கரும்பலகைக் கதைகள் புத்தகத்திற்கு முன்னுரை
-வேலுமாமா,புதுச்சேரி
திகட்டாத நினைவுகளின் அதிசயப் பெட்டகம் குழந்தைப் பருவம். நினைக்க நினைக்கத் தித்திக்கும். இப்பருவத்தின் கற்பனைகளாலேயே இந்த உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது . அதோடு வயதில் முதிர்ந்தவர் என்று உலகில் யாரிருக்கிறார் ? உண்மைதான் .வயதில் முதிர்ந்தவர் என்று தேடினால் யார் நம் முன்னே வருவார்கள். அரிஸ்டாட்டிலா , கலிலீயோவா, , நியூட்டனா, புத்தரா , காந்தியடிகளா யாரைச் சொல்வது .இன்று உலகின் மிகமிக வயது முதிர்ந்த ஜப்பானிய மூதாட்டி சியாமியாக்கோ(117வயது) கூட ஒரு பச்சிளம் சிறுமியாய்ச் சிரிக்கிறார் .
உலகின் ஒப்பற்ற மனிதர்களை நினைத்தாலே அவர்களின் கற்பனையும் ஆற்றலும் நிறைந்த அவர்களின் குழந்தைப் பருவமே முன்னெழுகிறது . அவர்கள் படைத்த அதிசயங்களின் இரகசியங்கள் அவர்கள் குழந்தைகளாய் இருந்த போதே உருவாகியிருக்கின்றன .
குழந்தைப் பருவ அட்டகாச அனுபவங்களை கல்வியோடு இணைத்துவிட்டால் உலகில் எண்ணிலா அதிசயங்கள் தோன்றும் எனும் பெருங்கனவில் திருவாளர் ச.அன்பழகன் "கரும்பலகைக் கதைகள்" எனும் கல்வியியல் கதைகளை எழுதியிருக்கிறார் .சிறுவர்களுக்கான கலை இலக்கியப் படைப்புகளைத் தேடும் இந்நாளில் இந்நூல் ஒரு அறிவியல் பரிசு .
'பள்ளிதோறும் ஒரு கோமாளி வேண்டும்' என்று எண்ணும் என்னைப் போன்ற சிறுவர்கள் இக்கதைகளில் வரும் ஆசிரியர் மாணவர் சந்திப்புகளில் 'மகிழ்ச்சி ' எனும் அந்த அருமருந்தின் தேவையை உணரலாம் .
எண்கள் ,எழுத்துக்கள் ,வார்த்தை ,வாக்கியங்கள் தொடங்கி மொழி ,வரலாறு ,கணிதம், அறிவியல் என கற்றலுக்கும் கற்பனைக்குமான கதையாடலை எழுத முற்படுகிறார் ச.அன்பழகன் .
மருத்துவ எண் "99’’ -ஐ கிளிக் செய்து உலகின் மிகப் பெரிய எண் "கூகோல்" என ஆரம்பமாகிறது இக்கதைகள் . பேரீச்சம்பழக் கொட்டைகளால் கட்டப்பட்ட கோட்டைக்குள் புரண்டெழுந்து ஒரு தேர்ந்த ஆசிரியனாகப் பயணம் செய்கிறார் இந்தப் பொறியாள எழுத்தாளர் .
'ரோபர்ட் ஸ்காட் ' என்ற இராணுவத் தளபதியோடு பூமியின் தென் துருவ ஆராய்ச்சிக்குக் செல்லும் 'அமுன்சென்' எனும் அறிவியலாளர், இரும்பையும் தகரத்தையும் துன்புறச் செய்யும் 'டின் பிளேக் 'நோயைக் காண்பது, குக்கிராம வீட்டு மண்பானைகளில் நிரப்பப்பட்ட லேசான கருமை படிந்த உப்பின் சுகம்தரும்
வேதிவினையை கதையாக விவரிப்பது, சிலந்தி வலை மர்மத்தை அவிழ்ப்பது , சின்னச்சிறுவர் வாழ்வுக்குக் "கால அட்டவணை " தந்த மகாகவி பாரதி
முண்டாசைக் கட்டிக் கொண்டு "தராசு" முன் அமர்ந்து எது சரி? எது தவறு? என ஆராய்ச்சிக் செய்வது என எல்லாமே சிறந்த பாடக்கதைகளாய் இருக்கின்றன .
வாட்டியெடுக்கும் கல்விச்சந்தைகளுக்கு நடுவே சின்னச்சிறுவர்களின் மனஉலகை அழகு படுத்த நினைக்கும் திரு ச.அன்பழகனின் கதைகளை குழந்தைகளோடு படித்தும் சொல்லியும் பாராட்டலாம் .
அன்புடன் வேலுமாமா புதுச்சேரி
Comments
Post a Comment