துக்கள். இப்படித்தான் மாணவர்கள்
மிக சுதந்திரமாக சிந்திக்க வேண்டும்.
சரி இதுபற்றி அப்புறம்
விரிவாக பார்க்கலாம். என்று சொல்லி விட்டு அன்றைய வகுப்பு பாடத்தை எளிமையாக நடத்தி
விட்டு அடுத்த வகுப்பிற்கு சென்றுவிட்டார் ஆசிரியர்.
மதிய உணவு இடைவேளையின் போது ஆசிரியர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். வழக்கம் போல் அனைவரும் அமர்ந்து
சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். மாலதி ஆசிரியையும் வந்துவிட்டார். ஆசிரியருக்கு மாணவர்கள்
கேட்ட கேள்வியே மனதில் ஓடிகொண்டிருந்தது. மாலதி ஆசிரியருக்கு வணக்கம் சொன்னபடியே மாணவர்கள்
எழுப்பிய கேள்விகளைப் பகிர்ந்துகொண்டார்.
.
ஓ அப்படியா! மாணவர்களுக்கு நீங்கள் அதிகம் சுதந்திரம் கொடுக்கிறீர்கள். நல்லது. உங்கள் முயற்சி தொடரட்டும். அப்பொழுதுதான் மாணவர்களும் எந்த தயக்கமும்
இன்றி கேள்விகள் கேட்பார்கள்.
நான் ஓசோன் அடுக்கைப்பற்றிப் பேசிய ஒரு சின்னச் சொற்பொழிவுக்கு
நல்ல பலன் கிடைத்திருக்கிறது. ஆனாலும் சரியான விடையை நாம் கண்டுபிடித்தாக வேண்டும்
என்றார் ஆசிரியை மாலதி.
சூரிய வெளிச்சத்தை உள்வாங்கி தாவரங்கள் செய்கின்ற
ஒளிச்சேர்க்கையில் ஆக்ஜிஜந்தான் வெளிவருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால்
சில தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது ஓசோன் வாயு வெளிவர வாய்ப்பு இருக்கிறதா என்று
பேச்சைத் தொடர்ந்தார் ஆசிரியர்.
ஒரு
சின்னத் திருத்தம், தாவரங்கள் மட்டும் ஒளிச்சேர்க்கை
செய்யவில்லை. தாவரங்கலோடு சேர்ந்து கடல் மற்றும் பாறைகளில் வாழ்கின்ற பாசி இனங்களும்
ஒளிச்சேர்க்கைச் செய்கின்றன. இதனால் நமது காற்று மண்டலத்தில் நமக்குத் தேவையான ஆக்ஜிஜனை
நாம் பெற்றிருக்கிறோம். நிற்க, நான் உங்கள்
கேள்விக்கு வருகிறேன்.
இந்த
ஒளிச்சேர்க்கையின் மூலம் வெளிவந்த ஆக்ஜிஜன் வாயுவில் இரண்டு ஆக்ஜிஜன் மூலக்கூறுகள்
உள்ளன. இதில் மேலும் ஒரு ஆக்ஜிஜன் மூலக்கூறு சேறும்போது ஓசோனாக மாறுகிறது. இதை ஆக்ஜிஜன்
மூலக்கூறின் மறு உருவம் என்றுகூட சொல்லலாம். எனவே மாணவர்கள் சிந்தித்ததில் தவரில்லை
என்றுதான் நான் சொல்வேன் என்றார் மாலதி ஆசிரியை.
ஆசிரியருக்கு ஒரே வியப்பாக இருந்தது. அப்ப நேரடியாக
தாவரங்கள் ஓசோனை வெளியிடாது. ஆனால் தாவரங்கள் வெளியிடும் ஆக்ஜிஜன் ஒரு குறிப்பிட்ட
சூழ்நிலையில் ஓசோனாக மாறமுடியும் என்பதாக நான் கொள்ளலாமா? என்றார் ஆசிரியர். நீங்கள்
புரிந்துகொண்டது ஒரு வகையில் சரிதான். ஆனாலும் மேலும் இதைப்பற்றி நாம் விரிவாக பேசவேண்டும்
என்றார் மாலதி ஆசிரியை.
அதற்குள் உணவு இடைவேளை முடிந்து ஆசிரியர்கள் அவரவர்
வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்தனர். ஆசிரியரும் மாலதி ஆசிரியைக்கு நன்றி சொல்லி விட்டு
அவர் வகுப்பிற்கு சென்று விட்டார்.
