Skip to main content

ஓர் ஆசிரியனாகக் கதை சொல்லும் பொறியாளரை வரவேற்கிறேன்.



       கரும்பலகைக் கதைகள் புத்தகத்திற்கு முன்னுரை

                     -வேலுமாமா,புதுச்சேரி

           திகட்டாத நினைவுகளின் அதிசயப்  பெட்டகம் குழந்தைப் பருவம். நினைக்க  நினைக்கத் தித்திக்கும். இப்பருவத்தின் கற்பனைகளாலேயே இந்த உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது . அதோடு வயதில் முதிர்ந்தவர் என்று உலகில் யாரிருக்கிறார் ? உண்மைதான் .வயதில் முதிர்ந்தவர் என்று தேடினால் யார் நம் முன்னே வருவார்கள். அரிஸ்டாட்டிலா , கலிலீயோவா, , நியூட்டனா, புத்தரா , காந்தியடிகளா  யாரைச் சொல்வது .இன்று உலகின் மிகமிக வயது முதிர்ந்த ஜப்பானிய மூதாட்டி சியாமியாக்கோ(117வயது) கூட ஒரு பச்சிளம் சிறுமியாய்ச் சிரிக்கிறார் .


                உலகின் ஒப்பற்ற மனிதர்களை  நினைத்தாலே அவர்களின் கற்பனையும் ஆற்றலும் நிறைந்த அவர்களின் குழந்தைப் பருவமே முன்னெழுகிறது . அவர்கள் படைத்த அதிசயங்களின் இரகசியங்கள் அவர்கள் குழந்தைகளாய் இருந்த போதே உருவாகியிருக்கின்றன .

குழந்தைப் பருவ அட்டகாச அனுபவங்களை கல்வியோடு இணைத்துவிட்டால் உலகில் எண்ணிலா அதிசயங்கள் தோன்றும் எனும் பெருங்கனவில் திருவாளர் .அன்பழகன் "கரும்பலகைக் கதைகள்" எனும் கல்வியியல் கதைகளை எழுதியிருக்கிறார் .சிறுவர்களுக்கான கலை இலக்கியப்  படைப்புகளைத் தேடும் இந்நாளில் இந்நூல் ஒரு அறிவியல் பரிசு .

'பள்ளிதோறும் ஒரு கோமாளி வேண்டும்' என்று எண்ணும் என்னைப் போன்ற சிறுவர்கள் இக்கதைகளில் வரும் ஆசிரியர் மாணவர் சந்திப்புகளில்  'மகிழ்ச்சி ' எனும் அந்த அருமருந்தின் தேவையை உணரலாம் .

எண்கள் ,எழுத்துக்கள் ,வார்த்தை ,வாக்கியங்கள்  தொடங்கி மொழி ,வரலாறு ,கணிதம், அறிவியல் என கற்றலுக்கும் கற்பனைக்குமான  கதையாடலை எழுத  முற்படுகிறார்   .அன்பழகன் .

மருத்துவ எண் "99’’ - கிளிக்  செய்து உலகின் மிகப் பெரிய எண் "கூகோல்" என ஆரம்பமாகிறது  இக்கதைகள் . பேரீச்சம்பழக்  கொட்டைகளால் கட்டப்பட்ட  கோட்டைக்குள் புரண்டெழுந்து ஒரு தேர்ந்த ஆசிரியனாகப் பயணம்  செய்கிறார் இந்தப் பொறியாள எழுத்தாளர் .

'ரோபர்ட் ஸ்காட் ' என்ற  இராணுவத் தளபதியோடு பூமியின்  தென் துருவ  ஆராய்ச்சிக்குக்  செல்லும் 'அமுன்சென்' எனும் அறிவியலாளர்,  இரும்பையும் தகரத்தையும் துன்புறச் செய்யும்     'டின் பிளேக் 'நோயைக் காண்பது, குக்கிராம வீட்டு  மண்பானைகளில் நிரப்பப்பட்ட  லேசான கருமை படிந்த உப்பின் சுகம்தரும் வேதிவினையை கதையாக விவரிப்பது, சிலந்தி வலை மர்மத்தை அவிழ்ப்பது , சின்னச்சிறுவர் வாழ்வுக்குக் "கால அட்டவணை " தந்த மகாகவி பாரதி முண்டாசைக் கட்டிக் கொண்டு "தராசு" முன் அமர்ந்து  எது சரி? எது தவறு? என ஆராய்ச்சிக் செய்வது என எல்லாமே  சிறந்த பாடக்கதைகளாய் இருக்கின்றன

வாட்டியெடுக்கும் கல்விச்சந்தைகளுக்கு  நடுவே  சின்னச்சிறுவர்களின்  மனஉலகை அழகு படுத்த நினைக்கும் திரு .அன்பழகனின்  கதைகளை குழந்தைகளோடு  படித்தும் சொல்லியும்  பாராட்டலாம் .                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            
  அன்புடன்                                                                                                                                                                                                                                                                                                                     வேலுமாமா   புதுச்சேரி  

Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது....

மாணவர்கள் கொண்டாடிய சுதந்திர தினவிழா

சு தந்திரதின விழாவில் கொடியேற்றி துவக்கி வைப்பதற்காக, மாணவர் நல சங்கம் சார்பில் என்னை அழைத்திருந்தார்கள். முப்பதாண்டுகாலமாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவன் என்ற தகுதி ஒரு காரணமாக இருக்கலாம். மிக முக்கியமான இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக என்னை தயார் செய்துகொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்படும் ஓசைகேட்டு திறந்தேன். கையில் தேசியக்கொடியோடு மாணவர்கள் சீருடையில் வந்திருந்தனர். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. வாங்க! வாங்க! என்று பரவசத்தோடு உள்ளே அழைத்தேன். அனைவரும் ஒரே குரலில் “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! கொண்டாடுவோம்! என்றபடியே ஒரு வண்ண காகிதத்தை கையில் கொடுத்துவிட்டு அடுத்த வீட்டிற்கு சென்றுவிட்டனர். சுதந்திரமே மாணவர் உருவில் வீட்டு வந்தது போல இருந்தது. அவர்கள் கொடுத்துச்சென்ற காகிதத்தின் இரு பக்கத்திலும் பதினைந்து என்று எண்ணால் எழுதப்பட்டிருந்தது. மெல்ல பிரித்து பார்க்க அது எட்டாக மடிக்கப்பட்டிருந்தது. இது சுதந்திரதினத்தை குறிக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. காகிதத்தின் உள்ளே “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! வறுமையற்ற வளமான ஓர் இந்தியாவை உருவாக்குவோம்! ” எ...