எனது நண்பர் குழந்தைகளுக்கான குறுந்தகடு ஒன்றை அன்பளிப்பாக கொடுத்திருந்தார்.அதை மறக்காமல் பள்ளிக்கூடத்திற்கு இன்று எடுத்து வந்தேன். நான் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆசிரியர். புதிய விடயங்களை தயங்காமல் எடுத்துச்சொல்வதில் விருப்பமுள்ளவன். ஆதலால் இன்று பாடங்கள் நடத்திய பிறகு, இந்த குறுந்தகட்டை மாணவர்களிடம் கொடுத்து கணினியில் போட்டு பார்க்குமாறு கூறினேன். அவர்களும் மகிழ்ச்சியாக கணினியின் முன் அமர்ந்தார்கள்.அவர்களில் ஒருத்தி கணினியை உயிர்பித்து குறுந்தகட்டை இயக்கினாள். அது எண்களை எளிய முறையில் சொல்லித்தரும் குறுந்தகடு. சற்று நேரத்தில் கணினியின் திரையில் ஒரு அழகிய குளம் காட்சியாக விரிந்தது. அதில் நிறைய தாமரை பூக்கள் பூக்காமல் மூடியிருந்தன. குளத்தைச்சுற்றி பாதுகாப்பாக மரங்கள் வளர்ந்திருந்தன. புல்தரைப் பளிச்சென்று சுத்தமாக இருந்தது. இந்த அழகிய குளக்கரையைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது.இந்த அழகிய காட்சியைத் தாண்டி படம் நகரவேயில்லை. பல முறை ‘மவுசால்’ கிளிக் செய்தும் பயனில்லை. மாணவர்கள் அனைவரும் என்னை நோக்கியே பார்த்தனர்.நான் சற்றே சிந்தித்தபடியே பூக்காமல் இருந்த தாமரை மொட்டுக்கள் மீது கவனம் செலுத்தி அதை ‘கிளிக்’ செய்தேன்.என்ன ஆச்சரியம், அந்த தாமரை மொட்டு அழகாய் மலர்ந்தது. அது மலரும்போதே அந்த பூவில் எண்கள் தோன்றின. எண்கள் தோன்றும் போதே அந்த எண்களின் சரியான உச்சரிப்பும் உடனே வந்தது.
தாமரை மொட்டுக்களை ‘கிளிக்’ செய்து அந்த பூவுக்குறிய எண்ணின் ஓசையைக் கேட்டவுடன் மாணவ மாணவிகள் பரவசமடைந்து துள்ளிக் குதித்தனர்.எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உடனே ஒவ்வொரு மாணவரையும் அழைத்து மொட்டுக்களைப் பூக்க வைத்தேன். எண்களின் ஓசை இன்பமாய் கேட்டுக்கொண்டே இருந்தது. அப்போது ஒரு மாணவர் ஒரு மொட்டைக் கிளிக் செய்த போது ‘நயன்டி நயன்’ என்ற உச்சரிப்பு சரியாக ஒலித்தது.ஆனால் அடுத்த மாணவர் வந்து முயற்சித்தபோது ‘நயன்டி நயன்’ என்ற உச்சரிப்பு மட்டுமே திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது. அடுத்த மொட்டுக்களை திறக்க முடியாமல் மாணவர்கள் தவித்தனர். நானும் முயற்சி செய்தும் திறக்காததால், திரும்ப திரும்ப கூறும் கணினியை நினைத்து மாணவர்கள் சிரித்தனர். கணினி கிளிப்பிள்ளையாகி விட்டது.மற்ற ஆசிரியர்களை துணைக்கழைத்தும் பயனில்லை.
உடனே எனக்கொரு யோசனைத் தோன்றியது. நமது பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள வீடுகளில் கணினி படித்த மாணவர்கள் நிச்சயம் இருப்பார்கள். அவர்களை சென்று அழைத்து வரச்சொன்னேன். சற்று நேரத்தில் மருத்துவம் பயிலும் ஒரு மாணவரை அழைத்து வந்தனர். அவர் உள்ளே வந்து கணினியைப் பார்த்ததும் நிலமையை புரிந்து கொண்டு உடனே சரி செய்தார். இருந்தாலும் இந்த கணினியை நினைத்து மகிழ்ந்தார். மருத்துவத்தில் இந்த ‘நயன்டி நயன்’ என்ற எண்ணும் உதவுகிறது என்பது தெறியுமா?என்றார். உடனே மாணவர்களையும் ஆசிரியர்களையும் அந்த மருத்துவ மாணவர் அழைத்து பேசலானார். “இந்த எண்ணை ‘டாக்டர் எண்’ என்றே அழைக்கிறோம்.வைரஸ் கிருமிகள் நுரையீரலைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துவதால் நிமோனியா போன்ற நோய்கள் ஏற்படும். இந்த நோய் வந்திருக்கிறதா என்பதை அறிவதற்கு ‘நயன்டி நயன்’(99) என்ற எண்ணின் உச்சரிப்பும் தேவைப்படுகிறது. இந்த எண்ணின் உச்சரிப்பை அதிகப்படுத்தினால் நுரையீரல் பகுதி கடினமானதாக மாறுகிறது. அப்போது ஏற்படும் அதிர்வை“ ஸ்டெதாஸ் கோப்” மூலம் தெளிவாக அறிந்து நோயின் பாதிப்பை கண்டுபிடித்து விடலாம். மிக முக்கியமான இந்த எளிய சோதனைக்கு இந்த எண் உதவுவதை அறிந்து நாம் மகிழ்ச்சியடையலாம்”என்று தனது பேச்சை முடித்தார்.
எண்களைப் பற்றி உச்சரிக்க மட்டும் தெரிந்த மாணவர்கள், இப்படி ஒரு உண்மையை தெரிந்து கொண்டது மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! என்று அந்த மருத்துவ மாணவரை நானும் மாணவர்களும் அனுப்பி வைத்தோம்.
மாணவ மாணவிகளே! எண்களில் ஆரம்பித்து மருத்துவத்தில் முடிந்துவிட்டதா? ‘தொடர்பில்லாதது எதுவுமே இல்லை’ என்று உங்களுக்கு தெரியும்தானே! இது தற்செயலாக நடந்தாலும் அவசியமானதாக மாறிவிட்டதல்லவா? மாணவர்களும் ஆமோதித்து மகிழ்ந்தனர். நானும் மாணவர்களிடமிருந்து விடை பெற்று அடுத்த வகுப்பிற்கு சென்றேன்.
Comments
Post a Comment