ஆசிரியர் வீடு வந்து சேர்ந்தாலும்
மாணவர்கள் எழுப்பிய கேள்விகளே அவர் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. அப்பொழுதுதான் கவனித்தார்,
ஓசோன் அடுக்கு என்ற தலைப்பில் அழகான வரைபடம் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. ஆசிரியர்
சற்றே அந்த வரைபடத்தை கூர்ந்து கவனித்தார்
.அதில் நல்ல ஓசோன் கெட்ட ஓசோன் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அது என்ன நல்ல ஓசோன், கெட்ட ஓசோன் ஆசிரியருக்கு
ஒரே குழப்பமாக இருந்தது.
ஒரு சில மாதங்களுக்கு முன்னால் நடைபெற்ற அறிவுயல்
கண்காட்சியில் வைப்பதற்காக இந்த வரைபடத்தை இரவு பகலாக பாலா தயாரித்தது ஞாபகத்திற்கு
வந்தது. பாலா ஆசிரியரின் தங்கச்சி மகன். அறிவியலில் ஆர்வம் உள்ளவன். எதாவது கேள்விகள்
கேட்டுக்கொண்டே இருப்பான். நம்மால்தான் பதில் சொல்ல முடியாது. ஏதாவது சாக்கு போக்கு
சொல்லி தப்பிக்க முயன்றாலும் விடமாட்டான். சரியான பதிலைத்தேடி ஓடிக்கொண்டே இருப்பான்.
ஆசிரியருக்கு அவன்மேல் கொள்ளப்பிரியம். இப்படி ஆசிரியர் பாலாவை நினைத்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து அறையிலிருந்து பாலா ஓடிவரும் சப்தம் கேட்டு திரும்பிப்பார்த்தார்.
பாலா நீ எப்ப வந்த? என கேட்டபடியே , சரி! சரி! அதை விடு! நீதானே எங்கிட்ட கேள்வி கேட்ப,
இப்ப நான் உங்கிட்ட ஒரு கேள்வி கேட்க போகிறேன் என்றார் ஆசிரியர். பாலா
உடனே மகிழ்ந்து என்ன கேள்வி என்றார். இதோ சுவரில் மாட்டியுள்ள படத்தை நீதானே வரைந்தாய்!
ஆமாம்! என்றான் பாலா.
அது என்ன? நல்ல ஓசோன் கெட்ட ஓசோன்? எப்படி என்றார் ஆசிரியர்.
பாலா கொஞ்சம் கூட யோசிக்காமல் பட படவென்று பேச அரம்பித்தான்.
இப்ப இந்த வரைபடத்தைப் பாருங்க. இது பூமி இல்லையா! இப்ப இந்த பூமியைச் சுற்றி
காற்றுமண்டலம் இருக்கிறதா! கொஞ்சம் மேலே பாருங்க சூரியன் இருக்கிறதா!. இப்ப சூரியனிலிருந்து
ஒளிக்கதிர்கள் வந்து காற்று மண்டலத்தை முதலாவதாக தொடுகிறதா! ஆமாம்! ஆமாம்! தொடுகிறது
என்றார் ஆசிரியர் ஒரு மாணவனைப்போல. பாலா மேலும் தொடர்ந்தான்.
இப்ப சூரியனிலிருந்து வரும் கதிர்களில் என்ன இருக்கும்! புறஊதாக்கதிர்கள் இருக்கும்
அல்லவா! இந்த புறஊதாக்கதிர்கள் அதிக வெப்பத்தோடு காற்று மண்டலத்தை தாக்குகிறதா! அப்படி தாக்கும் போது காற்றுமண்டலத்தில்
உள்ள ஆக்ஜிசன் அணுக்கள் இரண்டாக உடைகிறது. இப்படி பிரிகிற ஆக்ஜிசன் அணுக்கள் , பிரியாமல்
இருக்கிற மற்ற ஆக்ஜினன் அணுக்களோடு சேர்ந்து ஓசோனாக மாறுகிறது. அந்த மட்டத்தில் அதாவது
கிட்டத்தட்ட பூமியின் தரையிலிருந்து சுமார் முப்பதிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் உயரத்தில்
வெப்பம் அதிகமாக இருப்பதால் ஆக்சிஜன் அணுக்கள் உடைவது சாத்தியமாகிறது. வினைபுரிவதும்
உடனே நிகழ்கிறது. இப்படித்தான் ஓசோன் காற்றுமண்டலத்தில் உருகிறது.
