Skip to main content

எது நல்ல உப்பு?

ரண்டு இட்லி கொண்டு வரச்சொல்லிவிட்டு அந்த உணவகத்தில் காத்திருந்தேன். அப்பொழுது எனது எதிரே ஒருவர் வந்து அமர்ந்தார். அவர் ஆறுமுகம் ஆசிரியர் என்பதை உடனடியாக அடையாளம் தெரிந்துகொண்டு ‘வணக்கம் ஐயா’! என்றேன். அவரும் என்னை உற்றுக் கவனித்து, அடடே தமிழ்ச்செல்வனா! என்றபடியே எனது கையைப் பிடித்து குலுக்கினார்.

அவர் எனக்கு பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரியராக இருந்தவர். அவரோடு உணவருந்தி கொண்டே பேசுகிற இந்த பொன்னான வாய்ப்பை நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது. ஏனெனில் அவர் எப்பொழுதும் வகுப்பறையைத் தாண்டி பல புதிய செய்திகளை அறிவியல் வழியில் பேசக்கூடியவர்.

அவருக்கும் சேர்த்து இட்லி கொண்டுவரச் சொல்லிவிட்டு ஆறுமுகம் ஆசிரியரோடு பேச ஆரம்பித்துவிட்டேன்.

இருவரும் நலம் விசாரித்து கொண்ட பிறகு, பிரபலமான அந்த உணவகத்தின் ருசி பற்றிய பேச்சு வந்தது. “ருசி எல்லாம் சரிதான், ஆனால் உப்பின் சுவைதான் இங்கு கூடுதலாக இருக்கும்”.என்றேன் நான்.

ஆமாம் நானும் இங்கு பலமுறைச் சாப்பிட்டிருக்கிறேன். இங்கு மட்டுமல்ல பொதுவாக உணவகங்களில் உப்பு சற்று கூடுதலாகத்தான் இருக்கிறது. இந்த சுவை எப்பொழுதும் அளவோடு இருக்க வேண்டும் என்ற உணர்வே இல்லாதவர்களாக நாம் இருக்கிறோம். அதோடு நாம் சுத்திகரிக்கப்பட்ட உப்பையே பயன்படுத்துகிறோம். இதெல்லாம் சரியா என நாம் சிந்திப்பதில்லை”. என்றார் ஆசிரியர். அவரின் அன்புக்குறிய மாணவனாகிய என்னிடம் ஏதோ புதிய செய்தியைச் சொல்லப்போகிறார் என்ற ஆவலோடு நானும் அவரோடு விவாதிக்க ஆரம்பித்தேன்.

என்ன ஐயா! இதற்கு நாம் என்ன செய்வது! எப்பொழுதும் போலதான் உப்பை போடுகிறோம்! என்று எளிதாக சொல்லிவிடுவார்கள்? என்றேன் நான்.

உடலுழைப்பு குறைவாகவும் வேலை பளு அதிகமாகவும் உள்ள தற்போதைய சூழ்நிலையை நாம் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாமா?. தற்போது நமக்கு உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், சிறுநீரக நோய்கள், ஆஸ்துமா மற்றும் இரைப்பைப் புற்று போன்ற பல்வேறு நோய்கள் உப்பு அதிகம் எடுத்துக்கொள்வதால் ஏற்படுகிறது என்பதை செய்தித் தாள்களில் நாம் தினமும் படிக்கிறோம். ஆனால் படித்துவிட்டு எப்பொழுதும்போல் உப்பைப் பயன்படுத்தினால் எப்படி? இது நமது உடலுக்குத் தேவையான சரியான அளவா என நாம் தெரிந்துகொண்டு பயன்படுத்துகிறோமா? அதேபோல் பல்வேறு நிறுவனங்களில் முன்பே தயார் செய்யப்பட்டு கடைகளில் விற்கப்படும உணவுப் பொருட்களில் சரியான அளவில் உப்பு இருக்கிறதா? அல்லது கூடுதலாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டோமா? என அடுக்கடுக்காக கேள்விகளை என்னை நோக்கி வீசினார்.

இவ்வளவுதூரம் நான் யோசித்ததில்லை. ஆசிரியரின் கேள்விகள் அம்பாக என்னைத் தைத்தன. பிள்ளைகள் ஆவளோடு கேட்கிற உருளைக்கிழங்கு சீவல் போன்ற பல்வேறு பாக்கெட் உணவு பொருட்களில் உப்பின் சுவை அதிகம் இருந்தும் அதைப்பற்றி யோசிக்காமல் வெறுமனே பலநேரங்களில் நான் இருந்திருக்கிறேன். வீடுகளிலும் உப்பைக் குறைத்து பயன்படுத்த வேண்டுமென நான் வற்புறுத்தியதில்லை.

