Skip to main content

ஒரு சொல் ஒரு வெற்றி

ந்த தகவல் கையில் கிடைத்தப் பிறகு இராமமூர்த்தியால் சும்மா இருக்க முடியவில்லை. ஊர்த் தலைவரே இப்படி செய்தால் என்ன செய்வது? அதுவும் இவரைப் போன்றவர்களை எப்படி எதிர்ப்பது? ஒரே குழப்பமாக இருந்தது. முன்னாள் ஆசிரியர் கோவிந்தன் ஞாபகத்திற்கு வந்தார். அவர் சொன்ன ஒரு யோசனை யானைப் பலத்தைத் தந்தது. அவரை நினைத்து பெருமை பட்டான். மெல்ல இவன் மனதில் ஒரு திட்டம் உருவானது. விளையாட்டுக்கழகம் முதன்முறையாக ஊர் பிரச்சனையில் தலையிடப்போகிறது. தனது விளையாட்டுக் கழக நண்பர்களை சந்தித்து பேசினான்.அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். நாம் அனைவரும் ஒன்றே போல் பேச வேண்டும். அதே நேரத்தில் உருக்கு போன்று உறுதியாக இருக்க வேண்டும். என்ன நேர்ந்தாலும் எடுத்த முடிவை அமுல்படுத்துவதிலேயே குறியாக இருக்க வேண்டும். ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. மீண்டும் அனைவரும் சபதம் எடுத்தார்கள். வெற்றி நிச்சயம் என்றபடியே கலைந்து சென்றார்கள்.


அன்று கிராம வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்பு மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். கிட்டத்தட்ட ஊரே கூடி விட்டது. என்ன ஏதென்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். மெல்ல மெல்ல விபரம் புரிய ஆரம்பித்தது. விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஊர் தலைவர் மீது ஊழல் செய்துவிட்டதாக தட்டி எழுதி வைத்துவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஊர் தலைவர் தட்டியை எடுக்க துடியாய் துடிக்கிறார். அப்பொழுதுதான் இராமமூர்த்தி அங்கு வந்து சேர்ந்தான். தட்டியை நாங்கதான் வைத்தோம். அதுவும் ஏழை விவசாயிகளுக்கு கடன் கொடுக்காமல் கந்துவட்டிக்கு விடும் வியாபாரிகளுக்கு கடன் கொடுத்துள்ளீர்கள். இது ஞாயமா? இதை அம்பலப்படுத்த வேண்டுமென்றுதான் தட்டிவைத்தோம்.உங்களால் முடிந்தால் எடுத்துப் பாருங்கள் என்றான்.


இராமமூர்த்தி தைரியமானவன். இந்த வங்கியின் மேலாளரை இதற்கு முன்பு அம்பலப்படுத்தி இருக்கிறான்.மண்ணெண்ணை, பாமாயில் போடும் போது தராசுத்தட்டின் எடைக்கல் அடியில் காந்தத்தை வைத்துவிட்டார்கள். தராசின் அடுத்தத் தட்டில் எண்ணெய் ஊற்றும்போது எடைக்கல் இருக்கும் தட்டு காந்தத்தால் சட்டென கீழே இறங்கிவிடும். அதாவது எண்ணெய் குறைவாக ஊற்றும்போதே தராசுமுள் எடைப்பக்கம் சாய்ந்துவிடும். ஒரு லிட்டர் வாங்குபவருக்கு முக்கால் லிட்டர் மட்டுமே கிடைக்கும்.அதாவது ஒரு லிட்டருக்கு கால் லிட்டர் கொள்ளை அடித்தனர். இதை கவனமாக கண்டுபிடித்தது இந்த இராமமூர்த்திதான்.வங்கி மேலாளரை ஊர் முன்னிலையில் ஒப்புக்கொள்ள வைத்தான். ஊர்மக்களுக்கு இராமமூர்த்தியை பார்த்தவுடன் இந்த ஞாபகம் வராமல் இருக்காது.