இப்படி ஓசோன் உருவாகிற அதே நேரத்தில், காற்று மண்டலத்தில் உள்ள மற்ற வாயுகள்
, அதாவது நைட்ரஜன், குளோரின், புரோமின் போன்ற வாயுக்களும் வினை புரியும் நிலையில் இருக்கும்
அல்லவா! அவை புதியதாக உருவான ஓசோனோடு வினைபுரிந்து ஓசோனை அழித்துவிடுகிறது. இப்படி
ஓசோன் வாயு உருவாவதும் அதே நேரத்தில் அழிவதுமான இந் நிகழ்வானது தொடர்ந்து நடைபெறுகிறது.
அதேநேரத்தில் ஓசோன் வாயு அழிவது குறைவாக இருப்பதால் ஒருசமநிலையை நோக்கி நகர்ந்து ,
மீதமுள்ள ஓசோன் வாயுகள் ஒருபடலமாக அந்த மட்டத்திலேயே
உருவாக ஆரம்பித்து விடுகிறது. இப்படி இந்த ஓசோன் அடுக்கு உருவாகி இருப்பதால்தான் சூரியனிடமிருந்து
வரும் புறஊதாக்கதிர்கள் தாக்கம் குறைவாக இருக்கிறது. இதனால்தான் பூமியில் வாழ்கின்ற மனிதன் உள்பட அனைத்து உயிரினங்களும் பாதுகாப்பாக இருக்கின்றன.
எனவேதான் இந்த ஓசோனை நல்ல ஓசோன் என்று
விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் என்று ஒரு நீண்ட விளக்கத்தை பாலா சொல்லி முடித்தான். ஆசிரியருக்கு
ஒரே ஆச்சரியம். எட்டாவது படிக்கிற இந்த பையன் எவ்வாறு விபரமாக எளிமையாக எடுத்துச் சொல்கிறான்.
அவனைக் கட்டிப்பிடித்து முதுகில் தட்டிக்கொடுத்தார். பாலா மெல்ல மகிழ்ந்து போனான்.
அது சரி அப்ப கெட்ட ஓசோன் எது? என ஆசிரியர்
விடாமல் கேட்டார். ஓ! அதுவா என மீண்டும்
பேச ஆரம்பித்தான் பாலா.
காற்று மண்டலத்தில் மேலே எவ்வாறு ஓசோன் உருவானதோ அதேபோல எளிதாக நமது சுவாசத்தில் கலந்துவிடுகிற தரைப்பகுதியில்
ஓசோன் உருவாகிறது. இது எப்படி சாத்தியமானது என்றால், இதற்கு மனிதர்களாகிய நாம்தான்
காரணம். நாம் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் கார், பேருந்து, லாரி, இருசக்கரவாகனம் போன்றவற்றிலிருந்து வெளியாகும் நச்சுப்புகையே காரணம். மேலும் மிக முக்கியமாக
பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து வரும் நச்சுப்புகை காரணமாகவும் நமது காற்றுமண்டலம்
சூடாகிறது. இப்படி சூடாவதால் காற்றில் உள்ள ஆக்சிசன் அணுக்கள் அதிர்வுக்கு உள்ளாகி
உடையத்தொடங்குகிறது. அதேநேரத்தில் உடையாத ஆக்சிசன் அணுக்களோடு சேர்ந்து ஓசோனாக மாறுகிறது.
இப்படி உருவான ஓசோன் நேரடியாக நமது
சுவாசத்தில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மூச்சுத்தினறல், ஆஸ்துமா போன்ற
நோய்கள் உருவாகிறது. நமது நாட்டில் உள்ள பெரு நகரங்களில் தனியார் மற்றும் பொது போக்குவரத்தினால் வாகன நெரிசல்
பெரும் பிரச்சனையாக மாறியுள்ளதை நாம் அறிவோம். எனவேதான் இந்த ஓசோனை கெட்ட ஓசோன் என
நாம் அழைக்கிறோம் என்றான் பாலா.