மெல்ல ஆசிரியரின் முகத்தைப் பார்த்தேன். அருகருகே நாங்கள் இருந்தாலும் அவரின் சிந்தனையிலிருந்து எவ்வளவு தூரம் நான் விலகி இருக்கிறேன் என்பதை என்னால் உணர முடிந்தது.

அதற்குள் சூடாக வந்த இட்டிலியை சாம்பாரில் தொட்டுச் சுவைத்தப்படியே பேசலானார்.

“மனித இனம் கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உப்பைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக உப்பின் சுவையை நாக்கு உணர்ந்திருந்தாலும், அது கட்டாயம் தேவை என்கிற எண்ணம் மூளையில் ஆழ பதிந்துபோய் இருப்பதால் நாம் உப்பை மிகவும் விரும்புகிறோம். விலங்கினங்களுக்கு உப்பு பற்றாக்குறை ஏற்பட்டால், அவை உப்பைத் தேடி பயணம் மேற்கொள்ளும். உப்பைத்தேடி சுவைத்தப்பிறகே அவை திருப்தி அடையும். நமக்கும் உப்பில்லாமல் சாப்பிட பிடிப்பதில்லை. கொஞ்சம் நாள் உப்பில்லாமல் பத்தியமிருந்தால் நாக்கு உப்பையே தேடிக் கொண்டிருப்பதை, நாமே அனுபவத்தில் புரிந்திருக்கிறோம். நமது முன்னோர்களும் இலையில் உணவு பரிமாறும்போது உப்பையே முதலில் வைப்பது பழக்கமாய் வந்திருக்கிறது. உப்பிற்கே முதல் மரியாதை தந்திருக்கின்றனர். உப்பு உயிர் வாழ்வதற்கு மிக அவசியத்தேவை என்பதை நமது முன்னோர்கள் உணர்ந்தே வந்துள்ளனர். உப்பு பதிணான்காயிரம் வகைகளில் பயன்படதக்கதாக உள்ளது என்கிறார்கள். இருந்தாலும் இன்றைக்கு நாம் உப்பை அறியியல் ரீதியாக புரிந்துகொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதை தெரிந்து செயல்படவேண்டும்” என்றார் ஆசிரியர்.

அவரின் பேச்சு உப்பைப் போலவே சுவையாக இருப்பதால் மேலும் நான் கவனமாக கேட்கத் தொடங்கினேன்.

உப்பு என்பது சோடியம் குளோரைடு என்ற அறியியல் பெயரால் அழைக்கப்படுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.ஆனால் உப்பு என்பதில் சோடியம் என்பதே மிக முக்கியமானதாகும். இந்த சோடியமே ஒவ்வொரு மனித செல்லின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாக செயல்படுகிறது. இது ஒவ்வொரு செல்லுக்கிடையே உள்ள நீர்மத்தை உட்புகவைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. குறிப்பாக செல்லின் வெளிப்புறப்பகுதி செயல்பாட்டிற்கு இதுவே காரணமாகும். செல்லின் உட்புற செயல்பாட்டிற்கு பொட்டசியம் காரணமாக இருக்கிறது. சோடியமும் பொட்டாசியமும் தேவையான அளவில் ஒவ்வொரு செல்லிலும் மாறாமல் இருந்தால் மட்டுமே ஒவ்வொரு செல்லும் தன் வேலையைச் சரியாக செய்து, சத்துக்களை உருவாக்கவும் கழிவுகளை வெளியேற்றவும் முடிகிறது. சோடியமும் பொட்டாசியமும் குறைந்தாலோ அல்லது அதிகமானாலோ செல்கள் பாதிக்கப்பட்டு உடல் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படும்.மேலும் உடலில் உள்ள இரத்தத்திற்கும் , இரத்தத்திற்கு தேவையான வெள்ளை அணுக்களை எடுத்துவரும் திரவத்திற்கும், இரைப்பையில் அமிலம் சுரப்பதற்கும், புரோட்டின் உணவு செரிப்பதற்கும், தசைகள் சரியாக சுருங்கவும், நரம்புகள் செயல்படவும் உடலில் உள்ள திரவ நிலை,அமிலத்தன்மை போன்றவைகளை நிலையாக வைத்திருக்கவும் சோடியம் மிக முக்கியத் தேவையாகும். எனவே நமது உடல் எளிதாக எடுத்துக்கொள்கிற நல்ல சோடியமே நமக்கு தேவையாகும்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உப்புக்கு இவ்வளவு பயன்பாடா என வியக்கத் தோன்றுகிறது.அதற்குள் நானும் ஆசிரியரும் இட்டிலியை சாப்பிட்டு விட்டோம்.அடுத்ததாக பூரி சாப்பிடலாம் என்றார் ஆசிரியர்.எனக்கும் சேர்த்து பூரிக்கு சொல்லிவைத்தேன். அது சரி ஐயா!அதென்ன நல்ல சோடியம்? அப்ப கெட்ட சோடியம் இருக்கிறதா? என்று கேட்டேன்.