ஊர்மக்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தனர். ஊர்த்தலைவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் பேசிக்கொண்டிருந்தனர். இதைத்தான் இராமமூர்த்தி எதிர்பார்த்தான்.உடனடியாக மற்ற இளைஞர்களும் வந்து சேர்ந்தனர். “போயிம் போயிம் இந்த ஏழைகளின் விவசாயக்கடனிலா ஊழல் செய்ய வேண்டும்? நமது பிழைப்பில் ஊர்த்தலைவர் மண்ணல்லிப் போடலாமா”? என ஆவேசமாக கூட்டத்தில் ஒருவர் பேசினார். ‘இப்படி பேசுனா மட்டும் போதாதுப்பா! நாமும் இந்த இளைஞர்களை ஆதரிக்கவேண்டும்’ என்றார் இன்னொருவர்.


அப்பொழுது இராமமூர்த்தியின் குரல் இன்னும் ஓங்கி ஒலித்தது. ‘என்ன நடந்தாலும் தட்டியை எடுக்க முடியாது. உண்மையான விவசாயிகளுக்கு கடன் கிடைத்தாக வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஒயாது.எல்லா ஆதாரமும் என்னிடத்தில் உள்ளன’ என்று துணிந்து பேசினான்.ஊர்மக்களின் ஒருபகுதி இராமமூர்த்திக்கு ஆதரவாக குரல்கொடுக்க ஆரம்பித்தனர்.

திடீரென ஊர்மக்களை விரட்டியபடியே காவலர்கள் வந்து சேர்ந்தனர். “நல்லா இருந்த ஊரை இப்படி தட்டிவைத்து கெடுத்திட்டீங்களேப்பா! தட்டியை எடுத்திடுங்க, ஊழல் இருக்கா இல்லையான்னு நாங்க பார்த்துக்கொள்கிறோம்”என்று ஒரு காவலர் இராமமூர்த்தியைப் பார்த்து சீறினார்.“உண்மையான விவசாயிகளுக்கு கடன் கொடுத்தா தட்டியை நாங்க எடுத்திடுவோம்”என அனைத்து இளைஞர்களும் ஒரே குரலில் சொன்னார்கள். உடனே ஊர் மக்களின் ஆதரவு குரலும் ஆங்காங்கே எதிரொலித்தன. ஊர் முழுவதும் இளைஞர்கள் பக்கம் திரும்பிவிடுமோ என்ற அச்சம் ஊர்தலைவருக்கு எழுந்துவிட்டது.


காவலர்களும் ஊர்தலைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். மோதலா, சமாதானமா என்பதை கண்ணாலயே பேசிக்கொண்டனர்.


உடனே பின்னாலிருந்த காவலர்கள் தடியடியை ஆரம்பித்துவிட்டனர்.ஊர் மக்கள் ஆளுக்கொரு பக்கம் ஓடினர். இளைஞர்களை நோக்கியும் தடியடி நடத்தினர்.சிதறி ஓடிய இளைஞர்கள் சாலையை மறித்துக்கொண்டனர். இதை பார்த்துக்கொண்டிருந்த ஊர்மக்களுக்கு திடீரென வேகம் பிறந்தது. அவர்களும் சாலை மறியல் செய்தனர். காவலர்கலாள் சமாளிக்க முடியவில்லை ,பிரச்சனை பெரிதாக மாறிவிட்டது. இளைஞர்கள் உரக்க உரிமைக்குரல் எழுப்பியபடி இருந்தனர்.அதற்குள் காவலர்கள் அதிகம் பேர் குவிக்கப்பட்டனர்.. அதனைத்தொடர்ந்து தாசில்தார் வந்து சேர்ந்தார். இளைஞர்கள் தாசில்தாரைச் சூழ்ந்துகொண்டு ஆதாரத்தோடு ஊழலை அம்பலப்படுத்தினர்.உண்மையான விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்கவேண்டுமென ஆவேசமாக பேசினர்.