ஓசோன் பற்றி இவ்வளவு விசயமா! ஆச்சரியகாக இருக்கிறது. அதேநேரத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி நமக்கு நாமே தீங்கு விளைவித்துக் கொள்வதே தெரியாமல்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பு வந்தது. உங்களைப்போன்ற மாணவர்கள் நிச்சயம்
இந்த நிலமையை உணர்ந்து புரிய வைப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அதோடு மட்டுமல்ல
இதற்கு மாற்று வழிகள் கண்டு நாமும் மாறிக்கொள்ள வேண்டும் என்ற உத்வேகத்தை நான் பெற்று
விட்டேன். நாம் சேர்ந்து இந்த சூழ்நிலையை சரி செய்ய முயற்சி செய்வோம் என்று ஆசிரியர்
பாலாவை வெகுவாக பாராட்டினார்.
.
அது சரி பாலா எனக்கு மேலும் ஒரு கேள்வி இருக்கிறது.அதாவது ஓசோன் அடுக்கை நாம்
எவ்வாறு சரி செய்வது?என்றார் ஆசிரியர்.
பாலா சற்றே யோசித்து பேசலானான்.
ஓசோன் அடுக்கை நாம் ஒன்றும் சரி செய்ய தேவையில்லை. காலப்போக்கில் அது தானாகவே
சரியாகிவிடும். ஆனால் அது நீண்ட காலம் தேவைப்படும். அதுவரை நாம் என்ன செய்ய வேண்டும்
என்பதுதான் முக்கியம்.
குளோரா புளோரா கார்பன் கூட்டமைவு வாயுக்கள்தான் ஓசோன் அடுக்கை பலமாக தாக்கி
அழிக்க வல்லது. இத்தகைய வாயுக்கள் தொழிற்சாலைகள்
மற்றும் வீட்டு உபயோக மின்சாதனங்கள் வழியாக வெளியாகின்றன. இத்தகைய வாயுக்கள்
காற்றைவிட எடை குறைவாக உள்ளதால் அவை மேலே செல்கின்றன. எனவே அவை ஓசோன் அடுக்கோடு வினைபுரிந்து
பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நாம் இத்தகைய வாயுகள் அதிகம் வெளியாகதபடி தொடர்ந்து கண்கானிக்க வேண்டும். அதோடு நமது சுற்றுச்சூழலை
தொடர்ந்து மேம்படுத்தவேண்டும்.அதாவது மரங்கள் நடுவது, சின்ன சின்ன காடுகளை நமது சுற்றுப்புறத்தில்
ஏற்படுத்துவது போன்ற செயல்களை உறுதியாக வழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். முடிந்தால் அதை ஒரு இயக்கமாகக் கூட தொடர்ந்து நடத்த
நாம் முன்வரவேண்டும் என்றான் பாலா.
பாலாவின் பதிலைக் கேட்டு ஆசிரியர் உள்ளுக்குள் மகிழ்ந்து போனார். மெல்ல பாலாவைத்
தட்டிக்கொடுத்தார். அவனும் மெய்மறந்து நின்றான்..
சாய்வு நாற்களியிலிருந்து எழுந்து முகம் கழுவ சென்றார் ஆசிரியர். முகம் துடைத்து நாற்காலியில் அமர்ந்தார். பாலாவிற்கும் சேர்த்து தேனீர்
வரவழைத்தார்.
இருவரும் சேர்ந்து தேனீர் அருந்தினார்கள்.. தெம்பாக இருந்தது ஆசிரியருக்கு.
மாணவர்கள் எழுப்பிய
எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்ததை ஆசிரியரால் உணர முடிந்தது.
இத்தகைய அறிவியல் பார்வை இருந்துவிட்டால் , நல்ல மருத்துவ குணமுள்ள துளசி போன்ற
தாவரங்களைச் சுற்றித் தவறான நம்பிக்கைகளைப் பரப்புவதை நாம் எளிதாக புரிந்துகொண்டு செயல்படமுடியும் என்ற எண்ணம் ஆசிரியர் மனதில் தோன்றியது.
மாணவர்கள் எழுப்பிய எல்லா கேள்விகளுக்கு நாளை இதே உணர்வோடு பாடம் நடத்த முடியும்
என்ற நினைப்பே அவரை மகிச்சியில் ஆழ்த்தியது.
பாலாவிற்கு நன்றி சொல்லி வாழ்த்தி அனுப்பிவைத்தார்.
Comments
Post a Comment