இயற்கையில் கிடைக்கும் உப்பையே நமது உடல் எளிதாக கிரகித்துக்கொள்கிறது. நாம் தற்போது கடைகளில் வாங்கி பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட உப்பு சரியானதா என கேள்வி எழுகிறது. ஏனெனில் உப்பை சுத்திகரிப்பு செய்யும்போது கிட்டத்தட்ட அறுபதிற்கும் மேற்பட்ட தனிமங்களையும், உடலுக்கு தேவையான சில சத்துக்களையும் நாம் இழக்கிறோம். அதுமட்டுமல்ல உப்பைச் சுத்திகரிப்பு செய்யும்போது ஏற்படும் அதிகப்படியான வெப்பம் உப்பை வெகுவாகப் பாதிக்கிறது. சோடியம் அலுமினோ சிலிகேட் , அலுமினோ கால்சியம் சிலிகேட் போன்ற வேதியியல் பொருட்களைக் கொண்டு உப்பு சுத்திகரிக்கப்படுவதால் , இதிலுள்ள அலுமினியமும் உப்பில் தங்கிவிடுகிறது. இது நமது உடலில் அதிகமாக சேருகிறபோது உடலுக்குக் கேடாக மாறுகிறது. அதோடு மட்டுமல்லாமல் உப்பின் இயற்கையான சுவையையும் இது கெடுத்து விடுகிறது. இதை சரி செய்ய சுத்திகரிக்கப் பட்ட உப்பில் சிறிதளவு சர்க்கரையும் சேர்க்கப்படுகிறது. எனவே சுத்திகரிக்கப்பட்ட உப்பு சாதாரண உப்பிலிருந்து வெகுவாக விலகியே இருக்கிறது. அதாவது சாதாரண உப்பு நமது உடலுக்கு செய்த இன்றியமையாத வேலைகளை இந்த சுத்திகரிக்கப்பட்ட உப்பால் செய்ய முடியாமல் போகிறது. இதனால் நமது உடல் பல்வேறு நோய்களுக்கு இலக்காகிறது. எனவே நாம் சுத்திகரிக்கப்படாத சாதாரண உப்பையே பயன்படுத்த வேண்டும். இப்படித்தான் நல்ல சோடியம் கெட்ட சோடியமாக மாற்றப்பட்டுவிட்டது.

ஆரோக்கியம் என்ற பெயரில் தற்போது பயன்படுத்தப்படும் இந்த சுத்திகரிக்கப்பட்ட உப்பை நாம் தொடர்ந்து பயன்படுத்தக்கூடாதா? என்று ஆர்வத்தோடு கேட்டேன். “ஆம்! கண்டிப்பாக கூடாது.அதுமட்டுமல்ல இது நடைமுறயில் தேவையான அளவுக்கு அதிகமாகவே நாம் உட்கொள்கிறோம்.”என்றார் ஆசிரியர்.

நான் ஆசிரியரின் முகத்தை கவனத்துடன் ஆழமாக பார்த்தேன். அதற்குள் சூடாக வந்த பூரியின் மீது கவனம் சென்றது. மெல்ல சாப்பிட ஆரம்பித்தோம்.அவரே என் கேள்விக்கு பதில் சொல்லத் தொடங்கினார்.

