மாஞ்சாலையில்
இன்று
நடந்து பார்க்கிறேன்!
கொளுத்தும் வெய்யிலில்
ஒதுங்க நிழலின்றி
வெறிச்சோடிக்கிடக்கும்
மாஞ்சாலையில்
இன்று
நடந்து பார்க்கிறேன்
பழைய ஞாபகச் சுவடுகள்
என் முன்னால் நடைபோடுகின்றன!
தாத்தா மாஞ்சாலையைக்
குத்தகைக்கு எடுத்துவிட்டால்
வீடெங்கும் மாம்பழவாசனைதான்!
மாங்காயின் காம்புகளிலிருந்து
வெடித்துக்கிளம்பும்
பாலின் எரிப்புவாசனை
கூடவே சேர்ந்து வீசும்!
வீட்டுச்சுவரிலும் தரையிலும்
கறைப் படிந்தபடியே இருக்கும்!
தாத்தாவின் வேட்டியும்
பாட்டியின் புடவையும்
கறைப் பட்டு பட்டு
சாக்குப் போல மாறிவிடும்!
மாம்பழ சீசன் முடியும்வரை
ஓயாத உழைப்புதான்.
வியாபாரிகள் வந்தபடியே
இருப்பார்கள்!
குழம்பில் கரையாத
கல்மாங்காயைக் கேட்டபடி
பெண்கள் வந்தபடியே
இருப்பார்கள்!
ஊரெங்கும் மாம்பழவாசனையும்
பேச்சுமாகவே இருக்கும்.
கொட்டக்கச்சி,மாவுக்கா,
ஆட்டுக்கறி மாங்கா,
வாழைக்கா மாங்கா,
ருமேனியா,கொட்டமாங்கா,
பச்சரிச்சி மாங்காய்,
என வகை வகையாய்
இளைஞர்கள் பெயர்
வைத்தபடியே இருப்பார்கள்!
அனில்கடித்த பழம் பொறுக்க
சிறுவர்கள் மாஞ்சாலையைச்
சுற்றியபடியே இருப்பார்கள்!
மாங்காய் ஊருகாய் போட
முற்றிய மாங்காய்களை
உறவுப்பெயர் சொல்லி
பெண்கள்
கேட்டப்படியே இருப்பார்கள்!
மாங்காய் பச்சடியோடு,
மாங்காய்-தேங்காய் ஊருகாய்
அரைத்து வைத்தால்
பழையதும் சுடுசோறும்
தானாக இறங்கும்!
இப்படி ஊரின்
வாழ்வோடு கலந்திட்ட
மாஞ்சாலை இன்றில்லை!
மாஞ்சாலையில்
இன்று
நடந்து பார்க்கிறேன்.
பழமூட்டைகளை
வண்டிகட்டி
பாண்டியில் விற்றது
கனவு போல் தோன்றுகிறது
கூத்தியாவீட்டுக்கு
மாம்பழமூட்டைப்போவதாக
பாட்டி சண்டைப் போட்டது
ஞாபகத்திற்கு வருகிறது!
மாம்பழங்களை கல்வீசி
திருடித் தின்றதும்
ஞாபகத்திற்கு வருகிறது!
சூரிய ஒளி
தரையில் படாத
அந்த மாஞ்சாலை இன்றில்லை!
மா, புளி மரங்களை
மீண்டும் நட்டு வளர்க்க
ஏன் தோன்றவில்லை எவர்க்கும்?
பெயர் மட்டும்
மாஞ்சாலை
என்றிருந்தால் போதுமா?
நம் பிள்ளைகளுக்கு
இந்த கவிதை மட்டும் போதுமா?
இன்னொரு மாஞ்சாலை
வேண்டாமா?
Comments
Post a Comment