“தீர விசாரித்து உகந்தவர்களுக்கு உரிய கடன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்கிறேன், தயவுசெய்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்றார்.

நீங்க சொல்வதை நாங்கள் கேட்கிறோம். ஆனால் இதை உடனடியாக ஒரு ஒப்பந்தமாக எழுதி கையெழுத்து போட்டுத் தாருங்கள் என்றான் இராமமூர்த்தி.தாசில்தாரும் ஒப்புக்கொண்டார். சிறிது நேரத்தில் ஊரில் அமைதி மீண்டும் திரும்பியது.


ஒருவாரம் கழித்து விண்ணப்பித்திருந்த அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைத்தது. ஊரே இராமமூர்த்தியையும் இளைஞர்களையும் பாராட்டியது.



ஆனால் இராமமூர்த்திக்கு மட்டும் கோவிந்தன் ஆசிரியர் நினைவுக்கு வந்தார். அவர் சொன்ன வாசகங்கள் நினைவுக்கு வந்தன. “தனிமனிதன் எதையும் சாதிக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு அமைப்பாக இணைந்து ஒரு நல்ல குறிக்கோளுக்காக உறுதியாக , மக்களோடு இணைந்து செயல்பட்டால் நிச்சயம் சாதிக்க முடியும்”


மீண்டும் மீண்டும் இராமமூர்த்திக்கு இந்த வாசகங்கள் யானை பலத்தை வழங்கிக்கொண்டிருக்கின்றன.

Comments

  1. “தனிமனிதன் எதையும் சாதிக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு அமைப்பாக இணைந்து ஒரு நல்ல குறிக்கோளுக்காக உறுதியாக , மக்களோடு இணைந்து செயல்பட்டால் நிச்சயம் சாதிக்க முடியும்”

    சிறப்பான பதிவு

    ReplyDelete
  2. -புதுச்சேரி அன்பழகன்.January 27, 2011 at 7:57 PM

    விடுதலைக்கு நன்றி.சரியான விமர்சனம்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை

வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு

  வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு இ ராபர்ட்   ஐந்தாம் வகுப்பில் புதியதாக வந்து சேர்ந்திருந்தான் . பார்ப்பதற்கு வெள்ளைக்காரரைப் போல சிவப்பாக இருந்தான் . யார் வகுப்பிற்கு வந்தாலும் அவனையே விசாரித்தார்கள் . வகுப்பறையைத் தாண்டி பள்ளி முழுவதுமே அவனையே   வியப்பாக   பார்த்தார்கள் .   இ ராபர்ட் வந்ததிலிருந்து இ ராமு தன் நிறத்தையே அடிக்கடிப் பார்த்துக்கொண்டான் . கருப்பாகவும் இல்லை . வெள்ளையாகவும் இல்லை . இரண்டு நிறமும் கலந்த மாதிரி இருந்தது . நாம் ஏன் சிகப்பாக பிறக்க வில்லை என்று தனக்குள் கேட்டுக்கொண்டான் . சிவப்பாக இருந்தால் ஏன் இப்படி மதிப்பாக பார்க்கிறார்கள்   என்பதை   ராமுவால் புரிந்துகொள்ள   முடியவில்லை . இ ராமு தன் நண்பர்களிடம் அடிக்கடி இது பற்றி கேட்டான் . அதெல்லாம் ஒன்னுமில்லடா , நம்ம கண்ணுக்குத் தான் அப்படி அழகா தெரியுது ! நீ நல்லா படித்து முதல் ரேங்க் எடுத்தா அப்புறம் உன்னைப்பற்றியே எல்லோரும் பேசுவார்கள் . ராமுவுக்கு இது சரி என்று பட்டாலும் . மனம் மட்டும் கேட்பதாக இல்லை . என்ன செய்வதென்று யோசிக்கத்தொ

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அந்த நேரம் பார்த்து தலைமை ஆசிரியர் அவரை அழைப்பதாகச் சொல்ல, மாணவ மாணவியரிடம் ஆளுக்கு