நான் ஆரம்பத்தில் கூறியதுபோல , ‘உப்பைப் பற்றிய உணர்வே இல்லாதவர்களாக நாம் இருக்கிறோம்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை நாம் இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். அதாவது சுத்திகரிக்கப்படாத சாதாரண உப்பே நமது உடலுக்கு ஏற்றதாகும். உணவுக்கு சுவை கூட்டமட்டுமல்ல, உணவு பொருட்களைப் பதப்படுத்தவும் பாதுகாக்கவும் அந்த காலத்திலிருந்தே உப்பு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. கர்ப்பப்பையின் பனிக்குடத்தில் உள்ள உப்பு நீரே குழந்தை பாதுகாப்பாக வளர உதவுகிறது. உடலில் இரத்தம் உள்ளிட்ட நீர்மங்கள் யாவற்றிலும் உப்பு கலந்தே காணப்படுகிறது. எனவே உப்பு இயல்பாகவே நம்மோடு கலந்தே உள்ளது.

அது சரி ஐயா! அப்ப உப்பின் சிறப்புத் தன்மைகள் என்ன,கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்க ஐயா?என்றேன்.

சாதாரண கடலுப்பில் சோடியம் குளோரைடு 98% சதவீதமும் இதர உப்புகள் (தனிமங்கள் ) 2% சதவீதமும் உள்ளன. இந்த 2% சதவீதத்தில் எண்பது(80) இதர உப்புகள் உள்ளன. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? கடல் தண்ணீரை நம்மால் செயற்கையாக உருவாக்க முடியுமா? இதுதான் இயற்கை நமக்கு அளித்த மிகப்பெரிய கொடை. இது கடல் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு உறுதுணையாக தொடர்ந்து இருந்து வந்துள்ளது. உப்பு என்பது இந்த 2% சதவீத இதர உப்புகளும் சேர்ந்ததுதான். இந்த இயற்கையான உப்பை எதற்கு நாம் சுத்திகரித்து பயன்படுத்தவேண்டும். இதனால் நமது உடலுக்கு எவ்வளவு பெரிய இழப்பு ஏற்படுகிறது தெரியுமா? இந்த 2% சதவீத இதர உப்புகளில்தான் உயிர்காக்கும் மிக முக்கிய தனிமங்கள் அடங்கியுள்ளன. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? இதில் சல்பர், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், சிலிகான், கார்பன், இரும்பு, அலுமுனியம், பிரசோடைமியம், ஸ்டோன்டியம், துத்தநாகம், தாமிரம், இர்பியம், டின், மெக்னீசியம் ,செரியம், ப்ளோரைடு, ரூபிடியம், காலியம், போரான்,டைட்டானியம், ப்ரோமைடு போன்ற பல்வேறு தனிமங்கள் உள்ளன. இத்தகைய மிக முக்கிய தனிமங்கள் இயற்கையான உப்பில் இருக்கும் போது வெறும் சோடியத்தை மட்டும் நாம் பயன்படுத்துவது இயற்கைக்கு எதிரானது அல்லவா? உப்பின் இடத்தை சோடியத்தால் எப்படி இட்டு நிரப்ப முடியும்?

ஆம்!நிச்சயமாக முடியாது. இது இயற்கைக்கு விரோதமானததுதான். இதில் சந்தேகமே இல்லை. விலை மதிப்பில்லாத உன்னதமான இந்த உப்பை விட்டு, நாம் ஏன் தூர விலகிப்போனோம்?. என்ன நேர்ந்தது இடையில்? என்று நான் ஆசிரியரைக் கேட்டேன்.

அதற்குள் “வேற என்ன வேனும் ஐயா! என்றபடியே உணவக ஊழியர் குறுக்கிட்டார். சற்று நேரம் கழித்து இரண்டு காபி கொண்டுவாங்க! என்றேன்.

அதற்குள் எனது ஆசிரியர் என்னைப் பார்த்தப்படியே பேசலானார்.

இந்தியாவில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன்புதான் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிற இந்த சுத்திகரிக்கப்பட்ட உப்பு புழக்கத்திற்கு வந்தது. பழைய கல்லுப்பு லேசாக கருமை படிந்த நிறத்தில் இருக்கும். சற்றே ஈரப்பிசுப்பிசுப்புடன் காணப்படும். பானைகளில் கொட்டிவைத்து பயன்படுத்தி வந்தனர். இது நீண்ட நாள்களுக்கு தாக்குபிடிக்காமல் இருக்கும். ஆனால் இந்த சுத்திகரிக்கப்பட்ட உப்பு பார்க்க வெள்ளையாக அழகாக இருக்கும். நன்றாக தூளாக்கப்பட்ட இந்த உப்பு எளிதில் பயன்படுத்தும் வகையில் இருந்தது.இதில் ஈரப்பிசுப்பிசுப்பைப் பார்க்க முடியாது. எனவே இது மக்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் அயோடின் பற்றாக்குறையை மிகைப்படுத்தி பரப்புரைச் செய்யப்பட்டதால், மக்கள் இந்த அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவதே ஆரோக்கியம் என கருதி வாங்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் அதன் பாதக அம்சங்கள் குறித்து அவ்வவ்பொழுது செய்திகள் வந்தாலும் அவை இன்னும் வலுவான கருத்தாக மாறவில்லை.

இந்த சுத்திகரிக்கப்பட்ட உப்பு உணவு பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை.ஏனெனில் உணவுக்கான உப்பின் பயன்பாடு மொத்த உற்பத்தியில் ஏழு விழுக்காடு மட்டுமே. மீதமுள்ள சுத்திகரிக்கப்பட்ட உப்பு தொழிற்சாலைகளுக்குச் செல்கிறது. வெடிமருந்து, சோடா, உரம் போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்க இந்த சுத்தமான சோடியம் தேவைப்படுகிறது. இதில்தான் நிறைய லாபமும் கிடைக்கிறது. எனவே உணவு பயன்பாட்டிற்கு இந்த சோடியம் தேவையில்லை. தற்போதய சூழலில் இந்த சோடியத்தை தொடர்ந்து பயன்படுத்தினால் பல்வேறு நோய்கள் நம்மை வந்து தாக்கிக்கொண்டே இருக்கும். எனவே சுத்திகரிக்கப்படாத இயற்கை உப்பை நோக்கியே நாம் செல்ல வேண்டும்.

இயற்கையை நோக்கிச் செல்லவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் கிடையாது. அனால் நாம் இதை எப்படி சாதிக்கப் போகிறோம்?.என்றபடியே ஆசிரியரைப் பார்த்தேன். ஆசிரியரோ அமைதியாக பேசலானார்.

“உப்பைப்பற்றி விழிப்புணர்வை உண்டாக்க உலக அளவில் பல அமைப்புகள் செயல்படுகின்றன. குறிப்பாக “உப்பு மற்றும் சுகாதாரத்திற்கான உலக நடவடிக்கை [WORLD ACTION ON SALT AND HEALTH} எனும் அமைப்பு இரண்டாயிரத்து ஐந்திலிருந்து பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. உப்பை நாம் எந்த அளவுகளில் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும். நமது வீடுகளில் மட்டுமல்ல , வெளியில் உள்ள உணவகங்கள் மற்றும் முன்பே தயாரித்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அனைத்து வகையான உணவுப் பொருட்களில் எவ்வளவுச் சோடியம் இருக்க வேண்டும், போன்ற பல்வேறு அம்சங்களில் இந்த அமைப்பு தலையிடுகிறது. உப்பு குறித்த பல்வேறு செய்திகளைப் பகிர்ந்துகொள்ள ஒவ்வொரு மாதமும் செய்தி மடல் வெளியிடப்படுகிறது. அதுமட்டுமல்ல முன்பே தயார் செய்யப்படும் அனைத்து உணவுப்பொருட்களில் எவ்வளவு உப்பு இருக்க வேண்டும் என்பதை அறிஞர்களைக் கொண்ட குழுவை அமைத்து விவாதித்து சட்டமே இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு கடுமையான தண்டைனைகளும் உள்ளன. குறிப்பாக குழந்தைகளுக்காக தயாரிக்கப்படுகிற உணவுப் பொருட்களில் தேவைக்கு அதிகமாக உப்பை சேர்க்கப்படுவதை எதிர்த்து போராடிவருகிறது. தொழிற்சாலைகள், பல்வேறு உணவகங்களில் சர்வதேச உப்பின் குறைந்தபட்ச அளவுகள் பின்பற்றப் படுகின்றனவா? என்பதையும் ஆய்வு செய்து செய்திகளை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மட்டுமல்ல உரிய சட்டங்கள் இயற்றவும் இவ்வமைப்பு தொடர்ந்து போராடிவருகிறது.பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது” என்றார் ஆசிரியர்.

.“நாம் சாதாரணமாக நினைத்த இந்த உப்பு சட்டம் இயற்றும் அளவுக்கு பல்வேறு நாடுகளில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. உப்பிற்கான அமைப்புகள் நமது நாட்டில் உள்ளனவா என தெரியவில்லையே!” என்றேன்.

அதற்குள் சூடாக வந்த காபியை ஆற்றி சுவைத்தோம்.‘ இங்கு காபி நல்லாயிருக்கு ’என்று பாராட்டியபடியே மேலும் பேசலானார்

“உப்பைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பு இந்தியாவிலும் இருக்கலாம்.ஆனால் செயல்படுகிறதா என தெரியவில்லை.உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கவேண்டும் என்பார்கள்.ஆனால் உணவு பொருட்களில் அதிகம் உப்பிட்டு நமது உடலுக்கு கேடு விளைவிப்பவர்களை என்ன செய்வது? போதிய விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.அதேபோல சுத்திகரிக்கப்பட்ட உப்பை பயன்படுத்துவதிலிருந்து உடனடியாக விலகமுடியாவிட்டாலும், மெல்ல மெல்ல நாம் விலகியே ஆக வேண்டும்.சுத்திகரிக்கப்படாத சாதாரண உப்பையே நாம் பயன்படுத்த துவங்கவேண்டும். இனி நாம் சாதாரண உப்பு என்று அழைக்கவேண்டாம். உண்மையில் உடலுக்குத் தேவையான மிக முக்கிய சத்துக்கள் அடங்கிய இந்த உப்பை சக்தி உப்பென்றே அழைக்கலாம்.அதோடு இந்த உப்பையும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்” என்றார் ஆசிரியர்.

எனக்கோ மிகப்பெரிய சக்தி கிடைத்தது போல இருந்தது. உப்புக்கான இயக்கத்தை நாமே ஆரம்பிக்கல்லாம் என்றேன். ஆசிரியரும் சரி என்றார்.

அதற்குள் உணவக ஊழியர் வந்து பில்லை நீட்டினார். சிற்றுண்டிக்கான காசை ஆசிரியரே முந்திகொண்டு கொடுத்தார்.

உப்பைப் பற்றிய புதிய உணர்வு பெற்றவனாக, அந்த உணவகத்தை விட்டு வெளியே வந்தேன். ஆசிரியர் அன்பாக கைகுலுக்கி என்னை அனுப்பிவைத்தார்.

Comments

  1. இக்கட்டுரையை நான் வண்ணக்கதிரில் பயன்படுத்திக்கொள்கிறேன் தோழர்.

    ReplyDelete
  2. அன்பழகன்December 10, 2011 at 9:13 AM

    நன்றி தோழர்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அந்த நேரம் பார்த்து தலைமை ஆசிரியர் அவரை அழைப்பதாகச் சொல்ல, மாணவ மாணவியரிடம் ஆளுக்கு

வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு

  வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு இ ராபர்ட்   ஐந்தாம் வகுப்பில் புதியதாக வந்து சேர்ந்திருந்தான் . பார்ப்பதற்கு வெள்ளைக்காரரைப் போல சிவப்பாக இருந்தான் . யார் வகுப்பிற்கு வந்தாலும் அவனையே விசாரித்தார்கள் . வகுப்பறையைத் தாண்டி பள்ளி முழுவதுமே அவனையே   வியப்பாக   பார்த்தார்கள் .   இ ராபர்ட் வந்ததிலிருந்து இ ராமு தன் நிறத்தையே அடிக்கடிப் பார்த்துக்கொண்டான் . கருப்பாகவும் இல்லை . வெள்ளையாகவும் இல்லை . இரண்டு நிறமும் கலந்த மாதிரி இருந்தது . நாம் ஏன் சிகப்பாக பிறக்க வில்லை என்று தனக்குள் கேட்டுக்கொண்டான் . சிவப்பாக இருந்தால் ஏன் இப்படி மதிப்பாக பார்க்கிறார்கள்   என்பதை   ராமுவால் புரிந்துகொள்ள   முடியவில்லை . இ ராமு தன் நண்பர்களிடம் அடிக்கடி இது பற்றி கேட்டான் . அதெல்லாம் ஒன்னுமில்லடா , நம்ம கண்ணுக்குத் தான் அப்படி அழகா தெரியுது ! நீ நல்லா படித்து முதல் ரேங்க் எடுத்தா அப்புறம் உன்னைப்பற்றியே எல்லோரும் பேசுவார்கள் . ராமுவுக்கு இது சரி என்று பட்டாலும் . மனம் மட்டும் கேட்பதாக இல்லை . என்ன செய்வதென்று யோசிக்கத்தொ